தருமபுரி அல்லது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிப்பவரா நீங்கள்? கம்மியான பட்ஜெட்டில் ஒரு சின்ன சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைக்குறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்குத்தான்! தருமபுரியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் அமைந்திருக்கும் பசுமை சூழ்ந்த அழகிய இடமான இருமத்தூருக்கு ஒரு சின்ன ட்ரிப் அடித்துவிட்டு, ஆற்றில் குளித்து, களைப்பாறி வந்தால் நன்றாக இருக்கும்மல்லவா? எப்படி பிளான் பண்ணுவது என்று இங்கே பார்ப்போம்!

மேற்கு தொடர்ச்சி மலைகளிலிருந்து பாய்ந்து வரும் ஆறு
தமிழ்நாட்டின் இரண்டாவது மிக நீளமான ஆறான தென்பெண்ணையாற்றின் கரையில் அமைந்திருக்கும் ஒரு அழகிய ஊரான இருமத்தூர் பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம். கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளிலிருந்து உருவாகும் இந்த ஆறு கிருஷ்ணகிரியை அடையும் போது கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம் திட்ட அணை எனும் KRP அணையில் தடுத்து நிறுத்தப்படுகிறது. KRP அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது காவேரிபட்டினம் கிருஷ்ணகிரி வழியாக தென்பெண்ணை ஆறாக தமிழகத்தில் பாய்ந்து ஓடுகிறது.
திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பிடித்த ஸ்பாட்
இந்த இருமத்தூர் ஆறு தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இருமத்தூர் ஆற்றை சுற்றிய இரண்டு பக்கங்களிலும் எங்கு திரும்பினாலும் தென்னை தோட்டங்களும், பசுமையான மரங்களும் என அங்கு இருக்கும் சூழல் நம் மனதை கொள்ளையடிக்கிறது. இருமத்தூர் ஆற்றில் குளிக்க நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து இங்கு வருகை தந்து, குளித்துவிட்டு ஆனந்தமாக திரும்பி செல்கின்றனர்.

உங்கள் வீட்டு குழந்தைகளை குஷிப்படுத்த இங்கே வாருங்கள்
இந்த இடத்தின் சிறப்பு என்னவென்றால் நீச்சல் தெரியாதவர்களும் கூட இங்கு படிக்கட்டு போன்ற அமைப்புகளில் குளிக்கலாம். பொதுவாகவே இது ஆழம் குறைவாக இருப்பதால் பயமின்றி பெண்களும் குழந்தைகளும் என அனைவரும் குளித்து மகிழ்வதை நீங்களே பார்க்கலாம். குறிப்பாக இந்த இடம் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு முறை சென்றாலும் மீண்டும் மீண்டும் உங்களை அழைத்து செல்ல சொல்லி நச்சரிப்பார்கள். என்ன தான் வீட்டு ஷவரில் மணிக்கணக்கில் குளித்தாலும், இயற்கையாக காற்றோட்டமாக, பாய்ந்து வரும் நீரில் இதமாக குளிப்பதற்கு ஈடாகுமா? குறிப்பாக இது குடும்பத்துடன் செல்வதற்கு ஏற்ற இடமாகும்.
பூர்வ ஜென்மத்து பாவத்தை போக்கும் சிவன்
இருமத்தூர் ஆற்றை ஒட்டியே ஒரு பழமையான சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கே மேற்கு திசையில் வீற்றிருக்கும் சிவபெருமான் நாம் பூர்வ ஜென்மத்து பாவங்களை தீர்த்து வைக்கிறார் என்பது ஐதீகம். தென்பெண்ணை ஆற்றில் குளித்து அருகே இருக்கும் சிவபெருமானை வழிப்பட்டால் நாம் செய்த சகல பாவங்களும் கரைந்து விடுகிறது என்பது நம்பிக்கை.

இருமத்தூருக்கு எப்படி செல்வது?
இருமத்தூர் தருமபுரியிலிருந்து 26 கிமீ தொலைவிலும் திருப்பத்தூரில் இருந்து 44 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இருமத்தூர் ஆற்றிற்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து திருப்பத்தூர் செல்லும் பேருந்துகளில் ஏறி செல்லலாம். ஒரு அரை மணி நேரத்தில் இருமத்தூரை அடைந்து விடுவீர்கள். உங்களது சொந்த வாகனங்களில் சென்றால் ஆங்காங்கே நிறுத்தி இயற்கை எழிலை ரசித்துவிட்டு செல்லலாம்.



Click it and Unblock the Notifications




