இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) மத்தியப் பிரதேசத்தின் பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வரலாற்று மிச்சங்களை கண்டுபிடித்து இருக்கிறது. 1938 இல் முதன்முதலாக ஆய்வு செய்யப்பட்டு வரலாற்று சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இப்போது 85 ஆண்டுகள் கழித்து பல வரலாற்று சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ!
புலிகள் காப்பகக்திற்குள் புதைந்து கிடக்கின்ற வரலாறு
இந்த ஆண்டு மே 20 முதல் ஜூன் 26 வரை ASI யின் புதிதாக உருவாக்கப்பட்ட ஜபல்பூர் வட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் சிவகாந்த் பாஜ்பாய் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், ஆய்வாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வனக் காவலர்கள் உட்பட ஒரு டஜன் குழு உறுப்பினர்களால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஏற்கனவே, கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 5 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டங்களை சார்ந்த குகைகளும், வரலாற்று மிச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இப்போது புதிதாக கோவில்களும், குகைளும், சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காலம் கடந்த வரலற்றுச் சான்றுகள்
பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் மொத்தமாக 26 குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, கண்டுபிடிக்கப்பட்ட 26 குகைகளும் புத்த மதத்தின் மகாயான பிரிவினருடன் தொடர்புடையவை என்று ASI கூறியுள்ளது. இவை யாவும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான ஔரங்காபாத்தில் உள்ள அஜந்தா குகைகளின் அதே காலகட்டத்தைச் சேர்ந்தவை.
குகைகள் தவிர, 26 கோயில்கள், இரண்டு மடங்கள், இரண்டு ஸ்தூபிகள், 46 சிலைகள் மற்றும் சிற்பங்கள், 26 துண்டுகள் மற்றும் 19 நீர்நிலைகளின் எச்சங்களையும் கண்டுபிடித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிபி 2-3 நூற்றாண்டைச் சேர்ந்த மினியேச்சர் ஸ்தூபி செதுக்கலைக் கொண்ட புத்த தூண் துண்டு மற்றும் கிபி 2-5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 24 பிராமி கல்வெட்டுகளையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ASI புத்த கட்டமைப்புகள் மற்றும் மதுரா, கௌசாம்பி, வெஜபாரதா மற்றும் சபதநாயரிகா போன்ற நகரங்களின் பெயர்களைக் கொண்ட கல்வெட்டுகளையும் கண்டறிந்துள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் மிச்சங்கள், 'பாகேல்கண்ட் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை' சேர்த்துள்ளதாக ASI தெரிவித்துள்ளது. முகலாயர் காலத்து மற்றும் ஜான்பூர் சுல்தானகத்தின் ஷார்கி வம்சத்தைச் சேர்ந்த நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பாந்தவ்கர் புலிகள் சரணாலயம்
பாந்தவ்கர் 1968 ஆம் ஆண்டு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு 1993 ஆம் ஆண்டு புலிகள் காப்பகமாக மாறியது. 1938 ஆம் ஆண்டு ASI தொல்பொருள் ஆய்வாளர் என்.பி சக்ரவர்த்தியின் தலைமையில் இப்பகுதியில் ஆய்வுகள் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டது, இப்போது 85 வருடங்கள் கழித்து மேற்கொள்ளப்பட்டதாக ASI தெரிவித்துள்ளது.
இப்போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்று மிச்சங்கள், இந்த புலிகள் காப்பகத்தை இன்னும் பிரபலபடுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும். ஆகவே, நீங்கள் புலிகள் மற்றும் மற்ற வன விலங்குகளைக் கண்டு களிப்பதோடு இந்த வரலாற்று புதையல்களையும் இனி ஆராயலாம்.