கனவுகள் கனவாய் மட்டுமே இருந்தால் அதற்க்கு மதிப்பும் இல்லை அதனால் எந்த பயனும் இல்லை. கனவுகளை நோக்கி முன்னேற நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கடவுளின் அருகில் நாம் வந்தது போல உணர வைக்கும். நம்மில் பலருக்கு நல்லதொரு பயணம் செல்ல வேண்டும் என்பது பெருங்கனவு. வாருங்கள் முடிவற்ற சாலைகள கொண்ட இவ்வுலகில் சிறகடித்து பறப்போம், நம் கனவுகளுக்கு வானமே எல்லை.
பாண்டிச்சேரி, இந்த நகரத்தை பார்க்கும் போதெல்லாம் பிரிட்டிஷ்க்காரர்களுக்கு பதிலாக பிரஞ்சு ஆளுகைக்குள் நாம் இருந்திருந்தால் நன்றாக இருக்குமோ என நினைக்க வைக்கும் அளவு இன்றும் பழமை மற்றும் புதுமையின் ரசனையான கலவையாக திகழ்கிறது. நேர்த்தியான வீதிகள், பிரஞ்சுகால கட்டிடங்கள், சுத்தமான சுற்றுலாதலங்கள் என கூத்தடித்து கொண்டாடவும், அமைதியாக தனிமையை ரசித்துணர விரும்புகிறவர்களுக்கும் பாண்டிச்சேரி அற்புதமான ஓரிடம். சரி, வாருங்கள் பெங்களுருவில் இருந்து கிளம்பி சென்னை வழியாக ECR ரோட்டில் பயணம் செய்து பாண்டிச்சேரிக்கு நல்ல ஒரு சுற்றுலா சென்று வரலாம்.
திங்கட்கிழமை மெகா சலுகை! விமான டிக்கெட்டுகளில் ரூ.2500 தள்ளுபடி பெற இங்கே கிளிக்குங்கள்
பயணத்திட்டம்:
பெங்களுருவில் இருந்து கிளம்பி ஓசூர், கிருஷ்ணகிரி, வேலூர், ஸ்ரீபெரம்புதுர் வழியாக சென்னையை அடைந்து அங்கிருந்து ECR ரோட்டில் பயணித்து மாமல்லபுரம் வழியாக பாண்டிச்சேரியை அடையலாம்.
Photo:Ashwin Kumar
பெங்களுரு - வேலூர்:
முதற்கட்டமாக பெங்களுருவில் இருந்து கிளம்பி கர்னாடக - தமிழக எல்லையான ஓசூர் வழியாக கிருஷ்ணகிரியை அடைந்து அங்கிருந்து ஆம்பூர் வழியாக வேலூரை அடையலாம். 210கி.மீ தூரமுள்ள இந்த பயணத்தை முடிக்க குறைந்தது மூன்றரை மணி நேரமாவது ஆகும்.
Photo:Nagesh Kamath
ஆம்பூர் பிரியாணி
இந்த வழியில் வேலுருக்கு முன் உள்ள ஆம்பூரில் கிடைக்கும் பிரியாணி உலகப்புகழ் பெற்றது.
நாம் செல்லும் இந்த சென்னை-பெங்களுரு நெடுஞ்சாலையில் மட்டும் நூற்றுக்கணக்கான ஆம்பூர் பிரியாணிக்கடைகள் உள்ளன அங்கே சுடச்சுட சிக்கன் (அ) மட்டன் பிரியாணியை ருசித்து விட்டு பயணத்தை தொடருங்கள்.
Photo:ShashiBellamkonda
வேலூர்:
சென்னையை அடையும் முன்பாக எங்கேனும் ஒரு சின்ன சுற்றுலா செல்லலாம் என நினைப்பவர்கள் சுற்றிப்பார்க்க நல்ல இடங்கள் உள்ள வேலூரில் கொஞ்ச நேரம் செலவழித்துவிட்டு செல்லலாம். நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த வேலூர் கோட்டை, கோட்டைக்குள் அமைந்திருக்கும் இருக்கும் முக்கிய சிவன் கோயிலான ஜலகண்டேஸ்வரர் கோயில், வேலூர் நகரில் இருந்து 11 கி.மீ தொலைவில் இருக்கும் வேலூர் தங்க கோயில் மற்றும் ஏலகிரி மலை ஆகியவை உள்ளன.
பாராகிளைடிங்:
சாகசப்பிரியர்களுக்கு என்றே பாராசூட் மூலம் குதிக்கும் பாராகிளைடிங் விளையாட்டு வேலூரில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள ஏலகிரி மலையில் இருக்கிறது.
Photo: Len Matthews
வேலூர் - சென்னை:
வேலூரில் சின்ன சுற்றுலா ஒன்றை முடித்து விட்டு NH4இல் அரக்கோணம் வழியாக கிளம்பினால் 133கி.மீ தூரத்தில் இருக்கும் சென்னையை இரண்டரை மணி நேரத்தில் அடைந்து விடலாம். இந்த வழியில் செம்மபரம்பாக்கம் ஏரியை தவிர்த்து பெரிதாக சுற்றிப்பார்க்க இடங்கள் ஏதும் இல்லை.
Photo:Ashok Prabhakaran
சென்னை - பாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலை பயணம்:
கிழக்கு கடற்கரை சாலை பயணத்தை விட அற்புதமான சாலைப்பயணம் இருந்துவிடவே முடியாது. வங்காள விரிகுடாவின் கரையில் போடப்பட்டிருக்கும் இந்த சாலை மனதை சொக்க வைக்கும் காட்சிகளை நமக்கு தரும் இந்த சாலையில் கண்டிப்பாக ஒருமுறையேனும் நாம் பயணம் செய்திட வேண்டும். இந்த ECR ரோடு வழியாக பயணம் செய்தால் மூன்றரை மணி நேரத்தில் பாண்டிச்சேரியை அடைந்துவிட முடியும். இந்த சாலையின் நெடுகே நாம் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உண்டு. வாருங்கள் அவை என்னென இடங்கள் என்பதை தெரிந்துகொள்வோம்.
மாமல்லபுரம்:
கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்று மாமல்லபுரம் கடற்க்கரை கோயில் ஆகும். 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கடற்க்கரை கோயில் கோபுர கலசம் உட்பட அனைத்தும் கல்லால் ஆனதாகும். மேலும் இக்கோயிலின் அருகில் பாறைகளில் குடையப்பட்ட எண்ணற்ற சிற்ப்பங்கள் உள்ளன.
Photo:Amit Rawat
மாமல்லபுரம்:
மகாபாரத கதையை சொல்லும் பஞ்சரத சிற்ப்பங்கள், அர்ஜுனன் தவம் செய்வது போன்று குடையப்பட்ட அர்ச்சுனன் தபசு பாறை சிற்பம், எப்போது விழுந்துவிடுமோ என நினைக்கவைக்கும் கிருஷ்ணனின் வெண்ணை உருண்டைப்பாறை போன்றவை இங்கு சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கின்றன. காலம் விட்டு சென்ற அதிசயங்களை பார்த்து வியக்க நல்லதொரு இடம் இந்த மாமல்லபுரம் கோயில் சிற்ப்பங்கள் ஆகும்.
Photo:Mahesh Balasubramanian
கோவளம் கடற்கரை:
சென்னையில் அதிகாலை வாக்கிங் செல்பவர்களுக்கு தெரியும் களித்து உண்டதன் கழிவையெல்லாம் மனிதன் இறக்கிவைக்கும் கடற்கரை எத்தனை அசுத்தமானது என்று. திறந்த வெளி கழிப்பிடமாகவும், குப்பை மேடாகவும் காட்சி தரும் சென்னையின் கடற்கரையை பார்த்து பழகியவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியை தரவல்லது இந்த கோவளம் கடற்க்கரை. சுத்தமான கடற்கரையில், அலைகள் ஆர்ப்பரிக்கும் கடலை ரசித்தபடி கல்லாற நடக்கலாம். மேலும் இங்குள்ள பாய்மர படகில் கொஞ்ச தூரம் கடலுக்கும் சென்று மிதவுடைகள் (life jacket) அணிந்தபடி கடலில் நீச்சலடிக்கலாம். ஆயுத எழுத்து படத்தில் "நீ யாரோ,நான் யாரோ" பாடலில் இக்கட்சி வரும்.
Photo: Sarath Kuchi
முட்டுக்காடு படகு சவாரி:
ECR ரோட்டில் அமைந்திருக்கும் மற்றொரு அற்புதமான பொழுதுபோக்கு இடம் முட்டுக்காடு படகு சவாரி. 'Backwater' எனப்படும் அலைகள் எழாத கடலைக்கொண்ட இங்கு பல்வேறு வகையான படகுகள் சவாரிகள், கடல் விளையாட்டுகள் மற்றும் கடலில் செல்லும் ஸ்கூட்டர் போன்றவை உள்ளன. சூரியன் மறையும் மாலை நேரத்தில் சூரிய கதிர்கள் கடலை தங்கக்குளம் போல தோன்ற வைக்கும் நேரம் படகு சவாரி செய்ய ஏற்றது . விதவிதமான கடல் உணவுகள் கிடைக்கும் உணவகங்களும் இங்கு நிறையவே உள்ளன.
Photo: Simply CV
பாண்டிச்சேரி:
'இந்தியாவின் ஐரோப்பா' என செல்லமாக அழைக்கப்படும் பாண்டிச்சேரி வார விடுமுறையை கொண்டாட இந்தியாவில் இருக்கும் சிறந்த இடங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. 1954ஆம் ஆண்டு பிரஞ்சு காலநியகத்திடம் இருந்து சுதந்திரம்பெற்றதில் இருந்து இன்று வரை தன் தொன்மையான அடையாளத்தை இழந்துவிடாமல் புதுமையையும் கொண்டு வளர்ந்து வரும் இந்த அழகிய நகரத்தில் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உண்டு. அவற்றை எல்லாம் விட இங்கே சொம பானத்தின் விலை மிக குறைவு என்பதே பலரும் இங்கே வர முக்கிய காரணம். வாருங்கள், பாண்டிச்சேரியில் இருக்கும் சுற்றுலாத்தளங்களை பற்றி அறிந்துகொள்வோம்.
Photo:Jean-Pierre Dalbéra
ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமம்:
யோகா மற்றும் நவீன அறிவியலை கொண்டு ஆன்மீகத்தை போதிக்கும் இந்த ஆஸ்ரமம் பாண்டிச்சேரியின் முக்கியமான இடங்களுள் ஒன்று. இந்திய சுதந்திர போராட்ட வீரரான அரவிந்தரால் 1926ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஆஸ்ரமம் அவருக்கு பின் அவருடைய சீடரான 'அன்னையால்' தொடர்ந்து நடத்தப்பட்டது. அன்னையின் யோசனையில் உருவானதுதான் நிற, மத, சதி பேதங்களை கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க உலகின் மாதிரி நகரமான 'ஆரோவில்லே' ஆகும்.
Photo:balaji shankar venkatachari
ஆரோவில்லே:
சர்வ மதத்தினரும், நாட்டினரும் தங்கள் வேற்றுமையை கடந்து ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ள ஒற்றுமையாக வசிக்க அரவிந்தரின் சிஷ்யையான அன்னையால் 1968 ஆம் ஆண்டு துவங்கிவைக்கப்பட்டது தான் இந்த ஆரோவில்லே ஆகும். இந்த நகரத்தில் நடுவில் இருக்கும் மாத்திரிமந்திர் ஒரு கட்டிடக்கலை அதிசயமாகும். தங்க உருண்டை போல அமைந்திருக்கும் இதனை கட்டி முடிக்க 37 ஆண்டுகள் ஆகிருக்கின்றன. இதனுள் தியான கூடம் ஒன்று அமைந்திருக்கிறது. முன் அனுமதி பெற்றிருந்தால் பொதுமக்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இதனுள் அனுமதிக்கப்படுகின்றனர்.
Photo:Devaiah PA
பாண்டிச்சேரி:
இவைகள் தவிர பாண்டிச்சேரியில் ஏராளமான நினைவு சிலைகளும், நினைவு மண்டபங்களும், அருங்காட்சியகங்களும் உள்ளன. நன்றாக பராமரிக்கப்படும் பாண்டிச்சேரி கடற்க்கரை குழந்தைகளுடன் செல்ல ஏற்ற இடமாகும். இங்கு குறிப்பிடத்தகுந்த அளவில் பிரஞ்சு நாட்டு உணவகங்கள் இருக்கின்றன அவற்றில் நம் நாட்டு உணவுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட பிரஞ்சு உணவுகளை சுவைத்து மகிழலாம்.
Photo:theintlkitchen
பாண்டிச்சேரி - பெங்களுரு:
பாண்டிச்சேரி பயணத்தை முடித்து விட்டு விழுப்புரம், செங்கம் வழியாக கிருஷ்ணகிரிகை அடைந்து அங்கிருந்து பெங்களுருவை சுலபமாக அடையலாம். 311 கி.மீ தூரம் உள்ள இப்பயணத்தை துவங்கினால் 7 மணிநேரத்தில் பெங்களுருவை அடையலாம். பெங்களுருவில் இருந்து காரில் நல்லதொரு சுற்றுலா செல்ல நினைப்பவர்களுக்கு மேற்சொன்ன பயணத்தை விட சிறந்த தேர்வு இருக்க முடியாது.
Photo:Motographer