பெங்களூர் மாநகரம் ஒரு காலத்தில் ஏரிகளின் நகரம் என்று புகழோடு அறியப்பட்டது. 1960-ஆம் ஆண்டு பெங்களூர் நகரைச் சுற்றி மொத்தம் 280 ஏரிகள் அமைந்திருந்தன.
அதைத்தொடர்ந்து 30 ஆண்டுகளில் சடாலென குறைந்து 80 ஏரிகள் என ஆனது. அதுவே இப்போது பரிதாபகரமாக வெறும் 17 ஏரிகளே பெங்களூர் சுற்றுவட்டாரப் பகுதியில் அமைந்துள்ளன.
பெங்களூரிலிருந்த முக்கால்வாசி ஏரிகள் பேருந்து நிலையங்களாகவும், கோல்ஃப் மைதானங்களாகவும் இன்று மாறிப்பொய்விட்டன.
இதன் காரணமாக பெங்களூர் ஏரிகளை நோக்கி வந்துகொண்டிருந்த பறவைகளின் வரத்தும் படிப்படியாக குறையத்தொடங்கிவிட்டன.
தற்போது பறவைகள் சீசன் என்பதால் பெங்களூரின் மிஞ்சியுள்ள அழகிய ஏரிகளில் வண்ண வண்ண பறவைகளின் கூட்டம் காணப்படுகிறது.
எனவே பெங்களூர் பகுதியில் வசிப்பவர்கள் குடும்பம் சகிதமாக வணிக வளாகங்களையோ, திரையரங்குகளையோ தேடிப் போகாமல் இந்த ஏரிகளுக்கு சென்று வாருங்கள்.
இங்குமங்கும் கொஞ்சி விளையாடிக்கொண்டிருக்கும் பறவைகள் உங்கள் மனசை லேசாக்கி மகழ்ச்சி போங்க செய்துவிடும்!

அலசூர் ஏரி
பெங்களூர் மாநகரத்தை நிர்மாணித்த கெம்பெ கௌடா அவர்களின் காலத்திலிருந்து அல்சூர் ஏரி பெங்களூர் நகரில் இருந்து வருகிறது. இந்த ஏரி பழைய மதராஸ் சாலையில் M.G ரோட்டின் கிழக்கு முனையில் அலசூர் பகுதியில் அமைந்துள்ளது. அலசூரின் மக்கத்தொகையில் 89 % பேர் தமிழர்கள் ஆவர். இவர்கள் 1950-களில் கோலார் தங்க வயல் மூடப்பட்டபிறகு அங்கிருந்து பெங்களூருக்கு குடிபெயர்ந்த்வர்கள். அதுமட்டுமல்லாமல் நூற்றாண்டுகள் பழமையான "பெங்களூர் தமிழ் சங்கம்" அலசூரில் தான் இருக்கிறது.

சாங்க்கி ஏரி
பெங்களூரின் மேற்குப் பகுதியில் மல்லேசுவரம், சதாசிவ நகர் பகுதிகளை ஒட்டி 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது சாங்க்கி ஏரி. மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த ஏரியின் அதிகபட்ச அகலம் 800 மீட்டர்கள் ஆகும். இந்த ஏரி 1882-ஆம் ஆண்டு மெட்ராஸ் சாப்பர்ஸ் எனப்படும் படைப்பிரிவினை சேர்ந்த ரிச்சர்டு ஐரம் சாங்க்கி என்பவரால் நகரின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் பெயராலேயே இந்த ஏரி அழைக்கப்படுகிறது. 2004-ஆம் ஆண்டு ஏரியின் இடத்தை ஆக்கிரமித்து சிலர் அடுக்குமாடி குடியிருப்பை கட்ட முயன்றனர். ஆனால் நீதிமன்றம் தலையிட்டு அதை தடைசெய்தது. தற்போது சாங்க்கி ஏரி ஒரு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளதால் புகழ்பெற்ற பிக்னிக் ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது.

மடிவாலா ஏரி
தமிழில் மடவாளம் என்று அழைக்கப்படும் இந்த ஏரி மேற்கத்திய தாக்கத்தால் மடிவாலா ஏரி என அறியப்படுகிறது. பெங்களூரின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாக கருதப்படும் மடிவாலா ஏரி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கூழைக்கடா உள்ளிட்ட ஏராளமான புலம்பெயர் பறவைகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. இந்த ஏரி அமைந்துள்ள மடிவாலா பகுதி பெங்களூரின் தாம்பரம் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது.

ஹெப்பால் ஏரி
பெங்களூர் நகரை நிர்மாணித்த கெம்பெ கௌடா கட்டிய மூன்று ஏரிகளில் ஒன்றாக அறியப்படும் ஹெப்பால் ஏரி 1537-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த ஏரி கழிவுகளால் மாசடைந்து இருந்ததால் இது இந்திய-நார்வே சூழலியல் திட்டம் மூலம் 1998-ஆம் ஆண்டு 2.7 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. இங்கு தூர்வாரப்பட்ட மண்ணைக் கொண்டு இரு சிறு தீவுகள் உருவாக்கப்பட்டன. இங்கு காணப்படும் தாவரங்கள் பறவைகள் தங்குவதற்கு ஏதுவாக உள்ளன. எனவே இந்த ஏரிக்கு வாத்துகள், கூழைக்கடா, அரிவாள் மூக்கன் போன்ற நீர்ப் பறவைகள் ஏராளம் வருகின்றன.

லால் பாக் ஏரி
பெங்களூரின் மிகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான லால் பாக் தாவரவியல் பூங்காவில் லால் பாக் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி 30 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்து கிடக்கிறது. இவ்வேரி சிக்ககரே (சிறிய ஏரி), தொட்டகரே (பெரிய ஏரி) என்று இரு பிரிவுகளாக உள்ளது. அதோடு ஏரியின் மத்தியில் சிறிய தீவுப்பகுதி ஒன்றும் அமையப்பெற்றுள்ளது. மேலும் லால் பாக் ஏரியில் கூடியவிரைவில் அழகிய ஆர்க்கிட் மலர்களின் தோட்டம் ஒன்றை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது.

ஹெசரகட்டா ஏரி
ஹெசரகட்டா ஏரி பெங்களூருக்கு வடமேற்காக 18 கிலோமீட்டர் தொலைவில் 1894-ஆம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியாகும். இது அர்க்காவதி ஆற்றின் குறுக்கே பெங்களூர் மக்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி வளமின்றி வறட்சியாக காணப்படும் காலங்களில் கூட இங்கு எண்ணற்ற பறவைகள் கூட்டத்தை பார்க்கலாம். அவற்றில் குண்டுக் கரிச்சான், சின்ன வெள்ளைக்கொக்கு, செம்பருந்து போன்ற பறவைகள் குறிப்பிடத்தக்கவை. இங்கு 29 இனங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பறவைகள் வந்துசெல்வதாக ஆவணப்பதிவு ஒன்று குறிப்பிடுகிறது.

பெளந்தூர் ஏரி
37,000 ஏக்கர் பரப்பளவில் சமுத்திரம் போல் பரந்துவிரிந்து கிடக்கும் பெளந்தூர் ஏரி பெங்களூரின் மிகப்பெரிய ஏரியாக கருதப்படுகிறது. இங்கு நீண்டவாள் சிறுகிளி, மரப்புறா போன்ற பறவைகளும், ராஜநாகம், இராட்சச பல்லி உள்ளிட்ட பயமுறுத்தும் ஊர்வன வகைகளும் காணப்படுகின்றன. ஏற்கனவே இந்த ஏரி சுற்றுலாப் பயணிகளை கவரவில்லை என்பதோடு ஏரியை ஒட்டி நிறைய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதால் மேற்குறிப்பிட்ட உயிரினங்களும் இப்பகுதியில் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன.

வர்த்தூர் ஏரி
வர்த்தூர் ஏரி தற்போது நகரமயமாக்கல், வணிகமயமாக்கல் காரணமாக மிகவும் மாசடைந்து காணப்படுகிறது. இது 180 ஹெக்டேர் பரப்பளவுடன் பெங்களூரின் 2-வது பெரிய ஏரியாக அறியப்படுகிறது. இந்த ஏரி கங்க மன்னர்களால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆகர ஏரி
பெங்களூரின் நகரப் பகுதிகளான H.S.R லே அவுட் மற்றும் கோரமங்களா பகுதிகளுக்கு வெகு அருகமையில் அமைந்துள்ளது ஆகர ஏரி. இந்த ஏரியிலிருந்து சூரிய அஸ்த்தமனம் மற்றும் சூரிய உதயத்தை ரசிப்பது அலாதியான் அனுபவம். எனவே இங்கு அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் உள்ளூர் மக்கள் நிறைய பேர் வந்து செல்கின்றனர்.



Click it and Unblock the Notifications




