கனவுகள் நம் எல்லோருக்கும் இருக்கிறது. என்றேனும் ஒரு நாள் இது நடந்து விடாதா? என்று கனவுகளை நோக்கிய பயணமாகத்தான் நம் வாழ்கையே மாறியிருக்கிறது. வீடு வாங்க வேண்டும், சொகுசு கார், மனைவியுடன் ஷாப்பிங் செல்கையில் பார்த்த அந்த நெக்லஸ், குழந்தைகளை அந்த புகழ் பெற்ற கல்லூரியில் சேர்க்க வேண்டும் என ஆசைகளும் கனவுகளும் ஆயிரம் இருக்கின்றன.
மேலே சொன்ன எல்லாமும் பணம் சார்ந்த விஷயமே. இதை தாண்டி வாழ்கையில் என்றென்றைக்கும் நினைத்து சந்தோஷப்படக்கூடிய நாம் மனமார விரும்பும் சிலவற்றை செய்திடவும் மனம் ஏங்குகிறது. அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான் எல்லையற்ற பயணம் ஒன்று போவது. வாருங்கள் சென்னையில் இருந்து லடாக் வரை நம் கனவுகளை நிஜமாக்கும் அற்புத பயணம் ஒன்றை மேற்கொள்வோம்.
பேருந்து, விமான மற்றும் ஹோட்டல் கட்டணங்களில் 50% கட்டண சலுகை பெற்றிடுங்கள்
பயண திட்டம் என்ன?
சென்னையில் இருந்து லடாக் செல்வதென்பது மொத்த இந்தியாவின் ஊடாக பயணித்து அதன் ஒரு எல்லையில் இருந்து மறு எல்லையை அடைவதற்கு ஒப்பான கிட்டத்தட்ட 4000 கி.மீ தொலைவு கொண்ட பெரும் பயணமாகும். லடக்கை நோக்கிய பயணத்தின் போது வழியில் இருக்கும் முக்கிய சுற்றுலத்தலங்களுக்கும் செல்லலாம். எந்தெந்த ஊர்களின் வழியாக பயணம் செல்லவிருக்கிறோம் என்பதை அடுத்த பக்கத்தில் பார்க்கலாம்.
எந்தெந்த ஊர்களின் வழியாக பயணம்? :
சென்னை - பெங்களுரு - தும்கூர் - புனே - மும்பை - வதோதரா - உதய்பூர் - அபோகர் - அம்ரித்சர் - ஜம்மு - ஸ்ரீநகர் - கார்கில் - லெஹ் (லடாக்). லடாக்கை அடைய வேறு பல வழிகள் இருந்தாலும் சாலைகளின் தரம், வழியில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள் மற்றும் ஹோட்டல்களின் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவ்வழி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
Photo:Rohit Ganda
சென்னை - பெங்களுரு - தும்கூர்:
பயணத்தின் முதற்கட்டமாக நாம் சென்னையில் இருந்து கர்நாடக மாநிலத்தில் இருக்கும் தும்கூர் வரையிலான பயணத்தை துவங்கலாம். மொத்தம் 430 கி.மீ தொலைவுடைய இந்த பயணத்தை வழியில் எங்கும் நிற்காமல் சென்றால் நாம் ஏழரை மணிநேரத்தில் அடைந்து விடலாம். அதேசமயம் இந்த வழியில் சில நல்ல சுற்றுலாத்தலங்களும் இருப்பதால் அவற்றில் நாம் செலவிடும் நேரத்தை பொறுத்து தும்குரை நாம் அடையும் நேரம் மாறுபடலாம்.
Photo:Dr. Mithun James
வழியில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள்:
சென்னையில் இருந்து நாம் கிளம்பினால் நாம் முதலில் அடையும் ஊர் வேலூர் ஆகும். பயணக்களைப்பை போக்க சிற்றுலா செல்ல மிக ஏற்ற இடமாகும் இது. சுதந்திர போராட்டத்தின் முதல் எழுச்சியான வேலூர் சிப்பாய்கள் கழகம் நடைபெற்ற வேலூர் கோட்டை அந்த கோட்டையினுள் அமைந்திருக்கும் சிவ சைவஸ்தலமான ஜலகண்டேஸ்வரர் கோயில் போன்றவை வேலூரில் இருக்கும் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகள் ஆகும்.
