கோட்டைகள், கோவில்கள், உலக அதிசயம் பெற்ற கட்டிடங்கள் என நம் இந்தியா முழுக்க முழுக்க பல்வேறு சிறப்புகளை பெற்றிருப்பது நாம் அறிந்ததே. இருந்தாலும், அந்த பட்டியலில் இருந்து இன்னும் எண்ணற்ற பல வியக்கத்தகுந்த பகுதிகள் நம் பார்வையை விட்டு விலகி காணப்படுகின்றது. அப்படிப்பட்ட சில ஆச்சரியமூட்டும், அதிசயப் பகுதிகளுக்கு ஒரு ட்ரிப் போலாம் வாங்க.

முன்ஷியாரி பனிச் சிகரம்
PC : Flickr
உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து சுமார் 338 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது முன்ஷ்யாரி எனும் பனிச் சிகரம். மஹேஷ்வர் குண்ட் மற்றும் தம்ரி குண்ட் ஆகிய ஏரிகள் இந்த இடத்தை சூழ்ந்துள்ளன. கோரி கங்கா எனும் ஆறும் இப்பகுதியில் உற்பத்தியாகிறது. இங்கு அமைந்துள்ள முன்ஷ்யாலி புக்யால் என்று அழைக்கப்படும் காட்டு மலர்கள் நிரம்பிய பரந்த புல்வெளிப்பிரதேசம் பயணிகளை வெகுவாக கவர்கிறது.

கிரேம் லியாத் ப்ராஹ்
PC : Dave Bunnell
மேகாலயா மாநிலத்தின் ஜெயின்டியா மலைப்பகுதியில் கிரேம் லியாத் ப்ராஹ் குகை அமைந்துள்ளது. 31 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்தக் குகை இந்தியாவில் மிக நீளமான குகையாக கருதப்படுகிறது. இதேப்போல மேகாலயாவில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் எண்ணற்ற குகைகள் அமைந்துள்ளன. அவற்றில் சில குகைகள் உலகின் மிக நீளமான மற்றும் மிக ஆழமான குகைகளில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றன.

ஆலி
PC : Mandeep Thander
உத்தரகண்ட்டில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆலியில் ஆசியாவிலேயே மிகவும் நீளமான மற்றும் உயரமான கேபிள் கார் வசதி செய்யப்பட்டுள்ளது. கோண்டோலா என்று அழைக்கப்படும் இந்த கேபிள் கார்களில் 13500 அடி உயரத்தில் பயணிக்கும் அனுபவம் இந்தியாவில் வேறெங்கும் கிடைக்காத ஒன்றாகும்.

நூப்ரா பள்ளத்தாக்கு
PC : Raghavendra
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள இந்த நூப்ரா பள்ளத்தாக்கு கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் லடாக் தலைநகர் லேவிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது பூக்களின் பள்ளத்தாக்கு என்று பொருள்படும் 'ல்டும்ரா' என்று அழைக்கப்படும் பெயருயுடையதாகும். கோடைக்காலத்தில் இப்பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண பூக்களின் அணிவகுப்பைக் காண முடியும்.

பவளப்பாறைகள்
PC : Nat Tarbox
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பவளப்பாறைகளை ரசிக்க ஆரம்பித்தால் நேரம் காலம் போவதுகூட தெரியாது. அதிலும் குறிப்பாக ஜாலி பாய் தீவில் சிறிய படகுகளில் பயணம் செய்து இந்தப் பவளப்பாறைகள் கண்டு ரசிக்க முடியும். இந்த சிறு படகுகளின் அடிப்பாகம் ஃபைபர் கண்ணாடியால் ஆனவை என்பதால் நீருக்கு அடியில் காணப்படும் பவளப்பாறை அணிவகுப்பை உங்களால் தெளிவாக பார்க்க முடியும்.

சங்-லா கணவாய்
PC : babasteve
லடாக்கின் தலைநகர் லேவிலிருந்து பாங்காங் செல்லும் பாதையில் சங் லா கணவாய் அமைந்துள்ளது. இது உலகிலேயே 3-வது உயரமான வாகனப் போக்குவரத்து சாலையாக அறியப்படுகிறது. ஒருவேலை சாலை பயணத்தில் த்ரில்லிங்கான அனுபவத்தை தேடுவபராக நீங்கள் இருந்தால் இந்த சாலையில் ஒரு முறை பயணித்துதான் பாருங்களேன்.

கங்கா கழிமுகப் பகுதி
PC : Soumyajit Nandy
சுந்தர்வன கழிமுகப் பகுதி அல்லது கங்கா- பிரம்மபுத்திரா கழிமுகப் பகுதி என்று அழைக்கப்படும் கங்கா கழிமுகப் பகுதி உலகின் மிகப்பெரிய டெல்டா பகுதியாகும். இந்த கழிமுகப் பகுதி கங்கா, பிரம்மபுத்திரா, பத்மா, ஹூக்ளி, யமுனா ஆகிய ஐந்து மிகப்பெரிய நதிகளால் உருவானது.

பளிங்குக்கல் பாறைகள்
PC : Guptaumesh100
மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரின் பேடகாட் எனும் பகுதியில் இந்த பளிங்குக்கல் பாறைகள் காணப்படுகின்றன. இந்தப் பாறைகள், நர்மதா நதியின் இருமருங்கிலும் சுமார் 100 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கின்றன. சூரியனின் மின்னும் பொற்கதிர்கள் இந்த வெள்ளை மற்றும் பழுப்பு நிறப் பாறைகளின் மீது படும்போது இவை நதி நீரில் ஒரு நிழலுருவைப் படரச்செய்கின்றன.

லொனார் விண்கல் பள்ளம்
PC : Praxsans
லொனாரின் விண்கல் பள்ளம் தான் உலகிலேயே தீக்கல் பாறை வகைகளில் அமைந்த ஒரே உப்பு நீர் ஏரி ஆகும். அதோடு இந்த விண்கல் பள்ளம் 52,000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டது என்பது இதன் கூடுதல் சிறப்பாகும். நமது பூவுலகில் புதைந்து கிடக்கும் மர்மங்கள் குறித்து அறிய விரும்புபவர்கள் வாழ்கையில் ஒருமுறையாவது லொனார் ஏரிக்கு வர வேண்டும்.

நீம்ரானா கோட்டை
PC : Zooz gunner
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் அமைந்துள்ள நீம்ரானா கோட்டையில் ஜிப்லைனிங் செய்வது சிலிர்ப்பூட்டும் சாகசம் ஆகும். சுமார் 2 கிலோ மீட்டர் நீளம் வரை அமைக்கப்பட்டிருக்கும் ஜிப்லைனில் நீங்கள் செல்லுபோது உங்களுக்கே கீழே ராஜஸ்தானின் கோட்டைகளும், வானுயர்ந்த கட்டிடங்களும் மிகச் சிறியதாக தெரியும். இவ்வளவு உயரத்தில் ஜிப்லைன் செய்வது ஆபத்தானது என்றாலும் உலகத் தரமான உபகரணங்களும், நன்கு பயிற்சி பெற்ற உதவியாளர்களும் உங்களுக்கு துணையாக பக்கபலமாக இருப்பார்கள்.

உலக அதிசயக் கோவில்
PC : Bernard Gagnon - Own work
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஷத்ருஞ்சயா எனும் மலைகளில்தான் பாலிதானா கோவில்கள் என்று அறியப்படும் 900 ஜைனக் கோவில்கள் அமைந்துள்ளன. உலகிலேயே 900 கோவில்கள் உள்ள ஒரே மலையாக ஷத்ருஞ்சயா விளங்குகிறது.



Click it and Unblock the Notifications




