கலியுகவரதனாக நமக்கு அருள் பாலிக்கும் திருவேங்கடமுடையானை நாம் எத்தனை முறை தரிசித்தாலும் நமக்கு சலிப்பதில்லை. வாழ்வில் எத்தனை முறை சென்றாலும் மீண்டும் மீண்டும் வர தூண்டக் கூடிய இடம் தான் திருமலை திருப்பதி! இந்நிலையில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு செல்லும் தினசரி MEMU ரயிலின் கட்டணத்தை ரூ.35 ஆக தென்னக ரயில்வே குறைத்துள்ளது! ஒரே நாளில் பட்ஜெட்டுக்குள் திருப்பதி ஏழுமலையானை தரிசித்து விட்டு வீடு திரும்புவது எப்படி என்று இங்கே பார்ப்போம்!
சென்னை to திருப்பதி தினசரி MEMU ரயில்
சென்னையில் இருந்து தினமும் திருப்பதிக்கு ஒரு 8 கோச் கொண்ட MEMU ரயில் நீண்ட காலமாக இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்யும் வகையில் இந்தியாவின் அனைத்து ரயில்களின் கட்டணங்களும் வெகுவாக உயர்த்தப்பட்டன. தற்போது கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஏனைய ரயில்களின் கட்டணங்கள் பழைய கட்டண விகிதத்திற்கு குறைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் சென்னையிலிருந்து திருப்பதிக்கு வெறும் ரூ.35 கட்டணம் செலுத்தி இந்த ரயிலில் பயணிக்கலாம்.

வெறும் 3.30 மணி நேரத்தில் திருப்பதி
சென்னை சென்ட்ரல் லோக்கல் நடைமேடையில் இருந்து ரயில் எண் 66047 தினமும் காலை 9:50 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் மதியம் 1:30 மணியளவில் திருப்பதி சென்றடைகிறது. வெறும் 8 கோச் மட்டுமே இருப்பதால் நீங்கள் சென்ட்ரலில் ஏறினால் தாரளமாக உங்களுக்கு பிடித்த இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்லலாம். அதே போல இந்த ரயில் பின்வரும் கீழ்க்கண்ட ஸ்டேஷன்களில் எல்லாம் நின்று செல்லும், அங்கிருந்தும் நீங்கள் ஏறிக் கொள்ளலாம்.
1. சென்னை சென்ட்ரல்
2. பேசின் பிரிட்ஜ்
3. பெரம்பூர்
4. வில்லிவாக்கம்
5. அம்பத்தூர்
6. திருநின்றவூர்
7. கடம்பத்தூர்
8. திருவாலங்காடு
9. அரக்கோணம்
10. திருத்தணி
11. ஏகாம்பரகுப்பம்
12. புத்தூர்
13. ரேணிகுண்டா
14. திருப்பதி
ஒரே நாளில் ஏழுமலையான் தரிசனம் பெறுவது எப்படி
1. நீங்கள் திருப்பதி ரயில் நிலையத்தை அடைந்த உடனேயே நேர் எதிரே இருக்கும் விஷ்ணுநிவாசம் காம்ப்ளக்ஸ் உள்ளே சென்று ஆதார் டிக்கெட்டை காண்பித்து ஏழுமலையான் தரிசன டிக்கெட் பெற்றுக் கொள்ளவும்.
2. ஆதார் டிக்கெட்டுகள் ஸ்ரீநிவாசம் காம்ப்ளக்ஸ், பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களிலும் கிடைக்கின்றன.
3. டிக்கெட்டுகளை பெற்றவுடன் திருமலைக்கு பஸ் பிடித்து மேலே செல்லுங்கள்.
4. உங்களுக்கு தனியறை வேண்டும் என்றால் CRO ஆபிஸில் சென்று ஆதார் கார்டு காண்பித்து ரூ.50 அல்லது ரூ.100 அறைகளை வாங்கிக் கொண்டு சுவாமி தரிசனத்திற்கு தயார் ஆகுங்கள்.
5. அறை வேண்டாமென்றால் இலவச குடவுன்களில் குளித்து முடித்து உங்களது பொருட்களை லாக்கரில் வைத்து விட்டு உணவருந்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்லுங்கள்.
6. ஆதார் டிக்கெட் நீங்கள் 2 மணிக்கு எடுத்தால் நிச்சயம் ஒரு 6 மணி நேர இடைவெளியில் தான் உங்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கப்படும்.
7. ஆகையால் நீங்கள் மேலே சென்று குளித்து முடித்து உணவருந்தி சுவாமி தரிசனம் செய்ய நேரம் சரியாக இருக்கும்.
8. ஏழுமலையானை மனம் குளிர தரிசித்த பின்னர் லட்டு பிரசாதம் வாங்கிக் கொண்டு கீழ் திருப்பதி அடைந்து அங்கிருந்து சென்னை திரும்பலாம்.
9. திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன, நீங்கள் ரயிலில் வந்தாலும் வரலாம் அல்லது பேருந்தில் வந்தாலும் வரலாம்!



Click it and Unblock the Notifications