Photo:Nagesh Kamath
தங்க கோயில்:
பஞ்சாப் அம்ரித்சர் தங்க கோயிலை பார்க்கும் முன்பே நம் தமிழ் நாட்டில் இருக்கும் தங்க கோயிலை பார்க்க விருப்பம் இருந்தால் வேலூர் நகரில் இருந்து 10 கி.மீ பயணித்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயணி அம்மன் தங்க கோயிலை பார்த்து வரலாம். 800 கிலோ தங்கத்தினால் ஆனது இந்த தங்க கோயிலாகும்.
Photo:Dsudhakar555
ஆம்பூர் பிரியாணி:
வேலூரில் சிற்றுலாவை முடித்த கையோடு பயணத்தை தொடர்ந்தால் அடுத்த அரை மணிநேரத்தில் மூக்கை துளைக்க ஆரம்பிக்கிறது ஆம்பூர் பிரியாணியின் மேஜிக். நூற்றாண்டுகளாக
சுவை மாறாமல் முகலாய சமையல் முறைப்படி சமைக்கபப்டும் இந்த பிரியாணியை நிச்சயம் சுவைக்க வேண்டும்.
Photo: Flickr
பெங்களூர்:
ஆம்பூர் பிரியாணியை சுவைத்து விட்டு பயணத்தை தொடர்ந்தால் கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக தமிழக எல்லையை கடந்து பெங்களுரு நகரத்தை அடையலாம். நவீன இந்தியாவின் அடையாளமான பெங்களுருவில் அதன் புனைப்பெயரான 'பூங்காக்களின் நகரம்' என்பதற்கேற்ப அருமையான பூங்காக்கள் உள்ளன. கப்பன் பூங்கா, லால் பாக் ஆகிய பூங்காக்களுக்கு சென்று ஆனந்தமாக ஒரு மாலைப்பொழுதை செலவிடலாம்.
கப்பன் பூங்கா
பெங்களுரு - தும்கூர்:
மாலைமங்கும் வேளையில் பெங்களுருவில் இருந்து கிளம்பினால் 75 கி.மீ தொலைவில் இருக்கும் தும்கூர் நகரத்தை ஒன்றே முக்கால் மணி நேரத்தில் அடைந்து விடலாம். இரவு
தங்குவதற்கு நல்ல ஹோட்டல்கள் தும்கூரில் இருக்கின்றன. அங்கு நன்றாக ஓய்வெடுத்து விட்டு அடுத்தநாள் நமது இரண்டாம் கட்ட பயணத்தை துவங்கலாம்.
Photo:Balaji.B ( 1.9 Million Views)
தும்கூர் - புனே - மும்பை:
நமது பயணத்தின் இரண்டாம் கட்டமாக தும்கூரில் இருந்து கிளம்பி புனே வழியாக மும்பை நகரை அடைவிருக்கிறோம். 911 கி.மீ தொலைவு கொண்ட இந்த பயணத்தின் போது நாம் இதுவரை சென்றிருக்க வாய்ப்பில்லாத சில நல்ல சுற்றுலாத்தலங்களுக்கு செல்லலாம். சித்ரதுர்கா கோட்டை, கோலாப்பூர் மகாலட்சுமி கோயில், லோனாவ்லா போன்றவை வழியில் இருக்கும் சில முக்கியமான சுற்றுலாத்தலங்கள் ஆகும்.
சித்ரதுர்கா கோட்டை:
நாம் முதலில் செல்லவிருக்கும் இடமான சித்ரதுர்கா கோட்டை தும்கூரில் இருந்து 132 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. இரண்டு மணிநேர பயணத்தில் நாம் இந்த இடத்தை அடைந்து
விட முடியும். கர்நாடக மாநிலத்தில் இருக்கும் மிகச்சிறந்த கோட்டைகளில் ஒன்றாக புகழப்படும் இந்த சித்ரதுர்கா கோட்டையை 10 ஆம் நூற்றாண்டில் இருந்து 18ஆம் நோற்றாண்டு வரை பல்வேறு மன்னர்களால் மெருகூட்டப்பட்டிருக்கிறது. இதனுள் 18 கோயில்கள், அரண்மனை, மசூதி, தானிய அரை, ரகசிய சுரங்கப்பாதைகள் என ஏராளமான விஷயங்கள் உள்ளன. தொன்மையான விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருப்பவர்கள் கட்டாயம் இந்த கோட்டைக்கு வர வேண்டும்.
