கேரள தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் இயற்கை துறைமுகத்துக்கு வெகு அருகிலேயே பூவார் கிராமம் அமைந்திருக்கிறது. இந்த சிறிய கிராமம் பண்டைய காலத்தில் வெட்டுமரம், யானை தந்தம், சந்தனமரம் போன்ற பொருட்களை விற்கும் புகழ்பெற்ற வர்த்தக மையமாக திகழ்ந்து வந்தது.
பூவார் கிராமம் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருவதற்கு மூல முதல் காரணம் பூவார் பீச்தான். இங்கு முதல் முறையாக வரும் பயணிகள் பரபரப்பு மிகுந்த நகர வாழ்க்கையிலிருந்து மாறுபட்டு காட்சியளிக்கும் இந்த கடற்கரையின் பேரமைதியை வெகுவாக விரும்புவார்கள்.
பூவார் கிராமம் அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால் இங்கு வெகு சில வீடுகள் தான் இருக்கின்றன. ஆனால் இரைச்சல், கூச்சல், சந்தடி ஏதுமற்ற தனிமையும், அமைதியும் இந்த கிராமத்தை அற்புத சுற்றுலாத் தலமாக திகழச் செய்து கொண்டிருக்கிறது.
பூவார் கிராமத்தின் உப்பங்கழிகளில் அமைந்திருக்கும் ரிசார்ட்டுகள் மற்றும் குடில்களில் இருந்தவாறு சூரிய உதயத்தையும், அஸ்த்தமனத்தையும் பார்த்து ரசிக்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. அதோடு இந்த உப்பங்கழிகளில் படகுப் பயணம் செய்து நீங்கள் பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.
பூவார் கிராமத்தில் இந்தியாவின் மிகவும் தொன்மை வாய்ந்த இஸ்லாமிய குடியிருப்புகள் பல இருக்கின்றன. இந்த குடியிருப்புகள் 1400 ஆண்டுகள் பழமையானவைகளாக கருதப்படுகின்றன.
இங்கு உள்ள பிரதான மசூதி மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த மாலிக் இப்னே தீனர் என்ற இஸ்லாமிய அறிஞரால் எழுப்பப்பட்டது. அதோடு இந்தியாவில் முகாலய படையெடுப்புக்கு முன்பே இஸ்லாமியத்தை போதித்த பழம்பெரும் பகுதியாக பூவார் கிராமம் பிரபலமாக அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications