சிங்கார சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையம் நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டுள்ளது. சென்னை சென்ட்ரலுக்கு அடுத்த படியாக பொது மக்கள் பெருமளவு உபயோகிக்கும் இந்த எழும்பூர் ரயில் நிலையம் தென் தமிழகத்தை சென்னையுடன் இணைக்கிறது. பழங்கால கட்டிடக்கலையுடன் பெருமிதமாக நிற்கும் எழும்பூர் ரயில் நிலையம் பல சுவாரஸ்யமான விஷயங்களை தன்னுள் அடக்கியுள்ளது. அதில் பெரும்பாலான தகவல்களை நாம் நிச்சயம் அறிந்திருக்கவே மாட்டோம். அதனைப் பற்றிய விரிவான தகவல்கள் இதோ!

நூற்றாண்டு கால பழமையான வரலாறு
ஜூன் 2016 நிலவரப்படி 108 ஆண்டுகள் பழமையான இந்த ரயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. ரயில் நிலையமாகுவதற்கு முன்னால் இது, 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிழக்கிந்திய கம்பெனியின் ஸ்டாண்டிங் சோல்ட்ரியாக இருந்தது.
இது பின்னர் வீரர்களுக்கான சுகாதார நிலையமாக இருந்தது, பின்னர் 1800 களில் இது அரசாங்க அச்சகமாக இருந்தது. 1904 ஆம் ஆண்டு சென்ஜீ புல்னி ஆண்டி என்பவரிடம் இருந்து தென்னிந்திய இரயில்வே ரூ.1,00,000 த்திற்கு இந்த இடத்தை வாங்கியுள்ளது.

மூன்று ரயில்வே ஒன்று சேர்ந்து உருவாக்கிய எழும்பூர் ரயில் நிலையம்
1859 ஆம் ஆண்டு உருவான கிரேட் தென்னிந்திய இரயில்வே நிறுவனம் (GSIRC), 1864 ஆம் ஆண்டு உருவான கர்நாடக இரயில்வே நிறுவனம் (CRC) மற்றும் 1879 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாண்டிச்சேரி இரயில்வே நிறுவனம் லிமிடெட் (PRC) ஆகிய மூன்று நிறுவனங்களும் சேர்ந்து எழும்பூர் ரயில் நிலையம் உருவாக காரணமாக இருந்தன.
கர்நாடக இரயில்வே நிறுவனம் திருச்சி-நாகப்பட்டிணம் மற்றும் காஞ்சீவரம்-அரக்கோணம் இடையே இயங்கிக்கொண்டிருக்கும் போது சென்னைக்கு அருகில் ஒரு ரயில் நிலையம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற யோசனை தோன்றியதாம்.

பெயருக்காக வலுத்தப் போராட்டம்
மூன்று ரயில்வே நிறுவனங்களும் பின்னர் தென்னிந்திய ரயில்வேயுடன் இணைக்கப்பட்டன. இரயில்வேயின் தேசியமயமாக்கல் தொடங்கிய போது, 1900 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு ஒரு முனையத்தை உருவாக்க முடிவு செய்தது. இதனால் 1908-ம் ஆண்டு எழும்பூர் ரயில் நிலையம் கட்டப்பட்டது.
இந்த ரயில் நிலையத்திற்கு கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரல் ராபர்ட் கிளைவ் பெயரை வைக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு எழுமூர் ரயில் நிலையம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பல்வேறு மன்னர்களும் ஆண்ட எழுமூர்
பார்த்தசாரதி கோவிலில் உள்ள இரண்டு கல்வெட்டுகளில் எழுமூர் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி 1309 தேதியிட்ட கோயிலின் வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு ஒன்றில் எழுமூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சோழர்கள் காலத்தில் இந்த பகுதி உண்மையில் ஒரு முக்கியமான நிர்வாக அலகாக இருந்தற்கு இதுவே சான்று. பல்லவர்கள் மற்றும் விஜயநகர பேரரசுவின் ஆட்சிக் காலத்திலும் ஏழுமூர்நாடு பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

சென்னை சென்ட்ரலுக்கு அடுத்தபடியான முக்கியத்துவம் வாய்ந்த ரயில் நிலையம்
எழும்பூர் ரயில் நிலையம் தென் தமிழ்நாடு, கேரளா மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ரயில்களை இணைக்கும் இடமாகும். இருப்பினும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒப்பிடும் போது இந்த ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தென் தமிழகத்தை சென்னையுடன் இணைக்கும் முக்கிய பொறுப்பில் எழும்பூர் ரயில் நிலையம் செயல்படுகிறது.

எழும்பூரிலிருந்து இந்தியா – இலங்கை பயணம்
1914 ஆம் ஆண்டு எழும்பூர் வழியாக இந்திய-இலங்கை இணைப்பு முதன்முதலாக திறக்கப்பட்டது. பயணிகள் சென்னை எழும்பூர் - தனுஷ்கோடி போட் மெயில் மூலம் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எழும்பூரில் இருந்து ரயில் மூலம் தனுஷ்கோடிக்கும் பின்னர், தனுஷ்கோடியில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு படகு மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். 1964 ஆம் ஆண்டு புயலால் தனுஷ்கோடியில் உள்ள ரயில் பாதை அழிந்ததால் இந்த சேவை ரத்து செய்யப்பட்டது.

தனித்துவமான கட்டிடக்கலை
ஹென்றி இர்வின் மற்றும் E.C பேர்ட் ஆகிய இருவரும் சேர்ந்து எழும்பூர் ரயில் நிலையத்தை கட்டமைத்தனர். 300 க்கு 70 அடி என்ற பரிமாணத்துடன் துவங்கிய கட்டுமானம், அந்த காலத்தில் லண்டனின் சேரிங் கிராஸை விட பெரியது என்று கூறப்படுகிறது. மெட்ராஸில் கான்கிரீட் பயன்படுத்தப்பட்ட ஆரம்பகால கட்டிடங்களில் இந்த நிலையம் ஒன்றாகும். தென்னிந்தியாவில் உள்ள அரிதான கட்டிடக்கலைகளில் ஒன்றான முகலாய பாணியும், இந்தோ-சராசெனிக் பாணியும் சேர்ந்து இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

அந்த காலத்திலேயே ஓய்வு அறைகள் வைத்து கட்டப்பட்ட ரயில் நிலையம்
நிலையத்தின் அமைப்பு செங்கற்களால் அலங்கரிக்கப்பட்ட அமைப்பாகவும், கிரானைட் மற்றும் மணற்கற்களால் ஆனதாகவும் இருந்தது. பாரசீகம் மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து கொண்டு வந்த முகலாயர் பாணியில் குவிமாடங்களால் மூடப்பட்ட பல கோபுரங்கள் உள்ளன. "டோம்" - இது பிரசிடென்சியை குறிப்பதாகும். 1914 ஆம் ஆண்டில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளுக்காக நன்கு பொருத்தப்பட்ட காத்திருப்பு அறைகள், புத்துணர்வு அறைகள் மற்றும் ஓய்வு அறைகள் ஆகியவைகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

மாற்றம் செய்யப்பட்ட லோகோ
இந்த நிலையம் பரந்த குகை உட்புறங்களுடன் மர படிக்கட்டுகளைக் கொண்டுள்ளது. SIR இன் யானை சின்னம் இன்னும் நுழைவு மண்டபத்தின் மேல் காணப்படுகிறது. 1951 இல் இந்திய ரயில்வேயில் SIR இணைக்கப்பட்ட பிறகு அது தெற்கு ரயில்வே என்று அழைக்கப்பட்டது. எனவே ஸ்டேஷன் மீது SIR லோகோவில் 'I' மாற்றம் செய்ய வர்ணம் பூசப்பட்டது. இன்று பதினொரு பிளாட்பாரம்கள், லிப்ட்கள், எஸ்கலேட்டர், ஏசி ஓய்வறைகள், பார்க்கிங் வசதி, ஆம்புலன்ஸ் சேவை என பல அதிநவீன வசதிகளுடன் எழும்பூர் ரயில் நிலையம் செயல்படுகிறது.

இந்தியாவிலேயே இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே இருக்கும் வசதி
எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. அதன் இரண்டு பிளாட்பார்ம்களில் கார்கள் மூலம் பயணிகளை அவர்களது பெட்டிக்கு அருகில் இறக்கிவிட வசதிகள் உள்ளன. இந்தியாவில் இரண்டு நிலையங்களில் மட்டுமே இதுபோன்ற வசதி உள்ளது, ஒன்று எழும்பூரில் உள்ளது மற்றொன்று ஹவுராவில் உள்ளது.
இத்தகைய பல சிறப்புகள் வாய்ந்தது நம் எழும்பூர் ரயில் நிலையம் பயணிகளே! அடுத்த முறை நீங்கள் அங்கு செல்லும் போது இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை எல்லாம் உற்று பார்ப்பீர்கள் தானே!



Click it and Unblock the Notifications





