நம்மில் பெரும்பாலானோருக்கு வானில் உயரப் பறந்து பயணம் செய்ய வேண்டும் என்பது வாழ்நாள் ஆசையாக இருக்கும். இதில் பலரும் விமானத்தில் பயணம் செய்து தங்களது சையை நிவர்த்திசெய்து கொள்வர். ஆனால், எளிதில் கிடைக்காத ஹெலிகேப்டர் பயணம் என்பது வெற்றுக் கனவாகவே மறைந்து விடும். அப்படிப்பட்ட ஆசைகளும், கனவுகளும் உங்களது மனதில் நிலைகொண்டுள்ளதா ?. எங்கே செல்வது, வாய்ப்பு கிடைத்தாலும் அதில் பயணிப்பதற்கான கட்டணம் அதிகமாச்சேன்னு வருத்தப்பட்டுட்டு இருக்கீங்களா ?. கவலைய விடுங்க, பொள்ளாச்சியில் உங்களுக்காகவே ஹேலிகாப்டர் திருவிழா இன்னும் ஓரிரு நாள்ள வருது.
பொள்ளாச்சி
தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் கோயம்புத்தூரை அடுத்து அமைந்துள்ளது பொள்ளாச்சி வட்டம். கோயம்புத்தூர் மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள இந்த ஊர், கோவை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் சிறப்பு பெற்றுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் ரம்மியமான வானிலை, மனதைக் கொள்ளைகொள்ளும் பசுமைத் தோட்டங்கள், எத்தனை முறை பயணம் செய்தாலும் திகட்டாத அனுபவத்தை அளிக்கும்.
சுற்றுலா தலங்கள்
சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே பொள்ளாச்சி சற்று சுற்றுலாத் தலங்கள் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளது. இங்கு அமைந்துள்ள முருகன் திருக்கோவில் பொள்ளாச்சியின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். ஆசியாவிலேயே மிகப் பெரிய வெல்லச் சந்தையும் இங்கே தான் உள்ளது. அதேப்போல், தென்னிந்தியாவின் மிகப்பெரும் இரும்பு மற்றும் கால்நடைச் சந்தையும் இங்கு அமையப்பெற்றுள்ளன.
அணைக்கட்டுகள்
உலக புகழ்பெற்ற சந்தைகளைத் தவிர்த்து அணைக்கட்டுகளுக்கும் பொள்ளாச்சி பெயர்பெற்றுள்ளது. இதில், நீரார் அணை, ஆழியார் அணை, மீன்கார அணை, சோழியார் அணை, பெருவரிப்பள்ளம் அணை ஆகியன இங்குள்ள சில பிரபலமான அணைக்கட்டுகளாகும்.
கோவில்கள்
இந்நகரில், ராமலிங்க சௌடேஷ்வரி அம்மன் கோவில், முருகன் கோவில், மாசாணி அம்மன் கோவில், அழகுநாச்சி அம்மன் கோவில், திருமூர்த்தி கோவில், சூலக்கல் மாரியம்மன் போன்ற பல ஆன்மீகத் தலங்களும் பொள்ளாச்சியில் பிரபலமான கோவில்களாகும். மேலும், ஆழியார் சித்தாஷ்ரமம், ஆனைமலை வனவிலங்கு சரணாலயம், டாப் ஸ்லிப், வால்பாறை, அமராவதி அணை மற்றும் முதலை பூங்கா ஆகிய பல இடங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
ஹெலிகாப்டர் திருவிழா
விமானத்தில் கூட குறைந்த கட்டணத்தில் பயணித்து விடலாம். ஆனால் ஹெலிகாப்டர் அப்படியா ?. இதில் பறக்க வேண்டும் என்ற நமது ஆசையை நிறைவேற்றும வகையில் இனி ஒவ்வொரு வருடமும் ஹெலிகாப்டர் திருவிழா நம்ம பொள்ளாச்சியில நடத்தப் போறாங்க. அப்புறம் என்னங்க ?. உங்க ஆசைய நிறைவேற்ற இதைவிட வேற வாய்ப்பு கிடக்குமா என்ன ?.
எப்போது ?
பொள்ளாச்சியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் ஹெலிகாப்டர் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை இந்த திருவிழா நடைபெறவுள்ளது. அதுவும், பொள்ளாச்சியில் உள்ள நா.மூ.சுங்கம், ராமு கலைக் கல்லூரியில தாங்க. நம்ம அரசியல் வாதிங்க மட்டும் தான் இதுபோன்ற வாகனத்தில் பறப்பாங்களா என்ன ?. நாமும் எதற்கும் குறைஞ்சவங்க இல்லைன்னு பறந்துகாட்டலாமா..!
எத்தன ரூபாயின்னு தெரியுமா ?
இந்த திருவிழாவில் ஹெலிகாப்டரில் பயணிக்க 10 நிமிடத்தில் சுமார் 15 கிலோ மீட்டர் பயணிக்க 4199 ரூபாயும், அடுத்து 20 நிமிடத்தில் 30 கிலோ மீட்டருக்கு 7,999 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ராமு கலைக் கல்லூரியில் துவங்கும் இந்த பயணம் ஆழியாறு அணை மற்றும் அதை ஒட்டிய வனப்பகுதி என ஒரு த்ரில் பயணம் போக ரெடியா ?.
எப்படி செல்வது ?
கோயம்புத்தூர் விமான நிலையம் பொள்ளாச்சிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. முக்கியமான, அனைத்து இந்திய, தென்னாசிய, மற்றும் வளைகுடா நகரங்களுக்கும், இங்கிருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் உள்ளன. பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து அருகில் உள்ள ஊர்களுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்புத்தூர் இரயில் நிலையமே, இவ்வூருக்கு மிக அருகில் அமைந்துள்ள இரயில் நிலையமாகும்.