திருமலை திருப்பதி ஏழுமலையானை அதிக நேரம் காத்திருக்காமல் தரிசிக்க பக்தர்களுக்கு உதவியாக இருப்பது ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட். ஒவ்வொரு மாதமும் டிக்கெட் விண்டோ திறந்த ஓரிரு மணி நேரத்தில் அந்த மாதத்திற்கான அனைத்து டிக்கெட்டுகளும் புக் ஆகி விடும். அந்த அளவுக்கு டிமாண்ட் உள்ள இந்த சிறப்பு தரிசன டிக்கெட்டுகளின் விலை குறைக்கப்படவுள்ளது என ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் லட்டுவின் விலை கூட பாதியாக குறைக்கப்படவுள்ளதாம்! இது உண்மை தானா?
ஒவ்வொரு மாதமும் விற்று தீர்ந்துவிடும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்
ஒவ்வொரு மாதமும் 20 தேதிகளுக்கு மேல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும். நீங்கள் டிக்கெட் புக் செய்ய விரும்பினால் டிக்கெட் வெளியிடப்படும் தேதியன்று திருமலை திருப்பதியின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://ttdevasthanams.ap.gov.in/home/dashboard ஐ அணுகி உங்களது போன் நம்பர், OTP கொடுத்து, பக்தர்களின் விவரங்கள் வழங்கி, பணம் செலுத்தி டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். ஆனால், டிக்கெட் விண்டோ திறந்த ஓரிரு மணி நேரத்தில் அந்த மாதத்திற்கான அனைத்து டிக்கெட்டுகளும் புக் ஆகி விடும். அந்த அளவுக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிடுகின்றன. இந்நிலையில் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளின் விலை ரூ.300 இல் இருந்து ரூ.200 ஆக குறைக்கப்படவுள்ளது என்கிற செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.
திருப்பதி லட்டுவின் விலை ரூ.25 தானா?
திருமலை திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு ரூ.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. திருமலைக்கு வருகை தரும் பக்தர்கள் யாவரும் எந்த எல்லையுமின்றி எத்தனை லட்டுக்கள் வேண்டுமானாலும் வாங்கிச் செல்லலாம், ஒரு லட்டுவிற்கு தலா ரூ.50 செலுத்த வேண்டும். உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டுவின் விலை ரூ.25 ஆக குறைக்கப்படவுள்ளது என்கிற செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.

புரோக்கர்களால் ஏமாற்றப்படும் மக்கள்
இதே போல ஒரு சில வாட்ஸ்அப் குரூப்களில் ரூ.300 உடன் கூடுதல் பணம் செலுத்தினால் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் கிடைக்கும் என்று போன் நம்பருடன் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதுவும் பொய் தான் எனவும், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் மட்டுமே கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது. பக்தர்கள் யாரும் இது போன்ற புரோக்கர்களை நம்ப வேண்டாம் என TTD கேட்டுக் கொண்டுள்ளது.
TTD யின் அதிகாரப்பூர்வ போர்டலில் மட்டுமே டிக்கெட் புக் செய்ய வேண்டும்
தேவஸ்தான அதிகராப்பூர்வ இணையத்தளத்தில் புக் செய்யப்பட்டு பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மட்டுமே செல்லுபடி ஆகும் எனவும், புரோக்கர்கள் மூலம் பணத்தை கொடுத்த ஏமாற வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. TTD யின் அதிகாரப்பூர்வ போர்டலில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
மாநில சுற்றுலாத் துறையை அணுகலாம்
பல்வேறு மாநிலங்களின் சுற்றுலாத் துறைகளுக்கு மட்டுமே குறிப்பிட்ட அளவு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்தகைய சுற்றுலா பேக்கேஜ் மூலம் வர விரும்பும் பக்தர்கள் புரோக்கர்களை அணுகாமல், அந்தந்த மாநில சுற்றுலா இணையதளம் மூலம் நேரடியாக தரிசன டிக்கெட் புக் செய்து அந்த பேக்கேஜின் கீழ் சுவாமி தரிசனம் செய்யலாம் என TTD தெரிவித்துள்ளது.
லட்டு மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் விலையில் மாற்றமில்லை
இந்நிலையில் லட்டுவின் விலை மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளின் விலை குறைப்பு போன்ற வெளிவந்த செய்திகள் அனைத்தும் பொய் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்த செய்தியை உடனடியாக மறுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் லட்டு மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த பொய்யான செய்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications





