எங்கும் நிறைந்திருக்கும் அந்த ஆதி பரம்பொருளான சிவபெருமான் பல ஆலயங்களில் நமக்கு காட்சி கொடுத்தாலும், கயிலாயத்தில் தான் நிரந்திரமாக குடிக் கொண்டிருக்கிறார். இமயமலை மட்டுமே கயிலாயம் என்று குறிப்பிடப்படுவதில்லை. ஆம் இமயமலை வட கயிலை என்றும், கோயம்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைகள் தென் கயிலை என்றும் அழைக்கப்படுகின்றன. தென் கயிலை சரியாக எங்கே இருக்கிறது? எப்படி செல்வது? சிவபெருமானின் ஆசி பெறுவது எப்படி? பிரயாணத்திற்கு முன் உங்களை தயார் படுத்திக் கொள்வது எப்படி? இது போன்ற அனைத்து கேள்விகளுக்குமான விடைகள் கீழே!
கோயம்புத்தூரில் அமைந்துள்ள தென் கயிலை
மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தின் ஒரு பகுதியாக வெள்ளியங்கிரி மலைகள் அமைந்துள்ளன. கோயம்புத்தூரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இது பக்தர்கள் மற்றும் சாகச ஆர்வலர்களுக்கு நீண்ட காலமாக மலையேற்ற மையமாக இருந்து வருகிறது. ஏழு மலைகளின் சங்கிலியான வெள்ளியங்கிரி மலைகள் நாட்டின் தென் கைலாயம் என்று அன்புடன் போற்றப்படுகிறது. இம்மலையின் அடிவாரத்தை பூண்டி என்றழைக்கின்றனர்.
தென் கயிலையின் வரலாறு
சிவபெருமானை மணக்க வேண்டும் என்று மிகவும் தீரமாக இருந்த பெண் ஒருத்தி, தான் எதிர்பார்த்த நாளுக்குள் சிவபெருமான் வந்து தன்னை மணக்க வேண்டும் என்றும், அப்படி அவர் வரவில்லையென்றால் தான் உயிர் துறக்க போவதாகவும் சபதம் செய்திருந்தாள். இதனை அறிந்த சிவபெருமான் அவளது உயிர்த்தியாகத்தை நிறுத்தும் பொருட்டு அந்த பெண் இருந்த இடம் தேடி புறப்பட்டார், இருந்தாலும் அவர் வரும் வழியில் பல இடையூறுகளை சந்தித்���தால் சரியான நேரத்தில் அவரால் அந்த பெண்ணிடம் சேர முடியவில்லை. சிவபெருமான் தன்னை காண வராத காரணத்தினால் அப்பெண் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதனால் மனமுடைந்த சிவபெருமான் சோகத்துடனும் கோவத்துடனும் வந்து அமர்ந்த மலை தான் இந்த "வெள்ளியங்கிரி மலைகள்". அவர் இங்கு மன சாந்தியுடன் இங்கு அமராவிட்டாலும் கூட, இங்கு வரும் பக்த பெருமக்களுக்கு மன நிம்மதியும், அமைதியையும் வழங்கி ஆசி புரிகின்றார்.
விநாயகரின் ஆசிப் பெற்று மலையேற்றத்தை துவங்குங்கள்
மலை அடிவாரத்திலேயே ஏறுவதற்கு முன் வனத்துறை உங்களது பேக்குகளை முழுதாக சோதித்து விட்டே அனுமதிக்கும். ஆதலால் தேவையில்லாத பிளாஸ்டிக் பொருட்கள் எல்லாம் எடுத்து செல்லக் கூடாது. பூண்டி விநாயகர், வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மன் ஆகியோரின் சன்னதிகள் பக்தர்களை முகப்பிலேயே வரவேற்கின்றன. இவற்றை தரிசித்துவிட்டு மலையேறலாம். வெள்ளியங்கிரி மலைகள், இறைமையின் மகத்துவத்துக்கு மட்டுமின்றி இயற்கையின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிற மேன்மையான தலமாகும்.