Photo:Pavithrah
கோலாப்பூர் மகாலட்சுமி கோயில்:
கோலாப்பூர், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஒரு ஊராகும். இங்கு உள்ள மகாலட்சுமி கோயில் மிக சக்தி வாய்ந்ததாக பக்தர்களால் கருதப்படுகிறது. கோலாசுரன் என்ற அசுரனை இந்த ஊரில் வைத்து மகாலட்சுமி வதம் செய்த காரணத்தினாலேயே இந்த ஊர் கோலாப்பூர் என்ற பெயர் பெற்றிருக்கிறது. நாம் செல்லும் பாதையிலேயே இக்கோயிலும் அமைந்திருப்பதால் நிச்சயம் சென்று மகாலட்சுமியை தரிசித்து வரலாம்.
லோனாவ்லா:
சஹயாத்ரி மலையின் கிரீடம் என்று அழைக்கப்படும் லோனாவ்ளா மலைவாசஸ்தலம், மஹாராஷ்டிரா மாநிலத்தின் மேற்குப்பகுதியில், புனே மாவட்டத்தில், மும்பையிலிருந்து 84 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தியா முழுவதும் லோனாவ்ளா 'சிக்கி' எனப்படும் கடலை மிட்டாய்க்காக மிகவும் பிரபலம். மேலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இரைச்சல் நிறைந்த நகர வாழ்க்கைக்கு மாற்றாக அமைதியும், ஏகாந்தமும், இனிமையும் நிறைந்த லோனாவ்ளா ஸ்தலத்தின் பேரழகில் மனதை பறிகொடுக்கப்போவது உறுதி!.
மும்பை - புனே விரைவுப்பாதை:
புனே நகரத்தில் இருந்து மும்பை நோக்கிய பயணத்தின் வழியிலேயே லோனாவ்லா வருகிறது. மும்பை டு புனே சாலைப்பயணம் நமது இந்த மொத்த பயணத்திலும் வைத்து மிக
அருமையான சாலைப்பயண அனுபவத்தை தரும். பசுமையான இயற்கை சூழலுக்கு நடுவே இந்த சாலை ஊடறுத்து செல்கையில் இயற்கை தரும் பரவசம் விவரிக்க முடியாத ஒன்று. எனவே புனே முதல் மும்பை வரையிலான 90 கி.மீ பயணத்தை தவற விடாதீர்கள்.
மும்பை - கனவுகளின் நகரம்:
மும்பை கனவுகளின் நகரமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும், அதிர்வலைகளை ஏற்படுத்தும் வாழ்வியல் முறைகளுக்காகவும், பாலிவுட்டின் இல்லமாகவும் பிரபலமாக அறியப்படுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உலக மக்கள் அமெரிக்காவை கண்டு கனவு காண்பதை போல, இந்திய மக்கள் மும்பைக்காக கனவு காண்கிறார்கள்.
மும்பையின் ஜனக் கூட்டமும், பல்வேறு இடங்களும், பலவகைப்பட்ட வழிபாடுகளும், எண்ணற்ற உணவு வகைகளும் அதன் வெவ்வேறு நிறங்களை பளிச்சென எடுத்துக்காட்டுகின்றன. இதன் காரணமாக மும்பை நகரம் இந்தியாவின் தனித்துவம் மிக்க சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.
மும்பையின் சுற்றுலாத் தலங்கள்:
மும்பையின் பிரபலமான சுற்றுலாத்தலங்களான கேட் வே ஆஃப் இந்தியா, ஜூஹு பீச், மரீன் டிரைவ் தவிர எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் இங்கு நாள்தோறும் ஏராளமான பயணிகளை
ஈர்த்து வருகின்றன. அவற்றில் கொலாபா காஸ்வே, எஸல் வேர்ல்ட் மற்றும் வாட்டர் கிங்டம், ஹாஜி அலி மசூதி, மும்பை ஸீ லிங்க், பேண்ட்ஸ்டாண்ட், ஃபேஷன் ஸ்ட்ரீட், தொங்குதோட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் அரபிக்கடலை பார்த்தவாரே தங்குவதற்கு அருமையான ஹோட்டல்களும் இங்கே உண்டு. அவற்றை பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
மும்பை - வதோதரா - உதய்பூர்:
பயணத்தின் மூன்றாம் கட்டமாக நாம் மும்பையில் இருந்து வதோதரா வழியாக உதய்பூர் என்னும் மிக மிக அற்புதமான சுற்றுலாத்தலத்தை நோக்கி பயணம் செய்யப்போகிறோம். 710 கி.மீ தொலைவுள்ள இந்த பயணத்தை நிறைவு செய்ய 11 மணிநேரமாவது ஆகும். எனவே அதி காலையில் மும்பையில் இருந்து கிளம்பினால் இரவு உதய்பூர் சென்றடையலாம். உதைபுரில் தங்குவதற்கு ஹோட்டல்களாக மாற்றப்பட்ட ராஜஸ்தான அரண்மனைகள் இருக்கின்றன. அவற்றை பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
Photo: Flickr
உதய்பூர் - இந்தியாவின் வெனிஸ்:
செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரிகள், அற்புதமாக கட்டப்பட்ட அரண்மனைகள், கோயில்கள் என ஒரு சிறந்த சுற்றுலாத்தலத்திற்க்கான அனைத்து அம்சங்களும் இங்கே உள்ளன.
உதய்பூர் அரண்மனை, ஷஹிளியோன்-கி-பாரி என்ற ராஜ தோட்டம், பதெஹ் சாகர் ஏரி போன்றவை இங்கிருக்கும் முக்கிய சுற்றுலாத்தலங்கலாகும்.
Photo:Jakub Michankow
உதய்பூர் அரண்மனை:
ராஜஸ்தானில் உள்ள அரண்மனைகளில் வைத்து அளவில் மிகப்பெரியதாகவும், சுற்றுலாப்பயணிகளால் அதிகம் விரும்பப்படும் அரண்மனையாகவும் இருக்கிறது இந்த உதய்பூர் அரண்மனை. ஒரு அரண்மனையாக இல்லாமல் மகாராணா உதய் சிங் மற்றும் அவருக்கு பின் வந்த அரசர்களால் பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்ட பல அரண்மனைகளின் வளாகமாகவே இந்த உதய்பூர் அரண்மனை இருக்கிறது. இந்த அரண்மனை வளாகத்தினுள் இருக்கும் ஜகதீஷ் மந்திர் என்கிற ஜெகன்னாதர் கோயில் இந்திய-ஆரிய கட்டிடக்கலையின் அற்புதக்கலவையாக விளங்குகிறது. மேலும் இதனுள்ளே அருங்காட்சியகம், பூந்தோட்டம், மன்னர் காலத்தில் வரையப்பட்ட நுணுக்கமான ஓவியங்களின் காட்சியகம் போன்றவை உள்ளன. யானை சவாரி செய்தபடி இந்த அரண்மனையில் உலா வருவது மறக்க முடியாத அனுபவமாக அமையும்.
Photo: Flickr
ஷஹிளியோன்-கி-பாரி :
உதய்புரில் உள்ள அழகு பொருந்திய மற்றொரு இடம் தான் ஷஹிளியோன்-கி-பாரி என்னும் தோட்டம். உதைபுரின் மகாராணிக்கு சேவை புரியவந்த 48 பணிப்பெண்கள் ஓய்வு எடுக்க உதய்பூர் அரசர் மகாராணா போபால் சிங் என்பவரால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட இந்த தோட்டத்தினுள் தாமரைக்குளங்கள், பளிங்கு கல்லினால் செய்யப்பட்ட நடைபாதைகள், யானை வடிவிலான ஊற்று போன்றவை இருக்கின்றன. இந்த ஊற்றின் சிறப்பம்சம் யாதெனில் இந்த ஊற்றில் தண்ணீர் வரும் ஒவ்வொரு முகப்பின் வழியாகவும் வெவ்வேறு ஒலி எழுப்பும்படி இது வடிவமைக்கப்பட்டிருகிறது. இதனுள் அரசர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களடங்கிய சிறு அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. உதய்பூர் செல்லும் அனைவரும் தவறாமல் சென்று பார்க்க வேண்டிய இடம் இது.
