மாசி மாதம் தான், ஆனால் வெயில் என்னவோ சித்திரை போல கொளுத்துகிறது! அடிக்கிற வெயிலுக்கு இதமா ஒரு பைக் ரைடு சென்று, ஜில்லுன்னு மேலே இருந்து விழுற அருவியில ஆனந்தமா நீந்தி குளிச்சு, ஓய்வெடுத்துட்டு வந்தா எப்படி இருக்கும்? படிக்கவே ஆசையாக இருக்கிறது அல்லவா! செய்து பார்த்திடலாம் வாருங்கள்! சென்னையில் இருந்து பைக்கில் தடாவிற்கு எப்படி செல்வது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? சுற்றிப் பார்க்க என்னவெல்லாம் இருக்கிறது என்பது கேள்விகளுக்கு விடை காண கீழே படியுங்கள்!

ஒரு குட்டி ட்ரிப் அவசியம்
சென்னைவாசிகள் பலரும் தடா நீர்வீழ்ச்சி பற்றி அறிந்திருப்பார்கள், கேள்விப்பட்டிருந்தாலும் பலர் சென்றிருக்க மாட்டர்கள். எது எப்படி இருந்தாலும் சென்னையிலிருந்து தடாவிற்கு பைக்கில் செல்வது ஒரு அருமையான யோசனை. வேலைப்பளு, வாழ்வில் இருக்கும் மற்ற பிரச்சனைகளை எல்லாம் ஒரு ஓரம் வைத்து விட்டு ஒரு குட்டி ட்ரிப் அடித்து விட்டு வாருங்களேன். உங்களுக்கே புது தெம்பு கிடைக்கும். புத்துணர்ச்சியும், தெளிவான மனமும் கிடைக்கும்.

சென்னைக்கு அருகில் அழகான நீர்வீழ்ச்சி
தடா நீர்வீழ்ச்சி உப்பலமுடுகு நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதையா மண்டேலில் அமைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி சென்னையில் இருந்து 95 கிமீ தொலைவில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி ஒரு அடர்ந்த காட்டில் அமைந்துள்ளதால் இங்கு ட்ரெக்கிங் செய்வது மிகவும் பேமஸ். மொத்த மலையேற்றம் கிட்டத்தட்ட 10 கிமீ தூரம் ஆகும், வழியில் பல குளங்கள், சுற்றிலும் நல்ல பசுமை போர்வையுடன் அந்த காட்சிகள் யாவும் மனதிற்கு ஒரு வித இதமான உணர்வை தரும்.

சென்னை to தடா பைக் பயணம்
ஒரு நல்ல பைக்கை ரெடி செய்து கொள்வது அவசியம் மக்களே. ஆகவே உங்களது பைக்கை சர்வீஸ் செய்து தயார் படுத்திக் கொள்ளுங்கள். காலை ஒரு 6 மணிக்கு கிளம்புவது நல்லது. சென்னையின் எந்தப் பகுதியில் நீங்கள் இருந்தாலும் செங்குன்றம் வந்து விடுங்கள், அங்கிருந்து ஒரே ரோடு தான் தடா நீர்வீழ்ச்சி. நீங்கள் Google maps இல் தடா ஜங்க்ஷன் என ரூட் போட்டுக் கொள்ளலாம். தடா ஜங்க்ஷனை அடைந்த உடன் அங்கிருக்கும் ஹோட்டல்களில் காலை உணவு முடித்து விட்டு, உங்களுக்கு தேவையான நொறுக்குத்தீனிகள், வாட்டர் பாட்டில்கள் ஆகியவை வாங்கிக் கொண்டு புறப்படவும். ஏனெனில் போகப்போக பெரிதாக கடைகள் எதுவும் கிடையாது.

