திருப்பதி என்றாலே உலகப்பிரசித்தி பெற்ற திருமலை ஏழுமலையான் கோயில் தான் என்று நாம் அனைவரும் அறிவோம். ஆனால் ஏழுமலையான் கோயிலுக்கு இணையாக சிறப்பும், புகழும் நிறைந்த பல முக்கிய ஸ்தலங்கள் திருப்பதியில் உள்ளன. நீங்கள் திருப்பதி செல்லும் போது ஏழுமலையான் கோயிலுக்கு சென்ற பிறகு, இந்த பிரசித்திப் பெற்ற கோயில்களையும் தரிசிக்கலாம். இங்கே உள்ள ஒவ்வொரு கோயிலும் வரலாற்று மற்றும் புராண முக்கியத்துவம் வாய்ந்தது, புனித யாத்திரையை முழுமையானதாகவும், ஆன்மீக ரீதியில் நிறைவாகவும் ஆக்குகிறது! உங்களுடைய திருப்பதி யாத்திரையில் நீங்கள் தரிசிக்க வேண்டிய முக்கிய கோயில்கள் இதோ!

ஸ்ரீ கோவிந்தராஜ ஸ்வாமி திருக்கோயில், திருப்பதி
உங்கள் திருப்பதி யாத்திரையில் திருமலை வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு பிறகு, முதலில் செல்ல வேண்டிய கோயில் இதுவாகும். திருப்பதி நகரில் இருந்து 2 கிமீ தொலைவில், அதாவது திருப்பதி ரயில் நிலையம் மற்றும் விஷ்ணுநிவாசம் காம்ப்ளக்ஸ்க்கு நேர் எதிரே ஸ்ரீ கோவிந்தராஜ ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கட்டிடக்கலையின் அழகைக் காணவே இங்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். நுழைவாயிலில் இருந்து அதன் உள் முற்றங்கள் வரை, இந்த கட்டமைப்பின் அனைத்து அம்சங்களும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவில் பல நூற்றாண்டுக் கால வரலாற்றையும் கொண்டுள்ளது. தமிழ் திரைப்படம் தசாவதாரத்தில் வருவது போல, சோழ மன்னன் சிதம்பரத்தின் திவ்ய தேச பெருமானான ஸ்ரீ கோவிந்தராஜரைக் கடலில் கரைத்தார். அவர் நினைவாக அவ்வாலய உத்சவமூர்த்தியை சில வைணவர்கள் ராமானுஜர் உதவியுடன் இங்கு நிர்மாணம் செய்தனர்.
ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், ஸ்ரீநிவாச மங்காபுரம்
திருப்பதியில் இருந்து 11 கிமீ தொலைவில் ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் இந்த புகழ்பெற்ற ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் எப்போதோ கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த கோவில் கலியுகத்தில் நல்லிணக்கத்தை மீட்டெடுக்கப் பிறந்த இந்துக் கடவுளான விஷ்ணுவின் அவதாரமான வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திருமலை மலையில் உள்ள வெங்கடேஸ்வர பெருமானை தரிசிக்க முயலும் எவரும் ஏதோ ஒரு காரணத்தினால் அவரை தரிசிக்க முடியாமல் போகலாம். தான் திருமலையில் மட்டுமல்ல எங்கும் இருப்பேன் என்று உணர்த்துவதற்காக ஸ்ரீநிவாச மங்காபுரத்தை திருவேங்கடமுடையான் தன் திருக்கரங்களால் தொட்டு ஆசீர்வதித்ததாக சொல்லப்படுகிறது. இங்கு சென்று வந்தால் திருமலை சென்று வந்ததற்கான புண்ணியமும் ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஸ்ரீ கோதண்டராமர் சன்னதி, திருப்பதி
ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோயில் திருப்பதியின் மையத்தில் அமைந்துள்ள ஒரு புனிதமான இந்துக் கோயிலாகும். இந்த கோயில் விஷ்ணுவின் அவதாரமான ராமர் மற்றும் அவரது மனைவி சீதா மற்றும் அவரது விசுவாசமான சகோதரர் லட்சுமணன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோயிலின் தோற்றம் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது, மேலும் இது புராண முக்கியத்துவம் வாய்ந்தது. இராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோர் அசுர மன்னன் ராவணனை வென்று இலங்கையிலிருந்து திரும்பிய போது இங்கு தங்கியதாக நம்பப்படுகிறது. கோவிலின் கட்டிடக்கலையானது திராவிட மற்றும் விஜயநகர பாணிகளின் கலவையாகும். திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் இருந்து திருப்பதி நகரின் மையப்பகுதியில் இந்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயில் அமைந்துள்ளது.
ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில், நாராயணவனம்
திருப்பதியில் இருந்து 38 கிமீ தொலைவில் நாராயணவனத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ வெங்கடேசப் பெருமான் ஸ்ரீ பத்மாவதி தேவியை இந்த கோவிலில் தான் மணந்து கொண்டாராம். அவர்கள் திருமணத்தின் போது மாவு அரைத்த இயந்திரத்தைக் கூட இங்கே காணலாம். கோயில் வளாகத்தில் ஸ்ரீ பத்மாவதி கோயில், ஸ்ரீ ஆண்டாள் கோயில், ஸ்ரீ சீதா ராம லக்ஷ்மண கோயில் மற்றும் ஸ்ரீ ரங்கநாயக்குலா கோயில் ஆகியவற்றுக்கான தனி சன்னதிகளும் உள்ளன. புதிதாக திருமணம் ஆனவர்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள், ஏன் அனைவரும் இந்த கோவிலுக்கு சென்று வரவேண்டும்.

பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில், அப்பளயகுண்டா
திருப்பதியில் இருந்து 18 கிமீ தொலைவில், அதாவது நாராயணவனம் சென்று வரும் வழியில் அப்பளயகுண்டாவில் இந்த பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. அபய ஹஸ்த தோரணையில் நின்று காட்சி கொடுக்கும் பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமியின் அழகில் நாம் நம்மை தொலைப்பது உறுதி. இந்த பழமையான கோவிலில் பத்மாவதி தேவி, ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகளும் உள்ளன. இந்த கோயிலில் உள்ள பிரத்யேகமான காற்றுக் கடவுளை வழிபட்டு சென்றால், நாள்பட்ட நோய்களில் இருந்தும் கூட நிவாரணம் கிடைக்குமாம்.

ஸ்ரீ பத்மாவதி திருக்கோயில், திருச்சானூர்
உங்கள் திருப்பதி பயணம் அம்பாளை காணாமல் நிச்சயம் முழுமையடையாது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் அனைவரும் முதலில் தாயாரை தரிசித்து விட்டு தான் திருமலைக்கு பயணிக்க வேண்டும். திருப்பதியில் இருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருச்சானூருக்கு ஏராளமான பேருந்துகளும், டாக்ஸிகளும் இயக்கப்படுகின்றன. பத்மாவதி தேவி தங்கத் தாமரை மலராகத் தோன்றியதாகக் கூறப்படும் இந்த ஏரியில் முழு பக்தியுடன் நீராடுவது தெய்வீகமாகக் கருதப்படுகிறது. சிறப்பு திருவிழாக்கள் மற்றும் பிரமாண்டமான கொண்டாட்டங்களில், பத்ம சரோவரத்தின் பழைய நீரில் நீராடவும் பிரார்த்தனை செய்யவும் பெரும் கூட்டம் கூடுகிறது.



Click it and Unblock the Notifications





