கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தலச்சேரி நகரம் வட கேரளத்திலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இது தெல்லிசேரி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பாரம்பரியச் செழுமை மற்றும் சொக்க வைக்கும் இயற்கை எழில் அம்சங்களை கொண்டுள்ள இந்த நகரம் ‘மலபார் கடற்கரைப்பகுதி’யின் கிரீடத்தில் மற்றுமொரு வைரக்கல் என்று சொல்லலாம். இந்தியாவில் சர்க்கஸ், கிரிக்கெட் மற்றும் கேக் தயாரிப்பு போன்றவை தோன்றிய பிரதேசமாக இந்த நகாம் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.
வணிகம் செய்யும் நோக்கத்துடன் ஆங்கிலேயர் இந்த தலச்சேரிக்கு 1682ம் ஆண்டு வருகை தந்துள்ளனர். கடற்கரைக்கு அருகிலேயே அமைந்திருந்ததால் இது ஒரு வணிகக்கேந்திரமாக மாறியுள்ளது.
பலவிதமான அரசியல் மற்றும் இலக்கிய செயல்பாடுகள் இங்கு உருவாகியிருப்பதால் இது மலபார் பகுதியின் கலாச்சார தலைநகரமாகவும் அறியப்படுகிறது. முதல் மலையாள தினசரிப்பத்திரிகையும் நாவலும் இங்கு அச்சிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றின் அதிர்வுகளைக்கொண்ட நகரம்
இங்கிலிஷ் சர்ச், மீனவர் கோயில்(ஃபிஷர்ஃபோக் டெம்பிள்), ஓவர்பர்ரி'ஸ் ஃபோலி, தலச்சேரி கோட்டை மற்றும் ஜும்மா மஸ்ஜித் போன்றவை தலச்சேரி சுற்றுலாத்தலத்தில் பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.
வரலாற்றுப்பிரியர்களுக்கு இங்குள்ள குண்டர்ட் பங்களா எனும் பாரம்பரிய நினைவுச்சின்னம் வெகு பிடித்தமானதாக இருக்கும். முதல் மலையாள – ஆங்கில அகராதியை தொகுத்த ஜெர்மானிய அறிஞரான குண்டர்ட் வாழ்ந்த மாளிகையே இது.
இந்தியாவில் மிக முக்கியமான ஃப்ரெஞ்சு காலனியாக விளங்கிய ‘மாஹே’ நகரம் தலச்சேரியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த நகரத்துக்கும் ஒரு முறை விஜயம் செய்வது சிறந்தது.
வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்த நகரத்திலுள்ள வெஸ்லி’ஸ் பங்களா, ரண்டத்தரா ஏலக்காய் எஸ்டேட், கத்தோலிக் ரோசரி சர்ச், வாமில் கோயில், தாகூர் பூங்கா, உதயா களரி சங்கம், கவர்ன்மென்ட் ஹவுஸ் மற்றும் ஒடத்தில் பள்ளி போன்ற சுற்றுலா அம்சங்கள் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகளை கவர்ந்து இழுக்கின்றன.
தலச்சேரியிலிருந்து 9 கி.மீ தூரத்தில் முழப்பிளாங்காட் பீச் எனும் ‘டிரைவ் இன் பீச்’ அமைந்துள்ளது. கேரளாவிலேயே இதுபோன்ற ஒரே கடற்கரை இதுதான் என்னும்படியான புகழை இந்த கடற்கரை பெற்றுள்ளது.
கேக் தயாரிப்பு மற்றும் பேக்கரி தொழில் போன்றவை உருவான பிரதேசம் என்பதோடு செழுமையான உணவுப் பாரம்பரியத்தையும் இது கொண்டுள்ளது. பொதுவாக இனிமையான சுற்றுப்புற சூழலுடன் காட்சியளிக்கும் தலச்சேரி நகரம் ரயில் வசதி மற்றும் சாலை போக்குவரத்து வசதிகளுக்கு எந்த குறையுமில்லாமல் காணப்படுகிறது.
பாரம்பரிய அம்சங்கள், இயற்கை, உணவு ருசி மற்றும் வரலாற்றுப்பின்னணி போன்றவை நிரம்பிய ஒரு வித்தியாசமான சுற்றுலாத்தலத்தை தேடும் பயணிகளுக்கு தலச்சேரி சரியான தேர்வு ஆகும்.