இன்றைய பரபரப்பான கால சூழ்நிலையில் வாரம் முழுவதும் வேலையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் மற்றும் மன சோர்வினை போக்குவதற்கு ஏற்ற ஒரு பசுமையான மற்றும் அமைதியான இடம் முட்டுக்காடு ஏரி ஆகும். இந்த இடம் சென்னையில் இருந்து மகாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. முட்டுக்காடு ஏரி, இயற்கை மற்றும் பசுமையால் சூழப்பட்ட அமைதியான பகுதியாகும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு சென்னை, புதுச்சேரியில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கிறார்கள். வார இறுதி நாட்களில் இங்கு குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருடன் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இங்கு படகு இல்லங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு தங்கியும் இந்த ஏரியின் அழகை ரசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது பலவிதமான பறவைகள் மற்றும் மீன்கள் நிறைந்து ஏரியாக காணப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு குழாம் செயல்பட்டு வருகிறது. இந்தப் படகுக் குழாமில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்யும் வகையில் மிதக்கும் படகுகள், பெடல் படகுகள், இயந்திரப் படகுகள் மற்றும் விசை படகுகள் என பல்வேறு விதமான படகு சவாரிகள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் இங்கு தமிழகத்தின் முதல் மிதவை உணவக கப்பல் ஒன்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் கொச்சியை சேர்ந்த கிராண்ட் டியூனர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலமாகவும் தனியார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் மூலம் சுமார் 5 கோடியில் செயல்பட்டு வருகிறது. இரண்டு அடுக்குகளுடன் இந்த உணவக கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியும், முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், மேல் தளத்தில் அமர்ந்து இயற்கை அழகை ரசித்த படியே உணவு உண்டு மகிழும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மீன், நண்டு என பலவிதமான உணவுகள் சுற்றுலா பயணிகளை நாக்கு சுவையை சுண்டி இழுக்கும் வகையில் வழங்கப்பட்டு வருவதால் இந்த உணவும் தற்போது சுற்றுலா பயணிகளின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. முட்டுக்காடு ஏரியில் நீர் சருக்கு சாகசங்களும் செய்து மகிழும் வகையில் விண்ட் சர்பிங் செய்து மகிழலாம்.
வசதிகள் :
* உணவகம்: இங்கு பல்வேறு வகையான சிற்றுண்டிகள், உணவுகள் மற்றும் பானங்கள் பெறும் வகையில் உணவகம் அமைந்துள்ளது.
* கழிப்பறை: பார்வையாளர்களுக்கு அடிப்படைக் கழிப்பறை வசதிகள் உள்ளன.
* பார்க்கிங்: கார் பார்க்கிங் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு போதுமான பார்க்கிங் வசதி உள்ளது.
* பார்வை நேரம்: ஒவ்வொரு நாளும் காலை 9:30 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வை நேரம் செயல்படும்.
* நுழைவு கட்டணம்: படகு இல்லத்திற்கு நுழைவு கட்டணம் ரூ.10 வசூலிக்கப்படுகிறது. மேலும் பல்வேறு படகு சவாரிகள் மற்றும் நீர் விளையாட்டுகளுக்கு கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
இங்கு படகு சவாரி செய்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.முன்பதிவு செய்வோர் ttdconline.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.தமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் மேலாளரை 919176995826 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும், படகு சவாரிக்கு பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications






