அகநாஷினி ஆற்றின் கரையில் 4.1 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோட்டை பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சமாகும். இதன் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்துக்காக பிரசித்தி பெற்றுள்ள இந்த கோட்டை லேடரைட் எனப்படும் சிவப்பு பாறாங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இரட்டை கோட்டைச்சுவருடன் காவல் கோபுரங்களையும் தூண்களையும் இது கொண்டுள்ளது. பல போர்களை சந்தித்துள்ளதாக கூறப்படும் இந்த மீர்ஜான் கோட்டையின் பின்னணியில் பல கதைகள் வழங்கப்படுகின்றன. இந்த கோட்டைக்கு ஒரு பிரதான வாயிலும் மூன்று துணை வாயில்களும் உள்ளன.
ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட பல கிணறுகள் இந்த கோட்டையில் காணப்படுகின்றன. மேலும் இந்த கிணறுகளிலிருந்து கோட்டையை சுற்றியுள்ள அகழிக்கு இணைப்புப்பாதைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் கதைகளின்படி 16ம் நூற்றாண்டில் கெர்சொப்பா'வைச்சேர்ந்த ராணி சென்னபைரதேவி இந்த கோட்டையை கட்டி 54 ஆண்டுகள் இதில் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
தற்சமயம் சிதிலமடைந்து காணப்படும் இந்த கோட்டை இந்திய தொல்லியல் துறையால் சமீபத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பிரதான வாயில், தர்பார் ஹால், சுரங்க வழி, சந்தை வளாகம் போன்றவற்றை மறுசீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த கோட்டை வளாகத்தில் ஒரு பெரிய மரத்தின் அருகில் ஹிந்து கடவுள் சிற்பங்களை காண முடிகிறது. 1652ம் ஆண்டைச்சேர்ந்த குறிப்புகளுடன் கூடிய தங்க நாணயங்கள், 50 இரும்பு துப்பாக்கிக்குண்டுகள், சர்ப்பமல்லிகா ராஜவம்சத்துக்குரிய நாணயங்கள் மற்றும் மட்பாண்டங்கள் போன்றவை இந்தக்கோட்டையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.