பதெஹ் சாகர் ஏரி:
உதய்புரில் உள்ள ஏரிகளில் மிக அழகானதாக இது வர்ணிக்கப்படுகிறது. 1680களில் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும். இந்த ஏரியினுள் மூன்று சிறிய தீவுகள் உள்ளன. ஒரு தீவில் நேரு பூங்காவும், வனவிலங்கு காட்சியகமும் உள்ளது. மற்றறொரு தீவினுள் நவீனமான 'Water-Jet' நீருற்றுடன் கூடிய பூங்கா ஒண்டு அமைந்திருகிறது. மூன்றாவது தீவில் உதய்பூர் வான் ஆராய்ச்சி நிலையம் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் 'ஹர்ஷலி அமவஷ்ய மேளா' என்னும் திருவிழா இந்த ஏரியின் கரையில் கொண்டாடப்படுகிறது.
உதய்பூர் - அபோகர்:
உதைபுரை ஒருநாள் முழுக்க சுற்றிப்பார்த்துவிட்டு அடுத்தநாள் அதிகாலை கிளம்பினால் உதைபுரில் இருந்து 795கி.மீ தொலைவில் பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் அபோகர் நகரை நோக்கி பயணிக்கலாம். இந்த வழியில் பெரிதாக ஏதும் சுற்றுலாத்தலங்கள் இல்லை என்பதால் உணவு இடைவேளைக்கு நின்றது போக பத்து மணிநேரத்தில் அபோஹரை அடைந்து அங்கே இரவு தங்கிவிட்டு அடுத்தநாள் பொற்கோயில் நகரமான அம்ரித்சரை நோக்கி பயணிக்கலாம்.
அபோகர் - அம்ரித்சர் - ஜம்மு - ஸ்ரீநகர்:
பயணத்தின் இறுதி கட்டத்தை நாம் நெருங்கி விட்டோம். லடாக்கை அடைவதற்கு முன்பு அபோகாரில் இருந்து அம்ரித்சர் வழியாக ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகரை
நோக்கி செல்லவிருக்கிறோம். இந்த 680 கி.மீ பயணத்தை நிறைவு செய்ய பத்து மணிநேரமாவது ஆகும். மேலும் இந்த பயணத்தின் போது அம்ரித்சரில் இருக்கும் சீக்கியர்களின் புனித
கோயிலான பொற்கோயிலுக்கும் செல்லவிருக்கிறோம்.
ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் - சீக்கியர்களின் பொற்கோயில்!!!:
அபோகாரில் இருந்து அம்ரித்சர் 226 கி.மீ தொலைவில் இருக்கிறது. எனவே வெறும் மூன்றரை மணிநேர பயணத்தில் நாம் அம்ரித்சரை அடைந்துவிடலாம்.
பஞ்சாப் மாநிலத்தின் அம்ரித்ஸர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் என்று அழைக்கப்படும் இந்த தங்கக்கோயில் நாட்டிலுள்ள முக்கியமான ஆன்மீக வழிபாட்டுத்தலங்களில்
ஒன்றாகவும், சீக்கிய மதப்பிரிவின் அடையாளச்சின்னமாகவும் புகழுடன் அறியப்படுகிறது. 19-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மஹாராஜா ரஞ்சித் சிங் இந்தக் கோயிலின் மேல்தளப்பகுதியை 400 கிலோ எடையுள்ள தங்கத்தகடுகளால் போர்த்தினார். அதற்குபிறகு இது தங்கக்கோயில் என்றழைக்கப்பட்டு வருகிறது. இதனுள் சென்று வருவது மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
அம்ரித்சர் - ஸ்ரீநகர்:
அம்ரித்சர் நகரில் சில மணிநேரங்களை செலவிட்ட பிறகு அடுத்ததாக 461 கி.மீ தொலைவில் இருக்கும் ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகரை நோக்கி பயணிக்கலாம்.
அதிகாலை அபோகாரில் இருந்து கிளம்பினால் இரவு ஒன்பது மணிவாக்கில் நாம் ஸ்ரீநகரை அடைந்துவிடலாம். பின்னர் அங்குள்ள ஹோட்டல்கள் ஏதேனும் ஒன்றில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு அடுத்தநாள் காலை நமது இறுதிகட்ட பயணத்திற்கு தயாராகலாம்.
Photo:Muzaffar Bukhar
ஸ்ரீநகர் - லடாக்:
ஒருவார கால பயணத்தின் இறுதிகட்டமாக நாம் ஸ்ரீநகரில் இருந்து லடாக்கை நோக்கி பயணிக்கவிருக்கிறோம். இந்தப்பயணம் முழுக்க கரடுமுரடான மலைப்பாதைகளிலேயே இருக்கும்.
அபாயகரமான வளைவுகள், கரணம் தப்பினால் மரணம் என்பது போன்ற மிக கடினமான சூழலில் கார் ஓட்டுவதில் மிகுந்த தேர்ச்சி உடையவர் காரை ஓட்டுவது நல்லது.
லடாக் - கனவு நிஜமானது:
ஒருவழியாக நாம் லடாக்கை அடைந்த பிறகு அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு பின்னர் லடாக்கில் இருக்கும் வர்ணிக்க முடியாத அழகு நிறைந்த இடங்களுக்கு செல்லலாம். அதற்கு முன் லடக்கை பற்றியும் அங்கிருக்கும் முக்கியமான சுற்றுலாத்தலங்கள் பற்றியும் அறிந்து கொள்வது நல்லது.
லடாக் - கனவு நிஜமானது:
இண்டஸ் நதிக்கரையில் அமைந்துள்ள லடாக், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலம். இது "தி லாஸ்ட் ஷங்ரி லா/கடைசி ஷங்ரி லா", "குட்டி திபெத்", "நிலவு பூமி", "உடைந்த நிலவு" என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. தலைநகரமான லெஹ் நகரைத் தவிர லடாக்கிற்கு அருகாமையில் அல்ச்சி, நூப்ரா பள்ளத்தாக்கு, ஹெமிஸ், லமயுரு, சன்ஸ்கர் பள்ளத்தாக்கு, கார்கில், பன்கொங்க் சோ, சோ கர் மற்றும் சோ மோரிரி போன்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன.
அழகிய ஏரிகளும் மடங்களும், மதி மயக்கும் இயற்கை காட்சிகளும் மலை உச்சிகளும் இந்த இடத்தின் சில முக்கிய ஈர்ப்புகள். லடாக்ஹி, புரிக், திபெடன், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தான் இங்கு பரவலாக பேசப்படும் மொழிகள் ஆகும்.
பாங்காங் ஏரி:
லடாக்கில் இருக்கும் மிக முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்று தான் பாங்காங் ஏரியாகும். பாங்காங் ஏரியின் நீர் அட்சர சுத்தமாக இருப்பதால் தண்ணீரில் விழும் பிரதிபலிப்பு உண்மையை போன்று அவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது.
பனி காலத்தில் முழுவதுமாக உறைந்து காணப்படும் இது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில், இரு நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சினைக்குரிய பகுதியில் இது அமையப்பெற்றுள்ளது. இதன் நடுவே எல்லை கட்டுப்பாட்டுக் கோடு செல்கிறது.
நுப்ரா பள்ளத்தாக்கு :
பாங்காங் ஏரிக்கு அடுத்தபடியாக நாம் பார்க்க வேட்ன்டிய இடம் நுப்ரா பள்ளத்தாக்கு ஆகும். கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ள நூப்ரா பள்ளத்தாக்கு, 'பூக்களின்
பள்ளத்தாக்கு' என்று பொருள்படும் 'ல்டும்ரா' என்று அழைக்கப்படும் பெயருயுடையதாகும். கோடைக்காலத்தில் இப்பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண பூக்களின் அணிவகுப்பைக் காண முடியும். இந்தப் பள்ளத்தாக்கு பகுதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் தலைநகர் லேவிலிருந்து 150 கி.மீ தொலைவில் உள்ளது.
நுப்ரா பள்ளத்தாக்கு :
இவை தவிர சன்ச்கர் ஆறு, டிராஸ் பள்ளத்தாக்கு, மனாலி - லெஹ் சாலைப்பயணம் போன்ற ஏராளமான இருக்கின்றன. உங்கள் வாழ்க்கையில் என்றென்றைக்கும் மறக்க முடியாத ஒரு
பயணமாக இந்த லடாக் பயணம் அமையும்.