தலச்சேரி கோட்டை அல்லது தெலிசேரி கோட்டை என்றழைக்கப்படும் இந்த வரலாற்று சின்னம் 1708ம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்டுள்ளது.
காலனிய ஆட்சிக்காலத்தின்போது வணிக நிர்வாகம் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் போன்றவற்றில் இந்த கோட்டை முக்கிய பங்காற்றியுள்ளது. முழப்பிளாங்காட் கடற்கரையை ஒட்டி ஒரு குன்றின்மீது நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கோட்டை காலனிய கால வரலாறு மற்றும் மைசூர் ஊடுறுவல் போன்ற சுவாரசியமாண கதைகளை தன் பின்னணியில் கொண்டுள்ளது.
பிரம்மாண்டமாக உயர்ந்து காட்சியளிக்கும் சுற்றுச்சுவரையும் நுணுக்கமான குடைவு வேலைகளைக் கொண்டுள்ள மரக்கதவுகளையும் இக்கோட்டை கொண்டுள்ளது. அரபிக்கடலை நோக்கி ரகசிய சுரங்கப்பாதைகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. வரலாற்றுக் குறிப்புகளின்படி, மைசூர் மன்னரான ஹைதர் அலி இக்கோட்டையை 1781ம் ஆண்டில் கைப்பற்ற முயன்று தோல்வியடைந்ததாக தெரிய வருகிறது.
தலச்சேரி கோட்டையின் அடித்தளம் பெரிய லாடரைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. வாயிற்பகுதியில் 18ம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட ஒரு சுவரோவியம் காணப்படுகிறது. மேலும், இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்படும் தேசிய நினைவுச்சின்னங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கோட்டை பற்றிய விபரங்கள் அடங்கிய காட்சி மாடம் ஒன்றையும் இதன் உள்ளே காணலாம். சமாதி ஸ்தல புகைப்படங்கள், சின்னங்கள் குறித்த தகவல்கள், ஓவியங்களின் புகைப்படங்கள் போன்றவை இதில் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
நேரம்: காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
கட்டணம்: ஏதுமில்லை