கேரள மாநிலம் எர்ணாக்குளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் காலடி என்ற அழகிய கிராமம், ஆதிசங்கரரின் பிறப்பிடமாக புகழ்பெற்று திகழ்ந்து வருகிறது. இந்த கிராமத்தில் 1910-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆதிசங்கரர் கோயிலுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், புனித யாத்ரீகர்களும் வந்து செல்கின்றனர். சாசலம் என்று முன்னர் அழைக்கப்பட்ட காலடி கிராமம் உருவாகி நூறாண்டுகள் ஆனதை தொடர்ந்து சமீபத்தில்தான் 2010-ஆம் ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
சுவாரசியமான புராணக் கதை!
காலடி கிராமத்தில் ஆதிசங்கரர் மற்றும் அவருடைய அன்னையை குறித்து சுவாரசியமான புராணக் கதை ஒன்று உள்ளது. அதாவது ஒருமுறை 'பூர்ணா' என்று முன்னர் அழைக்கப்பட்ட பெரியார் நதியில் நீராடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆதிசங்கரரின் தாயார் வழியிலேயே மயங்கி விழுந்து விட்டார்.
உடனே செய்வதறியாது தவித்த ஆதிசங்கரர் கிருஷ்ணரை வேண்டிக் கொண்டார். அப்போது கிருஷ்ணர் ஆதிசங்கரரிடம், 'நீ கால் வைத்த இடத்தில் ஒரு நதி பாயும்' என்றார். இதன் காரணமாக ஆதிசங்கரரின் தோட்டத்தின் அருகிலிருந்து நதி ஒன்று பாயத்தொடங்கியதாக புராணம் கூறுகிறது.
அதன்பிறகு ஆதிசங்கரர் கிருஷ்ணருக்காக சிறிய கோயில் ஒன்றை கட்டி அங்கு அவருடைய புகழ்பெற்ற அச்சுதாஷ்டகத்தை பாராயணம் செய்யத் தொடங்கினார்.
காலடி கிராமம் எண்ணிலடங்கா கோயில்கள் மற்றும் ஆஸ்ரமங்களுக்காக மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது. அதிலும் குறிப்பாக ராமகிருஷ்ண ஆஷ்ரமம், கல்லில் தேவி கோயில், சிருங்கேரி மடம், மஹாதேவா கோயில், வாமனமூர்த்தி கோயில், குழுப்பில்காவ் ஜலதுர்கா கோயில் போன்ற இடங்கள் நீங்கள் காலடி கிராமத்துக்கு சுற்றுலா வரும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிவை.