கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பூத்துக் குலுங்கும் மலர்கள், மனதை சொக்க வைக்கும் நறுமனப் பள்ளத்தாக்கு, மேகக் கூட்டங்களில் நடுவே வானவில் போல் தோன்றும் வண்ணமிகு அழகிய காடுகள், எப்பேர்ப்பட்ட கல்மனம் கொண்ட மனிதராக இருந்தாலும் சற்றே இலகிவிடுவர் இக்காட்சிகளைக் காணும் போது. அந்த மாதிரியான ஒரு ஏரியாவுக்குத்தான் இந்த வாரம் நாம சுற்றுலா போக போறோம். என்ன ரெடியா ?
மகாராஸ்டிரா
மகாராஸ்டிரா என்றதும் லொனவோலா, மஹாபலேஸ்வரர் போன்ற மலைப் பிரதேச தலங்களுக்குத் தான் சுற்றுலா என்றில்லை. இம்மாநிலத்தில் காலடி படாத பரிசுத்தமான சுற்றுலாத் தலங்களும் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் சட்டரா மலைப் பிரதேசம். இயற்கை ரசனைமிக்கவராக நீங்கள் இருந்தால் கட்டாயம் இப்பகுதிக்கு சுற்றுலா சென்று வரவேண்டும். அத்தனை அம்சங்கள் இப்பகுதியில் நிறைந்து காணப்படுகிறது.
சட்டாரா
மகாராஸ்டிராவில் இருந்து 370 கிலோ மீட்டர் தொலைவிலும், புனேவில் இருந்து 113 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது சட்டாரா மலைப் பிரதேசம். இயற்கை அம்சங்கள் கொட்டிக் கிடக்கும் இப்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாக வனவிலங்குகளுக்கும், குறிஞ்சி மலர்களுக்கும் பெயர் பெற்றுள்ளது. குறிப்பாக, பனிக் காலத்தில் இங்கே பயணிப்பது கூடுதல் அம்சமாக இருக்கும்.
காஸ் பீடபூமி
புனேவில் இருந்து கன்டலாவைக் கடந்தால் அடுத்து நம் கண்ணில் தென்படுவது சட்டாரா சாலை சந்திப்பு. அங்கிலுத்து இடதுபுரமாக 25 கிலோ மீட்டர் தொலைவில் காஸ் பீடபூமி என்றும் அழகிய மலைத் தொடரைக் காணலாம். சுற்றுவட்டாரம் முழுவதும் மலைகளால் சூழ்ந்திருக்க இப்பகுதியில் அடையாளமாக கலர் கலரான பூக்கள் பூத்துக் குலுங்கும். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான இவ்விடத்தில் பள்ளத்தாக்குகளின் ஒரு அங்கமாக மலர்களும் காணப்படுகிறது. இந்த காஸ் பள்ளத்தாக்கில் மட்டும் சுமார் 850 வகையான பூக்கும் தாவரங்கள் காணப்படுவது தனிச் சிறப்பு.
அலங்கரிக்கும் கோட்டை
சட்டா மலைப் பிரதேசத்தின் மற்றொரு சிறப்பம்சம், இங்குள்ள இரண்டு கோட்டைகள். ராஷ்ட்ரகுடாக்களால் முதலில் இந்த சட்டாரா பகுதி ஆட்சி செய்யப்பட்டு பின், மராட்டிய பேரரசரின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதற்கான ஆதாரங்களாக இப்பகுதியில் மலைக் காடுகளின் நடுவே அஜிங்கியட்டரா மற்றும் சஜ்ஜாகாத் என்னும் இரண்டு அழகிய கோட்டைகள் உள்ளன. இவை இரண்டுமே மராட்டிய பேரரசின் வரலாற்றை நினைவுகூறுகிறது.
காஸ் பதர்
காஸ் பதர் என்று அழைக்கப்படும் காஸ் பீட பூமி டப்போலாவின் முக்கிய சுற்றுலாத் தலமாfத் திகழ்கிறது. இந்த அகன்ற பள்ளத்தாக்கிற்கு முன்பனிக் காலமான செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலங்களில் பணிப்பது நல்ல அனுபவமாக இருக்கும். குறிப்பாக, இந்த பனிக் காலத்தில் 150-க்கும் அதிகமான அரியவகைப் பூக்கள் மலை முழுவதும் நிரம்பி காட்சியளிக்கும்.
டப்போலா கோட்டைகள்
டப்போலாவில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த தொன்மையான கோட்டைகளாக வஸோட்டா மற்றும் ஜெய்காட் கோட்டைகள் உள்ளன. ஒரு காலத்தில் அசைக்க முடியாத கோட்டைகளாய் திகழ்ந்த இவை இரண்டுமே இன்று மலை மலர்ச் செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு பசுமை நிலமாகவே காட்சியளிக்கிறது.
வஸோட்டா கோட்டை
வஸோட்டா கோட்டை காஸ்-யில் உள்ள சிவசாகர் ஏரிக்கு அருகில், கொய்னா வனவிலங்கு சரணாலயத்தின் பசுமையான காடுகளுக்கு நடுவே அமைந்துள்ளது. இந்தக் கோட்டை ஷிலஹர் சாம்ராஜ்யத்தின் இரண்டாம் போஜ்ராஜ் மன்னரால் கட்டப்பட்டு, பின் சிவாஜி மகாராஜாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆபத்தான செங்குத்துப் பாறைகளுக்கும், தலை சுற்ற வைக்கும் மலைச் சிகரங்களுக்கும் உறைவிடமாய் திகழ்ந்து வருகிறது இக்கோட்டை. நீங்கள் சாகசப் பிரியராக இருந்தால் கட்டாயம் இங்கே ஒரு முறை சென்று வரவேண்டும்.
சிவசாகர் ஏரி
சட்டாரா மலைப் பிரதேசத்தின் அழகுக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது சிவசாகர் ஏரியே. சுமார் 100 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீண்டு கிடக்கும் இந்த ஏரி, கொய்னா அணையின் நீர்தேக்கமாக இருந்து வருகிறது. இந்த ஏரியில் நீர் விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்கள் கொண்டாடி மகிழ வனத்துறையினரால் விளையாட்டுகளும் நடத்தப்படுகிறது. நீர் ஸ்கூட்டர், படகுச் சவாரி, கயாக் என்னும் சிறுபடகில் சவாரி செய்வது cள்ளிட்ட போட்டிகள் இங்கே பிரசித்தமானவை.
எப்படிச் செல்வது ?
சட்டாரா மலைப் பிரதேசத்திற்கு மிக அருகில் உள்ள விமான நிலையம் 146 கிலோ மீட்டர் தொலைவில் புனேவில் உள்ளது. மும்பை, பெங்களூர், ஹைதராபாத், சென்னை, கொச்சி, டில்லி, கொல்கத்தா, கோவா உள்ளிட்ட பிற பகுதிகளுடன் இவ்விமான நிலையம் இணைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புனேவை ரயில் மலமாகவும் அடையலாம். அங்கிருந்து சட்டாரா சென்றடைய தனியார் வாடகைக் கார் வசதிகள் உள்ளன.