பிரியாணி என்றவுடனேயே நாவில் எச்சில் ஊரிவிடும். அந்தளவிற்கு அனைவருக்கும் பிடித்த உணவு இது. குறிப்பாக, இந்தியாவில் பிரபலமாக உள்ள விசேச உணவுகளில் பிரியாணி முக்கியப் பங்கு வகிக்கிறது என்றே கூறலாம். சனி, ஞாயிறோ, நண்பனின் டிரீட்டோ பிரியாணி இல்லாம எதுவுமே இல்லை என்று தான் சப்புக் கொட்டி சொல்ல வேண்டும். அதெல்லாம் சரி, நாளைக்கு பக்ரீத் பண்டிகை, உங்க நண்பர்கள் யாராச்சும் வீட்டுக்கு பிரியாணி விருந்துக்காக அழைப்பு விடுத்திருக்காங்களா ?. இல்லைன்னாலும் கவலைய விடுங்க பாஸ். ஆயிரம் தான் இருந்தாலும் அவங்க வீட்டு பிரியாணி மாதிரி வராட்டியும், அதற்கு ஈடான சில பிரியாணி ஸ்பெஸல் ஏரியாவுக்கு போய் ரசிச்சு ருசிச்சு தான் சாப்பிட்டுட்டு வரலாமே.

தலபாக்கட்டி பிரியாணி
எடுத்தவுடனேயே தலப்பாக்கட்டி பிரியாணியா... ஆமாங்க, நம்ம ஊருல தலப்பாக்கட்டி பிரியாணின்னாலே தனி சிறப்பு தானே. திண்டுக்கல்லுன்னு சொன்னதும் பூட்டு ஞாபகத்திற்கு வரமாதிரி கூடவே வரதுதான் தலப்பாக்கட்டி பிரியாணியும். திண்டுக்கல் போற யாரும் மிஸ்பண்ணக்கூடத அம்சம் தான் இது.

ஹைதராபாத்
நம்ம ஊருல முக்கியமான ஏரியாவுல இருக்குற ஒரு உணவகம் கூட்டம் நிறைப்பி வழியுதுன்னா அது நிச்சயம் ஹைதராபாத் பிரியாணிக் கடையாகத்தான் இருக்கும். பல மணமூட்டும் கலவைகளை சேர்த்து கமகன்னு சாலையில் செல்வோரையும் கூட சுண்டி இழுக்கும் ஹைதராபாத் பிரியாணி இந்தியாவிலேயே உணவுகளிலேயே மிகவும் பிரபலமானதாக உள்ளது. மற்ற பிரியாணி சமைக்கும் முறையிலிருந்து இருந்து முற்றிலும் வேறுபட்ட முறையில் சமைக்கப்படுவதினால் கிடைக்கும் பிரத்யேகமான சுவை தான் ஹைதராபாத் பிரியாணியின் இத்தகைய புகழுக்குக் காரணமே.

தலசேரி பிரியாணி
கேரளா மட்டும் வெள்ளத்துல பாதிக்காம இருந்திருந்தா நம்ம பசங்க எல்லாம் தலசேரிக்கு பறந்து போயிருப்பாங்க. காரணம் கேரளத்து ஸ்பெசல் தலசேரி பிரியாணி. குறைந்து அளவு மசாலாக்கள் மட்டுமே சேர்த்தாலும் அவற்றில் சேர்க்கப்படும், பழங்களும், நெயும் பிரியாணியை எவ்வித இராயனமும் இன்றி சுவைமிக்கதாக மாற்றுகிறது.

ஆம்பூர் பிரியாணி
நாடு முழுவதும் எப்படி ஹைதராபாத் பிரியாணி சிறப்போ, அந்த மாதிரி தான் ஆம்பூர் பிரியாணியும். தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகாவில் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலும், ஆந்திராவில் முக்கியப் பகுதிகளிலும் ஆம்பூர் பிரியாணிக் கடைகளை காண முடியும். ஹைதராபாத் பிரியாணியைப் போலவே இதுவும் சமைக்கும் முறையில் வேறுபட்டது. ஆம்பூர் பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் அரிசியும், மசாலா பொருட்களும் கூட வேறுபட்ட ஒன்று தான். இதனால் தான் இது நாடறிந்த பிரியாணியாக உள்ளது.

முழு ஆட்டு உபி. பிரியாணி
ஒரு முழு ஆட்டையே சாப்பாட்டுக்குள்ள மறைச்சு வச்சிருந்தா எப்படி இருக்கும். இந்த அனுபவம் நிச்சயம் உத்திர பிரதேசத்தில் தான் கிடைக்கும். உத்திர பிரதேசத்திற்கு உட்பட்ட லக்னோவில் தயாரிக்கப்படும் பிரியாணி ஆவாதி பிரியாணி என்றழைக்கப்படுகிறது. இதில், மாமிசம் தனியாகவும், அரிசி தனியாகவும் சமைக்கப்பட்டு பின்னர் ஒன்றாக கலக்கப்படுகிறது. ஒரு முழு ஆட்டை சுத்தம் செய்து நிறைய மசாலாப் பொருட்களைச் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து சமைத்தபின் பிரியாணி சாதத்துடன் சேர்த்து பரிமாறப்படகிறது.

ஆந்திரா மூங்கில் பிரியாணி
நம்ம ஊரில் ஒரு சில கிராமங்களில் மூங்கில் பிரியாணி பார்த்திருப்பீர்கள். ஆனால், அதன் பூர்வீகம் ஆந்திராவில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கு ஆகும். இந்த பள்ளத்தாக்கில் வளரும் மூங்கில்களில் பிரியாணி தயாரிக்கப்படும் விதமும், அதன் சுவையும் வித்தியாசமானதாக இருக்கும். மூங்கில் மரத்தை சிறு சிறு துண்டுகளாக குடுவை போல் வெட்டி, அதன் உள்ளே பிரியாணி தயார் செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து நெருப்பில் வாட்டும் போது வரும் சுவை கலந்த மனமே வார்த்தையில் அடங்காத ஒன்று தான்.

மங்களூர்
கர்நாடகாவிற்கு உட்பட்ட மங்களூர் இயற்கை எழில் கொஞ்சும் காடுகளுக்கும், அரபிக்கடலுக்கும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய சுற்றுலாத் தலங்கள் என எத்தனை சிறப்பம்சங்களைப் பெற்றிருந்தாலும் கூடவே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது இங்கு தயாரிக்கப்படும் பிரியாணி. தனித்துவமான மனத்துடன் தயாரிக்கப்படும் பிரியாணையை மங்களூர் சுற்றுலா செல்வோர் தவறாமல் ருசித்து வர வேண்டும்.



Click it and Unblock the Notifications






