குடியரசு தினம் இந்த ஆண்டு வார இறுதி விடுமுறை நாளில் வருகிறது. பெங்களூருவை சுற்றி ஒரு ஜாலி ரெய்டு போய் விட்டு வரலாம் என்று பிளான் போடுகிறீர்களா? எங்கு செல்வது என்ற குழப்பமே உங்களுக்கு வேண்டாம். ஒரே நாளில் ஈஸியாக சென்று சுற்றி பார்த்து விட்டு திரும்புவதற்கு ஏற்ற சூப்பரான 10 இடங்களின் பட்டியல் இதோ ரெடியாக இருக்கு. வாங்க நம்ம பயணத்தை துவங்கலாம்.

மைசூரு
பெங்களூருவிற்கு அருகில் பார்க்க வேண்டிய பிரம்மாண்டமான, பாரம்பரிய இடங்களில் முக்கியமானது மைசூரு அரண்மனை. பெரியவர்களுக்கு ரூ.120, 10 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரூ.70 நுழைவு கட்டணம் செலுத்தி விட்டு உள்ளே சென்றால் அரண்மனையை பார்த்து விட்டு வரலாம். வெளியே வந்தால் அமைதியான பிருந்தாவன் கார்டனை ரசித்து மகிழலாம். அப்படியே வெளியில் வந்தால் பாரம்பரிய பட்டு மற்றும் சந்தனக் கட்டையில் தயாரித்த விதவிதமான பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு ஒரு விசிட் அடித்து விட்டு வரலாம்.
நந்தி ஹில்ஸ்
பெங்களூருவில் இருந்து மிகவும் அருகில் சென்று வருவதற்கு ஏற்ற இடம் என்றால் அது நந்தி ஹில்ஸ் தான். அழகிய சூரிய உதயம், ஆனந்தமான குளுமை, பச்சை போர்வை போர்த்தியது போல் இயற்கையின் அழகு மனதை கவருவதாக இருக்கும். மலை உச்சியில் இருந்து ஒட்டு மொத்த பெங்களூரு நகரத்தையும் பார்த்து ரசிக்கலாம். பழமையான கோவில்கள், திப்பு சுல்தான் கோட்டை என ஆன்மிக உணர்வுடன் ஜாலியான ஒரு டிரிப் சென்று விட்டு வந்த சந்தோஷத்தை அனுபவிக்கலாம்.
சிவ சமுத்திரம்
அற்புதமான அழகிய உணர்வை தரும் இடம் சிவசமுத்திரம். ககனாசுக்கி, பாராசுக்கி என்ற இரட்டை அருவிகள் இணைந்து கொட்டுவதை பார்க்கும் போதே மனம் சிறு குழந்தையை போல் துள்ளி குதிக்காமல் இருக்க முடியாது. அதிலும் மழைக்காலத்தில் இந்த அருவிகளை காண்பதே தனி சுகம் தான். இயற்கை அழகை ரசித்து மகிழ நினைப்பவர்களுக்கும், விதவிதமான அழகிய போட்டோக்களை எடுத்து மகிழ நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம் என்றால் அது சிவசமுத்திரம் தான்.

