சென்னை நகரம் என்பது வெறும் உயரமான கட்டடங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி, கடற்கரை அலைகள் என்பது மட்டும் அல்ல. அதன் உள்ளடக்கங்களில் வரலாற்று மெருகூட்டிய நினைவுச் சின்னங்கள், இயற்கையின் வியப்பூட்டும் அழகு, கலையின் மனம் கொள்ளும் அரங்குகள் போன்றவை அடங்கியுள்ளன. சென்னையில் சுற்றி பார்க்க வருபவர்கள் பீச், தலைவர்கள் சமாதி, மால், கோவில் இப்படி தான் செல்வார்கள். ஆனால் சென்னையில் பலரும் அறியாத முத்து போன்ற, பலரும் அறியாத இடங்கள் பல உள்ளன. இந்த இடங்கள் பற்றி நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.

புலிக்காட் ஏரி
சென்னையின் வடக்கே அமைந்துள்ளது புலிக்காட் ஏரி. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உவர்நீர் ஏரியாக திகழ்கிறது. இங்கு அழகிய வெளிநாட்டு பறவைகள், குறிப்பாக ரோஜா நிறத்திலிருக்கும் ஃபிளாமிங்கோக்கள் கூட்டத்தை கண்டு மகிழலாம். பறவைகள் ஆராய்ச்சியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், மற்றும் அமைதியை விரும்பும் பயணிகளுக்கு இது ஒரு சிறந்த இடமாகும்.
தியாசபிக்கல் சங்கம்
ஆன்மீகம், ஞானம், அமைதி ஆகியவற்றைக் கொடையாக வழங்கும் தியோசபிக்கல் சங்கம், அடையாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 1875-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இச்சங்கம், உலகம் முழுவதும் உள்ள ஆன்மீக ஆர்வலர்களை ஈர்க்கிறது. 450 வருடங்கள் பழமையான ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து அமைதியான உணர்வைப் பெறலாம். மேலும், இங்கு நூலகம், யோகா மற்றும் தியான வகுப்புகள் போன்றவை உள்ளன.
உடைந்த பாலம்
சென்னை திருவான்மியூர் அருகே உள்ள 'உடைந்த பாலம்' (Broken Bridge) ஒரு காலத்தில் மீன்பிடி தொழிலாளர்களுக்கு பயன்பட்டதாக இருந்தது. இன்று இது வெறும் ஒரு அழகிய மௌனத்தின் வடிவமாக இருக்கிறது. திரைப்படக் கலைஞர்களுக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும் இதுவொரு சிறந்த இடமாக திகழ்கிறது. மேலும், மாலையில் கடற்கரை காற்றில் பசுமை நிறைந்த அனுபவத்தை தரக்கூடிய இடமாக இது திகழ்கிறது.

மெட்ராஸ் போர் நினைவிட வளாகம்
இங்கிலாந்து கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ள மெட்ராஸ் போர் நினைவிட வளாகம், இரண்டாம் உலகப் போர் வீரர்களின் நினைவாக கட்டப்பட்டது. வெள்ளை நிற கல்லால் செய்யப்பட்ட நினைவுச் சின்னங்கள், அங்கு நேரில் சென்று காணும்போது மனதை உலுக்குகின்றன. இது வரலாற்று ஆர்வலர்களுக்கும் தேசிய உணர்வால் நிரம்பியவர்களுக்கும் ஒரு புனித தலமாக விளங்குகிறது.
ராயபுரம் மீன்பிடி துறைமுகம்
சென்னையின் பழமைவாய்ந்த மீன்பிடி துறைமுகமான ராயபுரம் மீன்பிடி துறைமுகம், பல நூற்றாண்டுகளாக கடலோர மீனவர்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. தினமும் விடியற்காலையில் இங்கு கடலிலிருந்து புத்துணர்வுடன் மீனவர்கள் மீன்களை பிடித்து வருவதை காணலாம். இது மீன் மார்க்கெட் பரபரப்பை அனுபவிக்க விரும்புவோருக்கு சிறந்த இடமாகும். இங்கு கிடைக்கும் புதிய மற்றும் பல்வேறு வகையான மீன்கள் உணவுப்பிரியர்களுக்கு தனித்துவமான சுவைகளை வழங்குகின்றன.
தடா அருவி
சென்னையின் அருகே, ஏறத்தாழ 95 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தடா அருவி (Tada Falls), குன்றுகளின் மத்தியில் இயற்கையின் அரிய பொக்கிஷமாக திகழ்கிறது. இதன் நீர்த்துளிகள் மனதைச் சமாதானப்படுத்தும் ஒலியுடன் விழுவதால், நீர்ச்செயல்களில் ஈடுபட விரும்பும் பயணிகளுக்கும் ஒரு சிறந்த அனுபவமாக அமைகிறது. மேலும், trekking மற்றும் camping செய்ய விரும்புவோருக்கு மிகவும் சிறந்த இடமாகும்.
சோழமண்டலக் கலைஞர்கள் கிராமம்
1966-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சோழமண்டலக் கலைஞர்கள் கிராமம், நவீன மற்றும் பாரம்பரிய ஓவியங்கள், சிற்பங்கள், மற்றும் கலை ஆர்வலர்களுக்காக உருவாக்கப்பட்ட கலைக் களஞ்சியம். இது இந்தியாவின் மிகப்பெரிய கலைஞர்கள் குடியிருப்பாகவும், ஓவிய கல்லூரி மாணவர்களுக்கான கலையின் அடையாளமாகவும் திகழ்கிறது. இங்கு பல்வேறு கலைத் திருவிழாக்கள், கண்காட்சிகள், மற்றும் கலைத்தொகுப்புகள் நடைபெறுவதால், இது கலை ஆர்வலர்களுக்கு ஒரு உற்சாகமான இடமாகும்.



Click it and Unblock the Notifications






