எப்பொழுதும் சென்னை நகருக்கு உள்ளேயே சுற்றி சுற்றி போர் அடித்து விட்டதா? கூட்ட நெரிசலில் சிக்காமல், வெயில் தூசி இல்லாமல், இதமான வானிலையில், மலை முகடுகளுக்கு நடுவே, சுத்தமான நீர்வீழ்ச்சியில் குளித்து, இயற்கை அழகை ரசித்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறதா? ஆனால் வேலைப்பளு காரணமாக சென்னையை விட்டு நகர முடியவில்லையா? அப்படின்னா இந்த இடம் உங்களுக்குத்தான்! சென்னைக்கு மிக அருகில் இருக்கும் கிடிகி நீர்வீழ்ச்சிக்கு செல்ல நண்பர்களுடன் திட்டமிட இதுவே சரியான நேரம்! புத்துணர்ச்சி அளிக்கும் இந்த ட்ரிப்பை எப்படி பிளான் பண்ணுவது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? போன்ற பல தகவல்கள் இதோ!

சென்னைக்கு அருகில் இருக்கும் அழகிய அருவி
சென்னையில் இருந்து கிட்டத்தட்ட 200 கிமீ தொலைவில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் இந்த கிடிகி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. வேலூர், பள்ளிக்கொண்டான், குடியாத்தம் வழியாக சென்றால் இந்த நீர்வீழ்ச்சியை சுலபமாக நீங்கள் அடைந்திடலாம். இந்த இடத்திற்கு பொது போக்குவரத்து வாயிலாக செல்வது சற்றே கடினம். ஆதலால் உங்கள் சொந்த வாகனம் எடுத்து வருவது நல்லது. பைக்கில் ரைடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தாரளாமாக இந்த இடத்திற்கு பைக்கில் செல்லலாம்.

காலை அல்லது மதிய நேர பயணம் செய்வது பெஸ்ட்
சென்னையில் இருந்து அதிகாலையில் சென்று மதியம் வரை அங்கு தங்கி இருக்கலாம். அல்லது மதியம் கிளம்பி மாலை 5 மணி வரை அங்கு ஆனந்தமாக இளைப்பாறலாம். ஆனால் இருட்டுவதற்கு முன்பு அங்கிருந்து கிளம்பி விடுவது நல்லது. சென்னையில் இருந்து காலை 7 மணி அல்லது 12 மணி அளவில் நீங்கள் இந்த இடத்திற்கு கிளம்பலாம். இந்த இடத்திற்கு Google Maps இல் வழி தெளிவாக தெரிகிறது. நீங்கள் அதனைப் பின்பற்றியும் வரலாம் அல்லது வழியும் பார்க்கும் நபர்களைக் கேட்டு கொண்டும் வரலாம். ஒரு இரண்டு மணி நேர பைக் அல்லது கார் பயணத்திற்கு பிறகு நீங்கள் அந்த காட்டுப்பகுதியை அடைவீர்கள்.

ட்ரெக்கிங் முழுக்க அழகான காட்சிகள்
காட்டுப்பகுதியின் முகத்துவாரத்தை அடைந்தவுடன் நீங்கள் வந்த வண்டிகளை அங்கேயே பார்க் செய்துவிட்டு ட்ரெக்கிங் செய்ய ஆரம்பிக்கவும். ஒரு 30 முதல் 45 நிமிட ட்ரெக்கிங் செய்தவுடன் அந்த அழகிய சோலையை நீங்கள் காண்பீர்கள். வழி முழுக்க சிறு சிறு ஓடைகளும், நீறுற்றுகளும், மலை முகடுகளும் நம் கடந்து செல்ல வேண்டியிருக்கும். ஆஹா! எவ்வளவு அழகாக இருக்கிறதே என்று நீங்கள் ஆச்சர்யபட்டாலும் நீங்கள் போய் சேர வேண்டிய இடம் அவை அனைத்தையும் விட அழகாக இருப்பதோடு உங்களை மயக்கவும் தவறாது.

இறுதியில் அழகான நீர்வீழ்ச்சி
சிறிது நேரம் ஓடை, நீருற்று, மலை முகடுகள் எல்லாவற்றையும் கடந்து ட்ரெக்கிங் செய்தவுடன் இறுதியில் ஆர்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சியையும், அது உருவாக்கிய அழகான குளத்தையும் நீங்கள் கண்டு வியப்பீர்கள். நீர்வீழ்ச்சிக்கு அருகே செல்ல வசதி உண்டு, நீங்கள் அருகே சென்று ஆனந்தமாக குளித்து மகிழலாம். ஆனால் குளம் ஆங்காங்கே ஆழமாக இருக்கிறது. அதனால் உங்களுக்கு நன்கு நீச்சல் தெரியுமென்றால் மட்டுமே குளத்தில் இறங்கி நீங்கள் குளிக்கவும், இல்லையென்றால் தவிர்த்து விடுவது நல்லது. நீர்வீழ்ச்சியில் மட்டும் ஆசை தீர குளித்துக் கொள்ளுங்கள்.

பயணத்திற்கு முன் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை
இந்த இடம் சென்னைக்கு அருகில் உள்ள மற்ற நீர்வீழ்ச்சிகளை போல பிரபலமானது அல்ல. ஆக கூட்டம் சற்று குறைவாகவே இருக்கிறது. இந்த இடத்தில் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் அல்லது குடும்பத்தினருடன் இங்கு வருகை தரலாம். ஆனால் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஸ்பாட் இதுவல்ல. மேலும், இந்த இடத்தில் ஒரு கடை கூட கிடையாது. உங்களுக்கு தேவையான உணவு, வாட்டர் பாட்டில், பிஸ்கட், குளுக்கோஸ் போன்றவற்றை எடுத்து வாருங்கள். கூடவே ஷூ அணிந்து வாருங்கள், ஒரு செட் மாற்றுத்துணி, டவல், சோப் ஆகியவையும் அவசியம். முக்கியமாக இந்த அழகிய இடத்தில் குப்பை போட வேண்டாம் மக்களே!
நண்பர்களுடன் அல்லது குடும்பத்தினருடன் நீண்ட நாட்களாக ஒரு ட்ரிப் போக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உள்ளதா இந்த இடம் உங்களுக்கு ஒரு மறக்க முடியாத அமைதியான அனுபவத்தை வழங்கும். இப்போவே பிளான் பண்ணுங்கள்!



Click it and Unblock the Notifications