ஏற்காடு
இயற்கையின் அழகு, இதமான குளிரை அனுபவித்த படி, பரபரப்பான வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி அமைதியாக இருந்து விட்டு வர வேண்டும் என்று நினைப்பவராக இருந்தால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் ஏற்காடு தான். ஷெவாராய் ஹில்ஸ், ஏற்காடு ஏரி, காபி தோட்டம், ஏலக்காய் தோட்டம் ஆகியவற்றை சுற்றி பார்த்து விட்டு, அப்படியே பகோடா பாயிண்டிற்கு வந்தால் ஒட்டுமொத்த ஏற்காடு மலையும் நம்முடைய காலுக்கு கீழ் இருக்கும் அற்புத காட்சியை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
பெளூர்-ஹலிபிபு
நீங்கள் இந்திய வரலாறு, கட்டிடக் கலையின் அற்புதங்களை, கலைகளை ரசிப்பவர் என்றால் நீங்கள் தவறாமல் செல்ல வேண்டிய இடம் பெளூர்-ஹலிபிபு தான். இந்திய புராணங்கள், கலாச்சாரம் ஆகியவற்றின் அழகிய கதைகளை சொல்லி உங்களை வியக்க வைக்க ஹோய்சாலா கோவில்கள் என பல விஷயங்கள் இந்த ஒரே இடத்தில் நிறைந்திருக்கிறது. மன்னர்கள் காலத்திற்கே சென்று விட்டு வந்த உணர்வை உங்களுக்கு கொடுத்து விடும்.
ஹார்ஸ்லி ஹில்ஸ்
நகரத்தின் பரபரப்பு இல்லாமல் குளிர்ந்த வானிலை, இயற்கை அழகுடன் கூடிய ஒரு விசித்திரமான மலை பிரதேசத்திற்கு செல்ல வேண்டும் என நினைத்தால் உங்களின் தேர்வு கண்டிப்பாக ஹார்ஸ்லி ஹில்ஸாக தான் இருக்கும். இளம் ஜோடிகள், குடும்பத்துடன் செல்வதற்கு என அனைவருக்கும் ஏற்ற மலை பயணமாக இது இருக்கும். டிரக்கிங் செல்வதற்கு, இயற்கையை ரசித்த படி வாக்கிங் செல்வதற்கு, அமைதியாக ஓய்வெடுப்பதற்கு என அனைத்திற்கும் ஏற்ற வாய்ப்பை ஹார்ஸ்லி ஹில்ஸ் வழங்குகிறது.
சிக்மகளூர்
காபி தோட்டம், பனி போர்த்திய மலைகளுக்கு பெயர் போனவை சிக்மகளூர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதைத் தாண்டி அமைதியாக ஓய்வெடுப்பதற்கும் ஏற்ற இடம் இது தான். டிரெக்கிங், நீர்வீழ்ச்சி, பசுமையின் அழகு ஆகியவற்றை உற்சாகமாக அனுபவிக்க ஏற்ற இடம் இது தான். இங்கு கிடைக்கும் சூப்பரான காபியை குடிக்க மிஸ் பண்ணிடாதீங்க. இதுவரை நீங்கள் காபி பிடிக்காதவராக இருந்தால் கூட, ஒரு முறை சிக்மகளூர் காபியை குடித்து விட்டு வந்தால் அதற்கு பிறகு நீங்கள் காபியின் தீவிர காதலராக மாறி விடுவீர்கள்.
கூர்க்
இந்தியாவின் ஸ்காட்லாந்து என வர்ணிக்கப்படும் இடம் கூர்க். இங்குள்ள மலைகள், காபி எஸ்டேட்கள் வெளிநாட்டிற்கு சென்று விட்டு வந்த சூப்பரான அனுபவத்தை தரும். அருவிகள், மலையேற்றம், இதமான குளுமை, மலைகளின் அழகு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை தருவதாக இருக்கும்.
ஹம்பி
யுனெஸ்கோவின் பாரம்பரிய தலங்களில் ஒன்றாக இருக்கும் ஹம்பி இந்திய வரலாற்று சிறப்பிற்கு ஒரு சான்று. விஜயநகர பேரரசின் சிறப்புகளை எடுத்துக் கூறும் இடம். அதிசயிக்க வைக்கும் கோவில்கள், பாரம்பரிய கலைகள், பாறைகளால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் ஆகியவற்றை பார்க்க பார்க்க நம்மையும் அறியாமல் மனதை பறிகொடுத்து விடுவோம்.
கபினி
வனப் பகுதிக்குள் சுற்றி பார்த்து விட்டு வந்த அனுபவத்தை பெற வேண்டும் என்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் கபினி தான். காட்டு பயணத்தை மேற்கொண்ட சுவாரஸ்ய அனுபவத்தை தரும். நாகர்ஹோல் தேசிய பூங்கா, கபினி ஆற்றில் படகு சவாரி, புலிகள், யானைகள் போன்ற காட்டு விலங்குகள், அவற்றின் வாழ்க்கை ஆகியவற்றை ரசித்து மகிழ முடியும்.
இந்த 10 இடங்களும் நிச்சயம் உங்களின் மனதிற்கு நெருக்கமானதாக மாறி விடும். வாய்ப்பு கிடைக்கும் போது ஒருமுறையாவது இந்த இடங்களுக்கு சென்று விட்டு வாருங்கள்.



Click it and Unblock the Notifications






