நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் திருமலை வேங்கடமுடையான் கோவில் எப்பொழுதும் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகப்பிரசித்தி கோவிலாகும். திருமலை திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனம் மற்றும் தங்குமிடம் தொடர்பான தற்போதைய அமைப்பில் பல மோசடிகள் நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதனை சரி செய்யும் பொருட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் மார்ச் 1 முதல் முன்னோடி திட்ட அடிப்படையில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனை பக்தர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

திருப்பதியில் நடைபெறும் முறைகேடுகள்
லட்டு பிரசாதம் வழங்குவது முதல் சர்வ தரிசனம் டோக்கன் வழங்குவது, பக்தர்களுக்கு தங்கும் இடம் ஒதுக்குவது வரை சில முறைகேடுகள் நடப்பதாக TTD வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது மேலும் ஒரு முன்னேற்றமாக, வைகுந்தம் 2 மற்றும் ஏஎம்எஸ் அமைப்புகளில் சோதனை அடிப்படையில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது. முகத்தை அடையாளம் காணும் முறையை அறிமுகப்படுத்தினால், முறைகேடுகளை அதிகபட்சமாகத் தடுக்க முடியும் என்று TTD உயர் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அறிமுகப்படுத்தப்படும் தொழில்நுட்பம்
இப்போது மார்ச் 1 முதல், கோவிலில் பக்தர்களுக்கு முகம் அடையாளம் காணும் முறை அறிமுகப்படுத்தப்படும். திருமலை மலைக் கோவிலில் பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் தங்கும் வசதி தொடர்பாக தற்போதுள்ள அமைப்பில் உள்ள ஓட்டைகளை நீக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பக்தர் அதிக டோக்கன்கள் வாங்குவதைத் தடுக்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று TTD தெரிவித்துள்ளது.

அதிக டோக்கன்களை வாங்குவதைத் தடுக்க முயற்சி
டோக்கன் இல்லாத தரிசனம் மற்றும் தங்கும் இட ஒதுக்கீடு அமைப்புகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவது இதன் பிரதான நோக்கமாகும். சர்வ தர்ஷன் வளாகத்திலும், காஷன் டெபாசிட் ரீஃபண்ட் கவுன்டர்களிலும் ஒருவர் அதிக டோக்கன்களை வாங்குவதைத் தடுக்க இந்த புதிய தொழில்நுட்ப அமைப்பு பயன்படுத்தப்படும்.

நேரில் வந்து டோக்கன் பெற்று சுவாமி தரிசனம் செய்பவர்களே அதிகம்
திருப்பதியை பொறுத்தவரை பெரும்பாலான சேவைகளுக்கான முன்பதிவு ஆன்லைன் மூலமே நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள் முன்பதிவு செய்வதற்கு வசதியாக சமீபத்தில் புதிய மொபைல் செயலி ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது. இருந்தாலும் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து தரிசனம் செய்பவர்களை விட, நேரில் வந்து டோக்கன் பெற்று இலவசமாக தரிசனம் செய்யும் பக்தர்களே அதிகம்.

மார்ச் 1 முதல் பயோமெட்ரிக்
இந்நிலையில் சர்வ தரிசனத்திற்காக டோக்கன் பெறும் பக்தர்களுக்கு பயோமெட்ரிக் முறைக்கு பதிலாக முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் (Facial Recognition Technology)முறையை சோதனை அடிப்படையில் மார்ச் 1 ம் தேதி முதல் அறிமுகம் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பக்தர்கள் ஏமாற்றமடைவதை தடுக்க நடவடிக்கை
பக்தர்களுக்கான தங்குமிடத்தைப் பொறுத்தவரை, திருமலையில் 7,000 தங்கும் அறைகள் உள்ளன. அவற்றில் சுமார் 5,000 சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கப்படும், 1,000 விஐபி மற்றும் இதர முக்கிய காரணங்களுக்காக ஒதுக்கப்படும். மீதமுள்ள 1,000 அறைகள் தினசரி பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியிருக்க சில பக்தர்களுக்கு சிபாரிசு கடிதங்களுடன் தங்குமிடம் கிடைக்கிறது. வேறு சில ஏமாந்த பக்தர்கள் புரோக்கர்களை அணுகி, அறை வாடகைத் தொகையைத் தவிர்த்து, காஷன் டெபாசிட்டை விழுங்கி பக்தர்களை கொள்ளையடித்து விடுகின்றனர்.

பல முன்னணி நிறுவனங்களை விட சொத்து மதிப்பு அதிகம்
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) 1933 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து முதல் முறையாக கடந்த ஆண்டு அதன் நிகர மதிப்பை அறிவித்தது. உலகப் புகழ்பெற்ற வெங்கடேஸ்வரா கோவிலின் நிகர மதிப்பு ஐடி சேவை நிறுவனமான விப்ரோ, உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான நெஸ்லே மற்றும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ONGC) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) ஆகியவற்றின் சந்தை மூலதனத்தை விட அதிகமாம். ஆம் திருமலை வேங்கடேச பெருமாளின் சொத்து மதிப்பு ரூ. 2.5 லட்சம் கோடியாம்!
திருமலையில் உள்ள பல்வேறு அமைப்புகளில் முறைகேடுகள் நடப்பது குறித்து தெரியவந்ததையடுத்து, எஸ்எஸ்டி டைம் ஸ்லாட், லட்டு பிரசாதம், அறைகள் ஒதுக்கீடு வரையிலான முன்னோடி திட்ட அடிப்படையில் மார்ச் 1 முதல் ஒரு வாரத்திற்கு முகத்தை அடையாளம் காணும் முறையை TTD அறிமுகப்படுத்துகிறது. இனி இதுபோன்ற முறைகேடுகள் நடப்பது குறையும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்!



Click it and Unblock the Notifications





