16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோட்டை, அதன் ஈர்க்கக்கூடிய கிரானைட் சுவர்கள், அகலமான அகழி மற்றும் வலுவான கட்டிடக்கலை ஆகியவற்றிற்காக புகழ்பெற்றது. எம்மதமும் சம்மதம் என்பதற்கு உதாரணமாக இந்த கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வரர் கோவில், மசூதி மற்றும் செயின்ட் ஜான்ஸ் தேவாலயம் போன்ற குறிப்பிடத்தக்க இடங்களைக் கொண்டுள்ளது. வரலாறும், பாரம்பரியமும் நிறைந்த இந்த கோட்டை சென்னையிலிருந்து 3 மணி நேர பயண தூரத்தில் உள்ளது! தூரம் சற்று அதிகம் தான், ஆனால் நீங்களும் உங்கள் வீட்டு பிள்ளைகளும் அறிந்து கொள்வதற்கும் ஆராய்வதற்கும் இந்த இடம் ஏற்றது!
சென்னையிலிருந்து ஒரு நாள் ட்ரிப்
ஆம்! மக்களே! நீங்கள் யூகித்து விட்டீர்களா? நான் கூறுவது சென்னையிலிருந்து 120 கிமீ தொலைவில் அமைந்துள்ள வேலூர் கோட்டையைப் பற்றி தான்! வேலூரில் அமைந்துள்ள ஒரு அற்புதமான வரலாற்று நினைவுச்சின்னமான வேலூர் கோட்டை, தமிழ்நாட்டின் செழுமையான கடந்த காலத்தைப் பார்க்க விரும்பும் சென்னையைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். சென்னையிலிருந்து சில மணிநேர பயணத்தில், நன்கு பாதுகாக்கப்பட்ட இந்த கோட்டையானது வரலாறு, கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றின் சரியான கலவையை வழங்குகிறது, இது ஒரு வெகுமதியளிக்கும் நாள் பயண இடமாக அமைகிறது.

16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை
அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்ற வேலூர் கோட்டை 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியாளர் சதாசிவ ராயரின் கீழ் இருந்த சன்ன பொம்மி நாயக்க மற்றும் திம்மா ரெட்டி நாயக்கர்களால் கட்டப்பட்டது. இந்த கிரானைட் கோட்டை தென்னிந்தியாவின் இராணுவ கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்தியாவின் கோட்டைகளிலே தனித்து நிற்கிறது. இந்த கோட்டை பல தாக்குதல்களை எதிர்கொண்டு இருந்தாலும் இன்றளவும் இமியளவு கூட அசையாமல் கம்பீரமாக நிற்கிறது.
பல ஆட்சியாளர்களைக் கண்ட கோட்டை
நாயக்கர்களால் கட்டப்பட்ட இந்த கோட்டை 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிஜாப்பூர் சுல்தான்களால் கைப்பற்றப்பட்டது. பின்னர் அவரிகளிடம் இருந்து மராட்டியர்கள் கோட்டையை கைப்பற்றினர். 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டெல்லியின் தாவுத் கான் கோட்டையை கைப்பற்றினார். பின்னர் கர்நாடக நவாப்கள் கோட்டையை ஆண்டனர். இறுதியாக பிரிட்டிஷ் அரசு கோட்டையை சுல்தான் குடும்பத்தினர் மற்றும் இலங்கையின் கண்டியரசின் கடைசி தமிழ் மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனும் சிறை வைக்கப்பட்டனர். பிரிட்டிஷாருக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி சிப்பாய்கலகம் இக்கோட்டையிலேயே 1806 ஆம் ஆண்டில் அரங்கேறியது.
