கர்நாடகாவின் மந்தியா மாவட்டத்தில் அமைந்திருக்கும் முததி கிராமம், அங்குள்ள அனுமந்தரயா கோயிலுக்காக மிகவும் புகழ் பெற்றது. இது காவேரியின் கரையோரங்களில், அடர்ந்த காடுகளுக்கும், குன்றுகளுக்கும் நடுவில் இயற்கை காதலர்களின் கனவு தேசமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

காவேரி நதியில், சலசலத்து ஓடும் சிற்றலைகளின் மீது பரிசல் பயணம் செல்லும் அனுபவம் அலாதியானது. அதுவும் முததியின் பரிசல் பயணம் அப்பகுதிகளில் மிகவும் பிரபலம். முததி கிராமம் காவேரி வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் இருப்பதாலும், அடர்ந்த காடுகளாலும், பள்ளத்தாக்குகளாலும் சூழப்பட்டிருப்பதாலும் எண்ணற்ற விலங்குகளுக்கு வாழ்விடமாக இருந்து வருகிறது.

இங்கு சாம்பார் மற்றும் புள்ளி மான்கள்,காட்டெருமைகள், ராட்சஸ அணில்கள், புலிகள், சிறுத்தைகள், காட்டு நாய்கள், கரடிகள் உள்ளிட்டவற்றை பயணிகள் கண்டு ரசிக்கலாம். அதேபோல் முததிக்கு அருகில் இருக்கும் பீமேஸ்வரி, சாகசப் பிரியர்களின் விருப்பமான சுற்றுலாத் தலமாக மாறி வருகிறது. ஆனால் இங்குள்ள காடுகளுக்குள் செல்ல வனத்துறையினரின் அனுமதி கண்டிப்பாக தேவை. அதோடு கடல் மட்டத்திலிருந்து 1125 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் சோலிகிரி குன்றில் நடை பயணம் செல்வதும் நல்ல அனுபவமாக இருக்கும். இந்த குன்றின் உச்சியிலிருந்து பார்த்தால் முததியின் பேரழகை பயணிகள் எந்த தடையும் இல்லாமல் ரசிக்கலாம்.

சுஞ்சி நீர்வீழ்ச்சி
முததிக்கு வரும் பயணிகள் நேரம் இருந்தால் சுஞ்சி நீர்வீழ்ச்சிக்கு சென்று அதன் அழகை ரசிக்கலாம். இது அர்க்காவதி ஆற்றிலிருந்து உருவாகி காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த அருவியை சூழ்ந்து காணப்படும் அடர்ந்த காடுகள் அருவியின் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் உள்ளது.சுஞ்சி நீர்வீழ்ச்சிக்கு மழைக் காலங்களில் சுற்றுலா வருவது சிறப்பாக இருக்கும்.

பரிசல் பயணம்
முததிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பரிசலில் பயணிப்பது ஒரு சிறிய சாகசப் பயண அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த பரிசல்கள் குறைந்த எடையுடன், மூங்கில்களை கொண்டு செய்யப்படுகின்றன. இந்தப் பகுதிகளின் தினசரி போக்குவரத்துக்கு பயன் பட்டுவரும் இந்த பரிசல்கள், இப்போதெல்லாம் அதிகமாக சுற்றுலாப் பயனிகளுடனேயே பயணிக்கின்றன.



Click it and Unblock the Notifications




