மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு புனிதத்தன்மை வாய்ந்த மாதம் இந்த மார்கழி மாதம். மார்கழி மாதம் வளர்பிறை நாளில் வரும் ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதேசியாக கொண்டாடுகிறோம். மகா விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது 'ஏகாதசி விரதம்'. இந்த விரதத்தை கடைப்பிடிப்பது அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்கிறது புராணங்கள். இந்த மாதத்தில் இறந்தாலும் கூட நாம் சொர்க்கத்திற்கு செல்வோம் என்று கூறுவார்கள். மார்கழி மாதத்தின் சிறப்பு மற்றும் சொர்க்க வாசல் உருவான கதையை பற்றி இங்கே காண்போம்!

முக்தி தரும் வைகுண்ட ஏகாதசி
பகவான் விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் தொடங்கி எல்லா பெருமாள் ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெறும். பெருமாளின் திருவடியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று காத்திருக்கின்றனர். சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளும் இறைவன் தனது பக்தர்களையும் அந்த வாசல் வழியாக அழைத்துச் சென்று அருள்பாலிக்கிறார்.

வருடத்திலேயே மிகவும் புண்ணியமான நாள்
மாதத்தில் இரண்டு ஏகாதசி என வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வருகின்றன. ஆனாலும், வைகுண்ட ஏகாதசியன்று மிகவும் சிறப்பு வாய்ந்தது. வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் வைகுண்டத்தில் இருந்து அருள்பாலிப்பதாக நம்பப்படுவதால் இந்த விழா சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. விரதமிருந்து இரவு முழுவதும் கண் விழித்து, அதிகாலையில் இறைவனை தரிசித்தால் உலகின் நன்மைகள் அனைத்தையும் பெறலாம்.

பெருமாளை கொல்ல நினைத்த அசுரன்
கிருதயுகத்தில் முரண் என்ற ஒரு அசுரன் இருந்தான். அவன் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்திக் கொண்டு இருந்தான். இந்த அசுரனை அடக்க முடியாமல் திணறினர் தேவர்கள். சிவ பெருமானிடம் சென்று தேவர்கள் முறையிட்டனர். ஆனால், சிவ பெருமானோ இவனை அழிக்க விஷ்ணுவால் மட்டுமே முடியும், ஆதலால் நீங்கள் அவரிடம் செல்லுங்கள் என்று அனுப்பினார். இதையறிந்த அசுரன் நானே பெருமாளை முடித்து விடுகிறேன் என வேகமாக விஷ்ணு இருக்குமிடத்தை நோக்கி புறப்பட்டான்.

திருமால் உடலில் இருந்து வெளிப்பட்ட அழகிய பெண்
அந்த இடத்திற்கு, திருமாலைத் தேடிவந்த முரன், பள்ளிகொண்டிருந்த திருமாலைக் கொல்ல நினைத்து உடைவாளை உருவினான். திருமாலின் உடலில் இருந்து ஒரு அழகிய பெண் முரணை போருக்கு அழைத்து அவனையும் அழித்தாள். உறங்கிக் கொண்டிருந்த பெருமாள் எதுவும் தெரியாதது போல் கண் விழித்து, அந்த அழகிய பெண் சக்திக்கு 'ஏகாதசி' என்று பெயர் சூட்டினார்.

ஏகாதசியை எண்ணி விரதமிருந்தால் சகலமும் கிடைக்கும்
''ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்'' என்று அருளினார். மார்கழி மாதத் தேய்பிறையில் தோன்றிய ஏகாதசி 'உற்பத்தி ஏகாதசி' ஆகும். மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும். அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் விரதமிருந்து இறைவனை வழிபட்டால் மோட்சம் அடையலாம் என்பது ஐதீகம்.

அசுரர்களுக்காக திறந்த சொர்க்க வாசல்
அதே போல மது, கைடபர்கள் என்ற இரு அசுரர்கள் பிரம்மாவைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த மகா விஷ்ணு, பிரம்மாவை விட்டுவிடும்படியும், அவர்கள் கேட்கும் வரத்தைத் தருவதாகவும் கூறினார். இந்த யுத்தத்தின் முடிவில் பகவான் அந்த இரு அசுரர்களையும் வீழ்த்தினார். பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள் பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தினைக் கேட்டனர். மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலைத் அதாவது சொர்க்க வாசலை திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக்கொண்டார்.

சொர்க்க வாசல் தரிசித்தால் மோட்சம் நிச்சயம்
பகவானே! தங்களை ஆலயங்களில் விக்கிரக வடிவில் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை ஓர் உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று ஆலயத்தின் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வருபவர்களும் மோட்சம் அடைய வேண்டும் என்று வரம் கேட்டனர். பரம தயாளனாகிய பகவானும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார்.

சொர்க்க வாசல் 2022
அன்று முதல் இந்த விரதம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புராணக் கதைகள் தெரிவிக்கின்றன. இந்நாளில் சரியாக விரதமிருந்து அதிகாலை திறக்கப்படும் சொர்க்கவாசல் வழியே இறைவனை தரிசித்தால் சகல புண்ணியங்களும் கிடைக்கும். இறந்தபின் சொர்க்கத்திற்கு செல்லலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த புனிதமான நன் நாள் ஜனவரி 2 2023 அன்று வருகிறது. இந்த நாளில் பெருமாளின் ஏனைய ஆலயங்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்படும். நீங்களும் உங்களுக்கு அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று பெருமாளை வழிபடுங்கள். உங்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications





