ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள சோலன் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத்தலமே இந்த அர்கீ . மாவட்டத்திலேயே மிகச்சிறிய நகரமான இது சுற்றுலாப்பயணிகளுக்கு சில மயக்கமூட்டும் விசேட அம்சங்களை அளிக்க காத்திருக்கிறது. வரலாற்று ரீதியாக இந்த நகரம் புரதான கால பாகல் மலை ராஜ்ஜியத்தின் தலைநகரமாக திகழ்ந்திருக்கிறது. இந்த ராஜ்ஜியம் 1660-65ம் ஆண்டுகளில் ராஜா அஜய் தேவ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
Cover PC: Harvinder Chandigarh
சிம்லா நகரத்திலிருந்து 52 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நகரத்தில் அக்கால ராஜ மஹோன்னதத்தின் சாட்சிகளாக பல சின்னங்கள் வீற்றிருக்கின்றன. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் யாத்ரீகர்களை கவர்ந்து இழுக்கும் பல அற்புதமான கோயில்கள் இந்த அர்கீ நகரத்தில் அமைந்துள்ளன. லுட்டுரு மஹாதேவ் கோயில், துர்க்கா கோயில் மற்றும் ஷாக்னி மஹாதேவ் கோயில் ஆகியவை இவற்றில் முக்கியமானவை. அர்கீயிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள லுட்டுரு மஹாதேவ் கோயில் சிவபெருமானுக்காக கட்டப்பட்டிருக்கிறது. முக்கியமான சக்தி பீடமாக கருதப்படும் இக்கோயில் 1621ம் ஆண்டில் பாகல் மன்னரால் கட்டப்பட்டிருக்கிறது. மேலும், இங்கு ஷிகாரா கோயில்கலை பாணியில் கட்டப்பட்டிருக்கும் துர்க்கா கோயிலையும் பயணிகள் தரிசித்து மகிழலாம். மற்றொரு கோயிலான ஷாக்னி மஹாதேவ் கோயிலானது இப்பகுதியின் இயற்கை அழகுக்காட்சிகளை தரிசிக்க ஏற்றவாறு உயரமான இடத்தில் வீற்றுள்ளது.

அர்கீ கோட்டை மற்றும் அர்கீ அரண்மனை என்று அழைக்கப்படும் முக்கியமான வரலாற்றுச்சின்னங்கள் பாகல் ராஜ வம்சத்தின் பாரம்பரிய பெருமையின் சான்றாக இங்கு அமைந்துள்ளன. ராணா பிருத்வி சிங் மன்னரால் 1695 மற்றும் 1700 ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டிருக்கும் அர்கீ கோட்டை ராஜபுதன மற்றும் முகலாய கட்டிடக்கலை அம்சங்களை கலந்து கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோட்டையில் பஹாரி பாணியில் வரையப்பட்டிருக்கு சுவர் ஓவியங்களை பார்த்து ரசிக்கலாம். இந்த ஓவியங்கள் மலைப்பகுதி மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன.
அர்கீ அரண்மனையானது 18ம் நூற்றாண்டில் ராணா பிருத்வி சிங் மன்னரால் கட்டப்பட்டிருக்கிறது இமயமலையின் மேற்குப்பகுதியில் வீற்றுள்ள இந்த அரண்மனை 'கலம்' எனப்படும் கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கிறது. மேலும், பாக்கலாக், திவான் இ காஸ், குனிஹார் மற்றும் லட்சுமிநாராயண் கோயில் போன்றவையும் அர்கீ நகரத்தில் பார்க்க வேண்டிய அம்சங்களாக அமைந்துள்ளன. அர்கீ நகரத்துக்கு பயணிகள் விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். இதமான இனிமையான பருவநிலை நிலவுவதால் வருடத்தின் எந்த பருவத்திலும் இந்த மலைவாசஸ்தலத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications




