இந்தியாவில் சுற்றுலாத்தளங்கள் என்பன பொழுதுபோக்கவும், வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ளவும் மட்டுமில்லாமல் ஆன்மீகத்துக்காகவும் சிறந்ததாக உள்ளது. அப்படி சிறந்த தளங்களை நம்மில் பலர் அறிந்திருப்போம். சிலர் சென்று மகிழ்ந்து அதனுடன் உறவாடிவிட்டு வந்திருப்பர். அதுமாதிரியான பெரும்பாலும் பலர் அறியாத இடங்களைத் தேடி அதனுடைய சிறப்பம்சங்களை தொகுத்து நேட்டிவ் பிளான்ட் தமிழில் வழங்குகிறோம். நீங்கள் இந்த பதினைந்து இடங்களுக்கும் ஒரு விசிட் சென்று வாருங்களேன்.

கவி கங்காதேஷ்வரா கோயில், பெங்களூர்
தெற்கு பெங்களூர் பகுதியில் அமைந்திருக்கும் கவி கங்காதேஷ்வரா கோயில், கவிபுரம் குகைக் கோயில் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த கோயில் கருவறையினுள்ளே சூரிய ஒளி புகுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருடத்தில் ஒரு குறிப்பிட்ட கால பகுதியில் சுவாமி விக்ரகம் சூரிய ஒளி பட்டு ஜொலிக்கிறது. இந்த கட்டிடக்கலை அற்புதம் 9-ஆம் நூற்றாண்டில் ஒரு மிகப்பெரிய பாறையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
Pavithrah

ஆலயத்தின் சிறப்பு
கவி கங்காதேஷ்வரா கோயிலுக்கு மகர சங்கராந்தியின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கு காரணம் அந்த சமயத்தில்தான் கோயில் கருவறையிலுள்ள சிவலிங்கம் சூரிய ஒளி பட்டு ஜோதிமயமாய் காட்சியளிக்கும். அப்போது நந்தியின் கொம்புகள் வழிபுகும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழுந்து சில மணிநேரங்கள் விக்ரகத்தை பிரகாசமாக வைத்திருக்கும். இதன் மூலம் நம் முன்னோர்கள் வான சாஸ்திரத்திலும், கட்டிடக்கலையிலும் எப்பேர்பட்ட வல்லுனர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது கண்கூடாக புலனாகிறது.
கங்காதேஷ்வரா கோயிலில் சிவபெருமானை தவிர அக்னி பகவானுக்கும் தனியாக சன்னதி உள்ளது. இன்று கவி கங்காதேஷ்வரா கோயில் கர்நாடக தொல் வரலாற்று நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் ஸ்தலங்கள், மிச்சங்கள் 1961-ன் சட்டப்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் பசவனகுடி என்ற பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோயிலை பெங்களூரின் எந்த பகுதியிலிருந்தும் மாநகராட்சி பேருந்துகள் மூலம் சுலபமாக அடைந்துவிட முடியும்.
Pavithrah

சந்தக், பித்தோராகர்
பித்தோராகர் நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் சந்தக் அமைந்துள்ளது. சோர் பள்ளத்தாக்கின் வடக்கு பகுதியில் அமையப்பெற்றுள்ள இந்த அழகிய மலைக்குன்றை டிரெக்கிங் மூலம் அடையலாம். இந்த சுற்றுலாத் தலத்தில் ஹேண்ட் கிளைடிங் செய்வது பயணிகளிடையே உற்சாகமான சாகச பொழுதுபோக்காக உள்ளது. மேலும் இப்பகுதியில் மானு கோயில் என்ற ஆலயமும், ஒரு வெள்ளைக்கல் சுரங்க தொழிற்சாலையும் அமையப்பெற்றுள்ளன.

தீஸ்தா நதி, காங்க்டாக்
சிக்கிம் மாநிலத்தின் நீளமான நதியான தீஸ்தா நதி வெள்ளை நீர் சவாரி செய்ய மிகவும் பொருத்தமான இடம். ரத்தோங் பனியாற்றிலிருந்து உற்பத்தியாகும் இந்த நதி எண்ணற்ற பாறைகளையும், குன்றுகளையும் தாண்டி வங்கதேசத்தில் பிரம்மபுத்திரா ஆற்றுடன் கலக்கிறது.
தீஸ்தா நதி கடந்து செல்லும் வழியெங்கும் அழகிய வெப்பமண்டல இலையுதிர் மரங்களையும், அல்ஃபைன் தாவரங்களையும் காணலாம். அதோடு தீஸ்தா நதியில் காற்று நிரப்பப்பட்ட படகுகளில் வெள்ளை நீர் சவாரி சென்று அஸ்ஸாமின் இயற்கையழகை கண்டு ரசிக்கும் அனுபவம் அற்புதமானது.
தீஸ்தா நதியின் பெரும் அலைகளில் கட்டுமரச் சவாரி செய்வது சிலிர்ப்பூட்டும் அனுபவமாகும். இங்கு தீஸ்தா பஜார் மற்றும் மெல்லி நகரம் ஆகிய பகுதிகளில் குழுவாக சேர்ந்து கட்டுமரச்சவாரி செய்ய முடியும். எனவே சீறிப்பாய்ந்து செல்லும் தீஸ்தா நதியின் குளிர்ச்சியான நீரில் பயணம் செய்வதை சாகசப்பிரியர்கள் தவறவிட்டுவிடக் கூடாது.
Supreo75

ஏம்பியன்ஸ் மால், குர்கான்
2007-ஆம் திறக்கப்பட்டு இன்று குர்கானின் முக்கியமான மால்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் ஏம்பியன்ஸ் மால் டெல்லி-குர்கான் எல்லையில் அமைந்திருக்கிறது. இங்கு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ், பேண்டலூன்ஸ், நெக்ஸ்ட், பி.எம்.டபுள்யூ போன்ற முன்னணி நிறுவனங்களின் ஷோ ரூம்களை பார்க்க முடியும்.
இவைதவிர இங்கு நீங்கள் பௌலிங், செயற்கை பனிச்சறுக்கு உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை கழிக்கலாம். அதோடு ஏம்பியன்ஸ் மாலில் பி.வி.ஆர் சினிமாஸின் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் ஒன்றும் உள்ளது.
ambiencemalls.com

சதபடா டால்பின் சரணாலயம், பூரி
சதபடா டால்பின் சரணாலயம் பூரியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த சரணாலயம் டால்பின்களோடு சூரிய அஸ்த்தமனம் மற்றும் சூர்யோதய காட்சிகளுக்கும் பிரபலமாக இருப்பதால் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. இங்கு டால்பின்களை பார்த்து ரசிப்பதற்காக டால்பின் வியூ பாயிண்ட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் டால்பின் மோட்டார் போட் கழகம் ஏற்பாடு செய்யும் மோட்டார் படகுப்பயணத்தில் நீங்கள் குடும்பத்தோடு ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம். இந்த படகுப் பயணத்துக்கு சிறிய அளவிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
Aude Steiner

குரும்பேரா கோட்டை, மிதுனாபூர்
குரும்பேரா கோட்டையில் 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயில் ஒன்று உள்ளது. அதோடு இந்த கோயிலுக்கு நேர் பின்னே முகம்மது தாஹீர் என்பவரால் கட்டப்பட்ட மசூதி ஒன்றும் அமைந்துள்ளது. எனவே ஹிந்து, இஸ்லாமிய ஒருமைப்பாட்டை விளக்கும் குரும்பேரா கோட்டைக்கு மத பேதமின்றி நாடு முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்களும், பயணிகளும் வந்து செல்கின்றனர். மேலும் குரும்பேரா கோட்டை சூரிய அஸ்த்தமன காட்சிக்காக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.
Tirthatanay

உமாபதி சிவன் கோயில், மிதுனாபூர்
ஆட்ச்சலா கட்டிடக்கலை மற்றும் டெர்ரக்கோட்டா பாணியில் கட்டப்பட்ட பழமையான சிவாலயமான உமாபதி சிவன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இங்கு சிவபெருமானை தவிர கருங்கல்லினால் உருவாக்கப்பட்ட சூரிய பகவானின் விக்ரகத்துடன் சன்னதி உள்ளது. இந்த கோயில் 10 அல்லது 11-ஆம் நூற்றாண்டுகளின் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
Antorjal

கரஞ்சி லேக், மைசூர்
மைசூர் நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும்போது கரஞ்சி லேக்கை கண்டிப்பாக தவற விட்டுவிடக்கூடாது. இந்த ஏரியை சுற்றி அமையப்பெற்றுள்ள இயற்கை பூங்காவில் பட்டாம்பூச்சி பூங்காவும், இந்தியாவின் மிகப்பெரிய பறவைகள் பண்ணை ஒன்றும் அமைந்துள்ளன. கரஞ்சி லேக் 90 ஏக்ரா பரப்பளவில் அமைந்துள்ள மைசூர் மிருகக்காட்சி சாலையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதோடு கரஞ்சி லேக் 55 ஏக்ரா அளவிற்கு பரந்து கிடப்பதால் மிருகக்காட்சி சாலையின் முக்கால்வாசி இடம் ஏரி நீரால் சூழப்பட்டுள்ளது. இங்கு வரும் பயணிகள் ஏரியில் படகுப் பயணம் செய்து மகிழலாம்.
Nagesh Kamath

மங்கலஜோடி பறவைகள் சரணாலயம், சில்கா
சில்கா ஏரியின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் மங்கலஜோடி பறவைகள் சரணாலயம் எண்ணற்ற புலம்பெயர் பறவைகளுக்கு புகலிடமாக திகழ்ந்து வருகிறது. இந்த பறவைகள் சரணாலயத்துக்கு ஈரான், ஈராக், செர்பியா, ஹிமாலய பகுதிகளிலிருந்து 135-க்கும் மேற்பட்ட புலம்பெயர் பறவை இனங்கள் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலங்களில் வந்து செல்கின்றன. மேலும் இங்கே ஏற்பாடு செய்யப்படும் படகு பயணத்தின் மூலம் கருஞ்சிறகு நெடுங்காற் பறவை, உள்ளான், நீல நிற சுத்துநிலக் கோழி போன்ற பறவைகளை கண்டு ரசிக்கலாம். அதோடு இங்கு இறால் மீன்கள், நண்டு உள்ளிட்ட கடல் உணவுகள் வெகுப் பிரசித்தம்.
J.M.Garg

பறவைகள் பண்ணை
இந்தியாவின் மிகப்பெரிய பறவைகள் பண்ணையாக கரஞ்சி லேக்கில் உள்ள பண்ணை அறியப்படுகிறது. 60 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பறவைகள் பண்ணை 3.8 மில்லியன் ரூபாய் செலவில் நிறுவப்பட்டது. இங்கு இருவாய்க்குருவி, கருப்பு அன்னப் பறவை, வான்கோழி, மயில் போன்ற பறவைகளை கண்டு ரசிக்கலாம்.
Sreejithk2000

பட்டாம்பூச்சி பூங்கா
கரஞ்சி லேக்கில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி பூங்கா அமைதியாக நேரத்தை கழிக்க மிகவும் ஏற்ற இடம். இங்கு பரந்து விரிந்து கிடக்கும் மலர் பூங்காவில் 45 வகையான பட்டாம்பூச்சி இனங்களை காணலாம். அதோடு தேன் சுரக்கும் பூக்களை கொண்ட செடிகளை நட்டு மேலும் சில பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் நோக்கத்துடன் நிறைய செடிகள் பூங்காவில் நடப்பட்டு வருகின்றன.
Prof. Mohamed Shareef

புலம்பெயர் பறவைகள்
கரஞ்சி லேக்கில் செங்கால் நாரை, கூழைக்கடா, ஐபிஸ், உண்ணிக் கொக்கு, சாம்பல் நாரை, உள்ளான், கரிச்சான் குருவி உள்ளிட்ட புலம்பெயர் பறவைகளை பார்க்க முடியும். இந்த ஏரி காலை 8.30 மணியிலிருந்து, 5.30 மணிவரை திறந்திருக்கும். அதோடு மைசூரின் மற்ற பகுதிகளிலிருந்து கரஞ்சி லேக்கை மாநகராட்சி பேருந்து மூலமாக சுலபமாக அடைந்து விட முடியும்.
Shareef Taliparamba

பால குமாரி கோயில், கஞ்சம்
ஓடிசா மாநிலத்தின் முக்கியமான கோயில்களில் ஒன்றான பால குமாரி கோயில் கண்டிப்பாக அனைவரும் தரிசிக்க வேண்டிய ஆலயமாகும். இந்த கோயில் அம்மனின் தரிசனம் பெறுவதற்கு நீங்கள் 1240 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். மேலும் இந்த அம்மன் திருமணமாகாத குமரி என்றும், வேண்டும் வரங்களை கொடுக்கவல்ல சக்திகளை உடையவள் என்றும் பக்தர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இங்கு நவராத்திரியின் போது நடத்தப்படும் திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்கிறார்கள்.
wikimapia.org

ரங்கினி மந்திர், ஜம்ஷெட்பூர்
ஜாதுகோரா என்ற இடத்தில் அமைந்திருக்கும் ரங்கினி மந்திர், கபட்கதி காட் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்த அம்மன் தனக்கு கொடுக்கும் பலிகளை தானே கொன்றுவிடும் என்று இப்பகுதியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. காட்சிலா பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் இந்த கோயிலை தவற விட்டுவிடக்கூடாது.
Pinakpani



Click it and Unblock the Notifications