வெள்ளியங்கிரி ஆன்மீகப் பயணம்
ஏழு மலைகளை அடக்கிய தொடர் தான் வெள்ளியங்கிரி மலைகள். ஏழாவது மலைக்கு சென்றால் தான் எம்பெருமானை தரிசிக்க முடியும்.o முதல் மலையில் ஒரு அடி அளவுள்ள படிக்கட்டுகள் இருந்தாலும் ஏறுவதற்கு சற்று சிரமமாகத் தான் உள்ளது. மூலிகை மணத்துடன் வீசும் குளிந்த காற்றும், ரம்மியமான சூழலும், பறவைகள் மற்றும் வண்டுகள் எழுப்பும் மெல்லிய ஒலியும் நம் மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. முதல் மலையின் முடிவில் நாம் விநாயகர் சன்னதியைக் காணலாம்.
o முழுமுதற் கடவுளை தரிசித்துவிட்டு இரண்டாம் மலை ஏற வேண்டும். இரண்டாவது மலை சிற்சில இடங்களில் சமவெளியும் படிகளும் உள்ளன. இந்த மலையின் முடிவில் பாம்பாட்டி சுனை என்ற தீர்த்தம் உள்ளது.
o மூன்றாவது மலையில் சித்தர்கள் நடமாட்டம் இருக்கும் என நம்பப்படுகிறது. இங்கே நின்று கை தட்டினால் பாறைகளின் இடுக்கிலிருந்து தண்ணீர் வருகிறதாம்.
o நான்காவது மலையும் ஐந்தாவது மழையும் நடந்து போக எளிதாகவும் பக்தர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பையும் வழங்குகின்றன.
o வெள்ளை மணலைக் கொண்ட ஆறாவது மலை நீலி ஆற்றில் சேர்கிறது. இந்த மலை செங்குத்தாக இருப்பதால் ஏறுவது சற்று சிரமமாகத் தான் இருக்கிறது.
o கிரிமலை என்றழைக்கப்படும் ஏழாவது மலையில் தான் வெள்ளியங்கிரி நாயகனான எம்பெருமான் சுயம்பு வடிவில் வீற்றிரிக்கிறார். இந்த இடத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல. அவனருள் இருந்தால் மட்டுமே அவனை தரிசிக்க முடியும். மிக மிக செங்குத்தான வடிவில், ஏறுவதற்கு மிகவும் கடினமாக இருக்கும் பாதையை கடந்து வந்தால் தான் ஈசனி���் அருளைப் பெறலாம்!
மறக்காமல் இவை எல்லாம் எடுத்து செல்லுங்கள்
மலையேற்றம் செய்வதற்கு முன் தண்ணீர் பாட்டில்கள், போர்வை, தைலம், சிறிது உணவு, ஜூஸ் மற்றும் குளுகோஸ் ஆகியவற்றை உங்களது பேக்பேக்கில் எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். மலை ஏறும்போதும் இறங்கும் போதும் நமக்கு உயிர்த்துணையாக விளங்குவது அடிவாரத்தில் விற்கும் மூங்கில் தடிகள் தான்.
இவர்கள் எல்லாம் செல்ல அனுமதி இல்லை
வெள்ளியங்கிரி மலை ஏறுவது என்பது சாதாரணமான காரியம் அல்ல. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதயம் பலவீனமானவர்கள், குறைந்த, அதிக ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் மற்றும் 40 வயதுக்கும் மேலானவர்கள் ஆகியோர் மலை ஏறுவது உயிருக்கு மிக ஆபத்தானதாகும். 10 வயதிற்கு மேலும் 40 வயதிற்கு கீழும் உள்ள பெண்கள் மலை ஏறக்கூடாது.
எப்படி செல்ல வேண்டும்
கோயம்பத்தூரில் விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்ட பேருந்து நிலையம் உள்ளது. கோயம்பத்தூரில் இருந்து பூண்டிக்கு அரசு பேருந்து வாயிலாகவோ அல்லது டாக்சி வாயிலாகவோ செல்லலாம்.
சித்தர்களும் யோகிகளும் ரிஷிகளும் முனிவர்களும் பல காலம் தங்கியிருந்து தவம்புரிந்து தெய்வீகத்தை உணர்ந்த தலம், இந்த வெள்ளியங்கிரி. அவர்கள் தெய்வீகத்தை உணர்ந்ததோடு நில்லாமல், அதனை உணர்த்தும் விதமான அதிர்வுகளையும் நிரப்பியிருக்கிற மலை இந்த வெள்ளியங்கிரி. ஆதலால் மிகக் கடினமான சூழலிலும் "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தைத் சொல்லிக் கொண்டு சென்றால் எந்த வித களைப்பும் தெரியாமல் எம்பெருமானை அடைந்திடலாம்!