கன்வல் சுற்றுலாத்தலத்திலிருந்து 20 கி.மீ தூரத்திலும் சில்வாசாவிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்திலும், இந்த துதினி எனும் நீர் விளையாட்டு பொழுதுபோக்கு வளாகம் அமைந்திருக்கிறது.
தமன்கங்கா ஆற்றில் உருவாகியுள்ள இந்த நீர்த்தேக்கப்பகுதி இயற்கை எழில் நிரம்பிய மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவார மலைகளால் சூழப்பட்டிருப்பது ஒரு தனிச்சிறப்பம்சமாகும்.
அரசாங்க சுற்றுலாத்துறை இந்த பொழுதுபோக்கு வளாகத்தில் பல்வேறு வசதிகளை அளித்துவருகிறது. இங்கு துடுப்புப்படகுகள், கயாக் படகுகள், வாட்டர் ஸ்கூட்டர், கேனோ படகுகள், அதிவேக மோட்டார் படகுகள், காஷ்மீர் தால் ஏரியில் இருப்பவை போன்ற ஷிகாரா எனும் படகு வீடுகள் மற்றும் பம்பர் படகுகள் போன்ற பலவகையான நீர்ச்சவாரி வசதிகள் இங்கு கிடைக்கின்றன.
இரவு நேரத்தில் தங்க விரும்பும் பயணிகளுக்காக காட்டேஜ் வசதிகளும் இங்கு செய்யப்பட்டிருக்கின்றன. இங்குள்ள உணவகங்களில் உள்ளூர் உணவுகளையும் பயணிகள் ருசிக்கலாம். இப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களின் நாகரிகம் மற்றும் வாழ்க்கை முறை குறித்த நேரடி அறிமுகத்தையும் சுற்றுலாப்பயணிகள் பெறலாம்.
இவை மட்டுமல்லாமல் சாகசப்பிரியர்களுக்கு பிடித்தமான வகையில் இங்கு பல்வேறு மலையேற்றப்பாதைகளும் அடர்ந்த காட்டுப்பகுதிகளின் நடுவே அமைந்துள்ளன. மலையேறிகள் தங்களது கூடாரங்களை ஆற்றோரத்தில் அமைத்துக்கொள்ளவும் அனுமதியளிக்கப்படுகிறது.
துதினி நீர்த்தேக்க ஸ்தலத்தை நோக்கி வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் பயணம் செய்யும் அனுபவமும் பயணிகளுக்கு ஒரு வித்தியாசமான பரவச உற்சாகத்தை அளிக்கிறது.



Click it and Unblock the Notifications