உலகின் பல மூலைகளிலிருந்தும் நாள்தோறும் சென்னையை தேடி பறவைகள் புலம்பெயர்ந்து வருவது போல் பல்லாயிரக்கணக்கான பேர் வந்து கொண்டிருக்கின்றனர்.
அப்படி வரும் கூட்டத்தில் பாதிபேர் மெரினா பீச்சுக்கும், மீதிபேர் கபாலீசுவரர் கோயில், பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில், ஷாப்பிங் மால்கள், வண்டலூர் பூங்கா என்று தங்களுக்கு பிடித்தமான இடங்களுக்கும் செல்கிறார்கள்.
எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்த பிறகு வாய்க்கு ருசியாய் சாப்பிட வேண்டும் என்றால் ஏகப்பட்ட ஹோட்டல்களும், ரெஸ்டாரன்ட்டுகளும் சென்னையில் உள்ளன.
ஒரு ஜப்பான் பயணி சாப்பிட விரும்பும் நம்ம ஊரு செட்டிநாடு உணவானாலும் சரி, நம் ஆட்கள் ஏங்கித் தவிக்கும் அமெரிக்கன் பீசாவானாலும் சரி சென்னையில் அதை ருசித்து சாப்பிட எக்கச்சக்கமான உணவகங்கள் இருக்கின்றன.
ஹோட்டல் சரவணபவன்
காலையில் வாக்கிங் போயிட்டு வந்து சரவணபவன்ல காப்பி குடிக்கிற சுகமே சுகந்தான். தேன் போல தித்திக்கிற காப்பி மாதிரியே நம்ம ஊரு பஜ்ஜி, சொஜ்ஜிலயிருந்து, பானிபூரி, கட்லட், பாம்பே அல்வா, அமெரிக்கன் பீஸா வரைக்கும் ஒரே அமர்க்களம்தான். இதுபோக இன்னும் இன்னும் பல பதார்த்தங்களை அறிமுகப்படுத்திக்கிட்டே இருக்காங்க. சென்னையின் பல பகுதிகளில் இதன் கிளைகள் இருந்தாலும் வடபழனி முருகன் கோயில்ல சாமி தரிசனம் பண்ணிட்டு அதுக்கு மிக அருகிலேயே இருக்குற சரவணபவன்ல குடும்பத்தோட சாப்பிட்டு பாருங்க உங்களால அத மறக்கவே முடியாது!
புஹாரி ஹோட்டல்
சென்னையின் பழமையான ஹோட்டல்களில் ஒன்று புஹாரி ஹோட்டல். அசைவ பிரியர்களின் நாடி நரம்புகளை சுண்டி இழுக்கும் புஹாரி சிக்கன தெரியாதவங்க சென்னையில ஒருத்தரும் இருக்க முடியாது. புஹாரிங்கற பேரச் சொன்னாலே நாக்குல எச்சு ஊறுற அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்ப பிரபலம். ஒரு வாட்டி இங்க வந்து பாருங்க அதுக்கப்புறம் உங்க பொண்டாட்டி சமையலயே மறந்துடுவீங்க. அவங்களும் சமைக்கிற தொந்தரவு இல்லாம ஜாலியா வீட்ல சீரியல் பாக்கலாம்ல?!!
அஞ்சப்பர் செட்டிநாடு ஹோட்டல்
செட்டிநாடு சமையல பிடிக்கதாவங்க யாராவது இருக்க முடியுமா?...அந்த காரைக்குடி மணம் சென்னையில அடிக்கிற இடம்தான் நம்ம அஞ்சப்பர் ஹோட்டல். சைவமோ, அசைவமோ எதுவா இருந்தாலும் நல்லா காரசாரமா வளைச்சுகட்டி அடிக்கலாம் இங்க. நாட்டுக்கோழி ரசமா இருந்தாலும், ஸ்வீட் கார்ன் சூப்பா இருந்தாலும் அஞ்சப்பர் சமையல் தனிரகம்தான்.
திண்டுக்கல் தலப்பாக்கட்டி
உலகம் முழுக்க ஒரு பிரியாணிக்கு மவுசு இருக்குன்னா அது கண்டிப்பா தலப்பாக்கட்டி பிரியாணிதாங்க. திண்டுக்கல் தலப்பாக்கட்டியில் மற்ற உணவகங்களை போல் அல்லாமல் சீரக சம்பாவில் பிரியாணி செய்கிறார்கள். இது மசாலா பொருட்களின் சுவையினை முழுவதுமாக உறிஞ்சிக்கொள்வதால் ருசி பிரமாதமாக இருக்கிறது. அதோடு சுவைமிக்க கன்னிவாடி ஆட்டு இறைச்சி வேறு!...அடாடாடாடா என்னத்த சொல்ல?!!...வந்து சாப்பிட்டு பாருங்க!!!
பொன்னுசாமி ஹோட்டல்
சென்னையில் பொன்னுசாமி ஹோட்டல் இருக்கற பக்கம் போனீங்கனாலே உள்ளயிருந்து வர்ற வாசனை தன்னாலே உங்கள உள்ள இழுத்திரும். செட்டிநாடு, சைனீஸ், தந்தூரி, கான்டினென்டல் என்று பூந்து விளையாடுறாங்க பொன்னுசாமி ஹோட்டலில். அதனால இங்க எப்பப்பாத்தாலும் கூட்டம் ஜேஜேன்னுதான் இருக்கும். அதுவும் சனி, ஞாயிறுல நீங்க பொன்னுசாமி ஹோட்டல் போறீங்கன்னா முன்பதிவு செஞ்சிக்கறது நல்லது.
நம்ம வீடு வசந்தபவன்
நம்ம வீடு வசந்தபவன்னு சும்மா பேரு வைக்கலங்க..நிஜமாவே நம்ம வீட்டு சமையல் மாதிரி சுத்தபத்தமா, அக்கறையோட செஞ்ச உணவு வகைகளை அன்போட பரிமாறுறாங்க இங்க..சுடச்சுட மணக்க மணக்க இந்த சமையல சாப்பிடும்போது நம்ம அம்மாவோட கைப்பக்குவம் மாதிரியே இருக்குதுன்னு தோணும்!
ரத்னா கஃபே
திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோயில் எந்த அளவுக்கு பிரபலமோ அதே அளவுக்கு ரத்னா கஃபேவும் பிரபலம். அப்படியே ஜாலியா ஜிலுஜிலுன்னு மெரினா பீச்சுல காத்து வாங்கிட்டே நடந்து வந்து ரத்னா கஃபேயில காப்பி குடிக்கிறது அடடா தேவாமிர்தம்தான் (2010-ஆம் ஆண்டு NDTV அவார்ட் வாங்கிய காப்பி). அதோட சுடச்சுட இட்லி சாம்பாரும் சாப்பிட்டு பாருங்க அப்பறம் குட்டிபோன பூனை மாதிரி அங்கேயேதான் சுத்திகிட்டு இருப்பீங்க!