கும்பகோணத்தை சுற்றி பல சிறப்பு வாய்ந்த ஆயிரம் கோயில்கள் அமைந்துள்ளன. நவக்கிரக ஸ்தலங்கள் ஒன்பதுமே கும்பகோணத்தை சுற்றி தான் அமைந்துள்ளன, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் நவக்கிரக கோயில்களுக்கு செல்வதற்காக கும்பகோணம் வருகை தருகின்றனர். இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து குளிர்சாதன பேருந்து மூலம் ஒன்பது ஸ்தலங்களையும் தரிசிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. பரிகாரங்கள் செய்ய பல பகுதிகளிலும் இருந்து வரும் பக்தர்கள் அனைவரும் இதனை வெகுவாக வரவேற்றுள்ளனர்!
நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்
நவக்கிரக கோயில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் நவக்கிரக தலங்களை இணைத்து புதிய வழித்தடத்தில் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என பல்வேறு இடங்களில் இருந்து வரும் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும்கோரிக்கை வைத்து வந்தனர். பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சார்பில் கும்பகோணத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. கும்பகோணத்தில் இருந்து காலை கிளம்பி ஒரே நாளில் நவக்கிரக கோயில்கள் அனைத்தையும் தரிசித்துவிட்டு வர TNSTC ஏற்பாடு செய்துள்ளது.

கட்டணம் ரூ.750 மட்டுமே
இந்நிலையில் நவக்கிரக கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்து கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களில் மட்டும் இந்த சிறப்பு பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பேருந்தில் நவக்கிரக சுற்றுலாத் தலங்களுக்கு ஒருவர் சென்று வர ரூ.750 கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஒரே நாளில் நவக்கிரக கோயில்கள் சுற்றுலா
நவக்கிரக கோயில்களுக்கு செல்ல முன்பதிவு செய்த பயணிகளுடன் காலை 5 மணியளவில் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு திங்களூர் சந்திரன் கோயில், ஆலங்குடி குருபகவான் கோயில், திருநாகேஸ்வரம் ராகு பகவான் கோயில், சூரியனார் கோவில் சூரிய பகவான் கோயில், கஞ்சனூர் சுக்கிரம் கோயில், வைத்தீஸ்வரன் செவ்வாய் பகவான் கோயில்களுக்கு அழைத்து செல்லப்படுவீர்கள். மதிய உணவுக்கு பிறகு திருவெண்காடு புதன் பகவான் கோயில், கீழ்பெரும்பள்ளம் கேது பகவான் கோயில் மற்றும் திருநள்ளாறு சனீஸ்வர கோயில் என அனைத்து நவக்கிரக கோயில்களுக்கும் ஒரே நாளில் சென்று விட்டு 8 மணி அளவில் கும்பகோணம் பேருந்து நிலையத்தை அடைந்திடலாம்.
குளிர்சாதன பேருந்து அறிமுகம்
பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றதையடுத்து வயதானவர்கள் மற்றும் கோடை காலத்தில் வசதியாக செல்வதற்கு ஏற்றவாறு குளிர்சாதன வசதியுடன் கூடிய சிறப்பு ஏ.சி பேருந்துகள் வருகிற 25 ஆம் தேதி முதல் தினமும் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த பேருந்தில் ஒரு நபருக்கு ரூ.1350 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
எப்படி புக்கிங் செய்வது
எனவே இந்த பேருந்தில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் www.tnstc.in என்ற இணையத்தளம் அல்லது மொபைல் புக்கிங் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பயணச்சீட்டு பெற்றுக் கொள்ள முடியும். நேரடியாக பேருந்தில் பயணச்சீட்டு பெறும் வசதி இல்லை.



Click it and Unblock the Notifications