காலை உணவுக்கு பின் பயணத்தை தொடருங்கள்
தடா ஜங்க்ஷனில் இருந்து கொஞ்ச தூரத்திலேயே வரராஜபாளையம் என்ற இடத்தை அடைவீர்கள், இது தான் கடைசி ஷாப்பிங் பாயின்ட். நீங்கள் தடா ஜங்க்ஷனில் ஏதாவது வாங்க மறந்திருந்தாலும் கூட இந்த இடத்தில் உங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொள்ளவும். இதற்கு பிறகு சிறிது தூரத்திலேயே நீர்வீழ்ச்சியை அடைந்து விடுவீர்கள். வரராஜபாளையம் பஸ் ஸ்டாப்பில் இருந்து சிறிது தூரத்திலேயே ஒரு சிறிய பாலத்தை நீங்கள் காண்பீர்கள், அங்கே "Way to waterfalls" என்ற பலகையும் இருக்கும். அந்த வழியில் நேரே சென்றால் அரை மணி நேரத்தில் நீர்வீழ்ச்சியை அடைந்திடலாம்.

குழந்தைகளுக்கு ஏற்ற இடம்
பார்க்கிங்கில் உங்களது பைக்கை பார்க் செய்துவிட்டு, பைக்கிற்கு கட்டணம் பின்னர் உங்களுக்கான நுழைவு டிக்கெட்டை வாங்கிக் கொள்ளவும். ஒரு நபருக்கு ரூ. 50 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பார்க்கிங்கில் இருந்து ஒரு 15 நிமிட தூரத்தில் நீச்சல் குளம் ஒன்றை அடைவீர்கள். இது ஆழம் குறைந்த அழகான பகுதி, வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதற்கு இது ஏற்ற இடம்.

மெயின் நீர்வீழ்ச்சியை அடைய ட்ரெக்கிங்
குடும்பம், குழந்தைகளுடன் நீங்கள் சென்றீர்கள் என்றால் நீச்சல் குளம் போன்றே அமைப்பே போதுமானதாக இருக்கும். உங்களுக்கு ட்ரெக்கிங் செய்ய வேண்டும், மெயின் நீர்வீழ்ச்சியை அடைந்து குளிக்க வேண்டும் என்று தோன்றினால் 4 கிமீ தூரம் நடக்க வேண்டும். முக்கியமாக நீங்கள் ட்ரெக்கிங் ஷூஸ் போட்டிருப்பது அவசியம், பாதை சற்று சருகளாக இருக்கும். ஆனால் போகின்ற பாதை முழுக்க பசுமையான மரங்கள், கொடிகள், சிறு சிறு ஓடைகள், குளங்கள் என ரம்மியமாக இருக்கிறது.

ஆனந்தமாக நீர்வீழ்ச்சியில் குளியல்
நீங்கள் நடந்து வந்த களைப்பு முழுவதும் நீர்வீழ்ச்சியை பார்த்த பின்னர மறைந்து விடும். அந்த அளவுக்கு நீர்வீழ்ச்சியும், அதனை சுற்றியுள்ள பகுதிகளும் மனதை கவர்கின்றன. உங்களுக்கு போதும் என்கிற அளவுக்கு நீங்கள் அங்கு குளித்து மகிழ்ந்து ஆட்டம் போடலாம். ஓய்வெடுத்த பின்னர் கீழே இறங்குவதற்கு தொடங்கவும், இறங்கும் போது கவனமாக இருப்பது அவசியம்.
பார்க்கிங்கில் இருந்து வந்த வழியே சென்று வரதராஜபாளையம் அல்லது தடா ஜங்க்ஷனில் மதிய உணவு அருந்திவிட்டு பயணத்தை தொடர்ந்தால், மாலையில் சென்னைக்கு வந்து விடலாம். இந்த ஒட்டு மொத்த ட்ரிப்க்கும் பெட்ரோல் செலவும் சேர்த்து ஒரு ரூ. 1,500 இருந்தால் போதும் மக்களே. இது தான் தடா செல்வதற்கு சிறந்த நேரம், கோடைக்காலத்தில் நீர் வரத்து குறையலாம். ஆகவே சீக்கிரம் சென்று வந்து விடுங்கள்!



Click it and Unblock the Notifications