இராணுவ கட்டிடக்கலைக்கு சான்றாக நிற்கும் கோட்டை
முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்ட இந்த கோட்டை இந்தியாவின் சுதந்திர வரலாற்றுகளை எடுத்துக் கூறும் வகையில் இன்றளவும் கம்பீரமாக நிற்கிறது. பெரிய இரட்டைச் சுவர்கள், எதிரிகளிடம் இருந்து தப்பிக்க அகழி, மிகவும் உறுதியான கட்டமைப்பு ஆகியவை இந்த கோட்டையின் இராணுவ கட்டிடக்கலையை பிரதிபலிக்கிறது. இவ்வளவு பெரிய கோட்டைக் ஒரே ஒரு நுழைவாயில் தானாம்! ஏன்? என்று யோசிக்கிறீர்களா? பாதுகாப்பிற்காகத்தான்! அந்த காலத்தில் இந்த அகழிக்குள் 10,000 முதலைகள் விடப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
எம்மதமும் சம்மதம் எனப் போற்றும் வேலூர் கோட்டை
கோட்டையில் ஒரு கோயில், ஒரு மசூதி, ஒரு தேவாலயம், புகழ்பெற்ற வேலூர் கிறிஸ்தவ மருத்துவமனை ஆகியவை உள்ளன. கோட்டையின் உள்ளே அமைந்துள்ள ஜலகண்டீஸ்வரர் கோயில் சிற்பக் கலைக்கு பெயர் பெற்றது. கோட்டைக்குள் இருக்கும் மசூதி கடந்த ஆற்காடு நவாப் காலத்தில் கட்டப்பட்டது. திப்புசுல்தான் வாரிசுகள், குடும்பத்தார், உறவினர்கள் கோட்டைக்குள் தொழுகை நடத்த மசூதி கட்டப்பட்டது. இரண்டாயிரம் பேர் அமர்ந்து ஒரே நேரத்தில் தொழுகை நடத்தலாம். கோட்டையின் பல பகுதிகள் இன்று அரசு அலுவலகங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இங்கே நாம் என்ன செய்யலாம்
· கோட்டை வளாகத்திற்குள் ஒரு பெரிய அருங்காட்சியகம் உள்ளது. இதில் திப்புசுல்தான் வாரிசுகள் பயன்படுத்திய நாணயங்கள், கிண்ணங்கள், வாள்கள், வட ஆற்காடு மாவட்டத்தில் கிடைத்த தொல்பொருட்கள், ஓடுகள், மண்பானைகள், கல்வெட்டுகள், செப்பு தகடுகள், கத்திகள், பீங்கன் கிண்ணங்கள் போன்றவை காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
· தமிழக சுற்றுலாத்துறையும் தொல்பொருள் ஆராய்ச்சித்துறையும் சேர்ந்து அகழியில் படகு சவாரியை அறிமுகப்படுத்தியது. தினமும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை பயணிகள் படகில் அகழியில் வலம் வரலாம். அது மட்டுமின்றி, பாலாற்றங்கரையில் அமைந்துள்ள முத்து மண்டபம், சிப்பாய் புரட்சியின் போது இறந்த ஒரு தளபதியின் கல்லறை, ஹைதர் மஹால், திப்பு மஹால், பேகம் மஹால், மிட்டாய் மஹால் மற்றும் பாதுஷா மஹால் ஆகிய மஹால்கள் ஆகியவற்றையும் நீங்கள் பார்வையிடலாம்.
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பிற விஷயங்கள்
· கோட்டை நேரம்: காலை 8 முதல் மாலை 6 மணி
· அருங்காட்சியக நேரம்: பொது விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து நாட்களிலும் காலை 9 - 12.30 மற்றும் பிற்பகல் 2 - மாலை 5 வரை திறந்து இருக்கும்
· நுழைவு: ஒரு நபருக்கு ரூ. 5/-
இது சென்னைக்கு அருகிலேயே இருப்பதால் அதிக சுற்றுலாப்பயணிகள் வார இறுதியில் இங்கு செல்கின்றனர். நீங்களும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த வரலாற்று நினைவுச்சின்னத்தை பார்த்து ரசித்துவிட்டு வாருங்களேன்!



Click it and Unblock the Notifications






