கேரள மாநிலம் எர்ணாக்குளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் காலடி என்ற அழகிய கிராமம், ஆதிசங்கரரின் பிறப்பிடமாக புகழ்பெற்று திகழ்ந்து வருகிறது. இந்த கிராமத்தில் 1910-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆதிசங்கரர் கோயிலுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், புனித யாத்ரீகர்களும் வந்து செல்கின்றனர். சாசலம் என்று முன்னர் அழைக்கப்பட்ட காலடி கிராமம் உருவாகி நூறாண்டுகள் ஆனதை தொடர்ந்து சமீபத்தில்தான் 2010-ஆம் ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
காலடி கிராமத்தில் ஆதிசங்கரர் மற்றும் அவருடைய அன்னையை குறித்து சுவாரசியமான புராணக் கதை ஒன்று உள்ளது. அதாவது ஒருமுறை 'பூர்ணா' என்று முன்னர் அழைக்கப்பட்ட பெரியார் நதியில் நீராடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆதிசங்கரரின் தாயார் வழியிலேயே மயங்கி விழுந்து விட்டார். உடனே செய்வதறியாது தவித்த ஆதிசங்கரர் கிருஷ்ணரை வேண்டிக் கொண்டார். அப்போது கிருஷ்ணர் ஆதிசங்கரரிடம், 'நீ கால் வைத்த இடத்தில் ஒரு நதி பாயும்' என்றார். இதன் காரணமாக ஆதிசங்கரரின் தோட்டத்தின் அருகிலிருந்து நதி ஒன்று பாயத்தொடங்கியதாக புராணம் கூறுகிறது.
அதன்பிறகு ஆதிசங்கரர் கிருஷ்ணருக்காக சிறிய கோயில் ஒன்றை கட்டி அங்கு அவருடைய புகழ்பெற்ற அச்சுதாஷ்டகத்தை பாராயணம் செய்யத் தொடங்கினார். காலடி கிராமம் எண்ணிலடங்கா கோயில்கள் மற்றும் ஆஸ்ரமங்களுக்காக மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது. அதிலும் குறிப்பாக ராமகிருஷ்ண ஆஷ்ரமம், கல்லில் தேவி கோயில், சிருங்கேரி மடம், மஹாதேவா கோயில், வாமனமூர்த்தி கோயில், குழுப்பில்காவ் ஜலதுர்கா கோயில் போன்ற இடங்கள் நீங்கள் காலடி கிராமத்துக்கு சுற்றுலா வரும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிவை.
காலடியில் அமைந்திருக்கும் ராமகிருஷ்ண ஆஷ்ரமம், மேற்கு வங்கத்தில் சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட பேலூர் மடத்தின் கிளையாகும். அதோடு இங்கு பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ண கோயிலிலிருந்து வடித்து கொண்டுவரப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சிலை ஒன்றும் உள்ளது. இந்த ஆஷ்ரமத்தின் பிரார்த்தனை கூடம் மிகவும் பெரிதாக விசாலமாக உருவாக்கப்பட்டுள்ளது. ராமகிருஷ்ண ஆஷ்ரமத்தில் பிரம்மனந்தோயம் என்ற பெயரில் பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இது தவிர அறக்கட்டளை ஒன்றும், ஒரு நூலகமும் இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்த ஆஷ்ரமம் பசுமையான இயற்கை சூழலில் அமைந்திருப்பதால் தனிமையின் ஏகாந்தத்தை சுகித்தவாறு அருகாமை பகுதிகளுக்கு நடை பயணம் செல்வது அலாதியான அனுபவமாக இருக்கும்.
ஆதி சங்கர கீர்த்தி ஸ்தம்பம் மண்டபம் காஞ்சி காம கோடி மடத்தால் கட்டப்பட்டது ஆகும். இந்த எட்டு மாடி மண்டபம் ஒரு பாதுகா மண்டபத்தில் சென்று முடிகிறது. இதன் கதவுகளில் குருவினுடைய பாதச் செருப்பு போன்ற வடிவில் கைப்பிடி குமிழ் ஒன்று வடிக்கப்பட்டிருப்பதால் இது பாதுகா மண்டபம் என்று அழைகப்படுகிறது. ஆதி சங்கர கீர்த்தி ஸ்தம்பத்தின் நினைவு மண்டபத்தில் ஆதி சங்கரின் வாழ்கையை எடுத்துச் சொல்லும் விதமாக எண்ணற்ற ஓவியங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. அதோடு இந்த மண்டபத்தில் விநாயகர் மற்றும் ஆதி சங்கரரின் சிலைகளையும் நீங்கள் பார்க்கலாம். மேலும் 8 பக்கங்களை கொண்ட ஆதி சங்கரரின் ஸ்தூபி ஒன்றும் இங்குள்ளது.
காலடி கிராமத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கல்லில் தேவி கோயில் 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜைன கோயிலாகும். 28 ஏக்ரா பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பாறைக்குடைவு கோயிலை அடைய நீங்கள் கல்லில் செதுக்கப்பட்ட 120 படிகளை ஏறிக் கடக்க வேண்டும். இந்தக் கோயில் ஜைன மதத்தின் மீது ஈடுபாடு கொண்ட பிசாரடி என்ற பிராமணப் பிரிவை சேர்ந்த கல்லில் பிசாரடி எனும் குடும்பத்தாருக்கு சொந்தமானது. கல்லில் தேவி கோயிலில் முதன்மை தெய்வமான துர்கா தேவியை தவிர, மகாவீரர், பர்ஷவநாத், பத்மாதேவி, பிரம்மா போன்ற தெய்வங்களுக்கும் சிலைகள் உள்ளன. இங்கு பொதுவாக இரவு வேளைகளில் பூஜைகள் நடத்தப்படுவதில்லை. மாறாக மதியத்துக்கு முன்பாகவே பூஜைகள் முடிவடைந்துவிடும். அதன் பிறகு கோயில் நடை சாத்தப்பட்டுவிடும். கல்லில் தேவி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 8 நாட்கள் வெகு விமரிசையாக ஆண்டுத் திருவிழா கொண்டாடப்படும். அப்போது தெய்வ விக்ரகங்கள் பெண் யானைகள் மீது பெரும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.