ஆந்திராவில் உள்ள அழகிய சுற்றுலாத் தலமான அரக்கு கிழக்கு தொடர்ச்சி மலைகள், பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள் என பசுமை மாறா சூழலால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் செல்லும் எவரும் அரக்குக்கு செல்லாமல் திரும்பினால் பயணம் முழுமை அடையாது என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் குளிர் காலத்தில் அரக்குவின் அழகை காண கண் கோடி வேண்டும். அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் அரக்கு நோக்கி படையெடுப்பதால் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) ஒரு அட்டகாசமான டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனைப் பற்றிய முழு விவரங்களும் இதோ கீழே!
ஆந்திராவின் ஊட்டி
ஆந்திராவில் உள்ள மலைவாசஸ்தலங்களில் முதன்மையானது இந்த அரக்கு. பல்வேறு திரைப்படங்கள் மற்றும் பாடல்களில் நீங்கள் அரக்குவை கண்டிருக்கலாம். ஆண்டுதோறும் இதமான காலநிலை, எங்கு பார்த்தாலும் பசுமை என காட்சியளிப்பதால் இங்கு எப்பொழுதும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகவே இருக்கிறது. அரக்குவின் அழகை ரசிக்க குளிர்காலமே சிறந்த நேரம். மலைவாசஸ்தலமானது குளிர்காலத்தில் சொர்க்கமாகவே காட்சியளிக்கிறது. அரக்கு சென்றால் தான் சுற்றி பார்க்க முடியும் என்று இல்லை, அரக்கு செல்லும் வழியே அவ்வளவு அழகாக இருக்கிறது பயணிகளே!
IRCTC யின் அசத்தல் ஆஃபர்
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அரக்குக்கு ஒரு நாள் இரயில் மற்றும் சாலை தொகுப்பை கொண்டு வந்துள்ளது. இந்த பேக்கேஜ் வாரத்தின் எல்லா நாட்களிலும் செயல்படுகிறது. இந்த பேக்கேஜின் விலை வெறும் 2,185 இல் தொடங்குகிறது. நீங்கள் விசாகப்பட்டினத்திலிருந்து அரக்கு வரை ரயிலில் பயணிப்பீர்கள், பின்னர் மலைவாசஸ்தலத்தின் அழகை ஆராய பேருந்தில் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
விசாகப்பட்டினம் to அரக்கு பயணம்
பல்வேறு சுரங்கப்பாதைகள் மற்றும் பாலங்கள் வழியாக ரயில் செல்லும் போது சுற்றுலாப் பயணிகள் மயக்கும் காட்சியை அனுபவிக்க முடியும். இந்த ஒரு நாள் பேக்கேஜ் IRCTC மற்றும் ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். பயணம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் தொடங்கி அதே இடத்தில் முடிவடையும். ரயில் மற்றும் சாலை இரண்டிலும் இந்த அழகை ஆராய சிறந்த வழி எது? இரண்டும் தான்!
அழகிய அரக்கு சுற்றுலா
நீங்கள் அரக்கு சென்றடைந்த பிறகு, ஒரு பேருந்தில் சுற்றி பார்க்க அழைத்துச் செல்லப்படுவீர்கள். உங்கள் சாலைப் பயணத்தில் நீங்கள் முதலில் பார்வையிடும் இடம் பழங்குடியினர் அருங்காட்சியகம் சபுராய் மற்றும் பசுமையான தோட்டங்கள் ஆகும். திம்சா நடனம் என்று அழைக்கப்படும் உள்ளூர்வாசிகளின் நடன நிகழ்ச்சியையும் நீங்கள் கண்டு களிக்கலாம். அடுத்ததாக் போரா குகைகள் மற்றும் கலிகொண்டா வியூ பாயிண்ட், அழகிய அனந்தகிரி காபி தோட்டங்களுக்கும் நீங்கள் செல்வீர்கள்.
டூர் பேக்கேஜிற்கான கட்டணங்கள்
பெரியவர்களுக்கு ஒரு நபருக்கான எகனாமி வகுப்பு கட்டணம் ரூ. 3,060 ஆகும். ஸ்லீப்பர் வகுப்பிற்கு ரூ. 2,385 மற்றும் உட்காரும் வகுப்பிற்கு ரூ. 2,185 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ரூ. 2,670, ரூ. 2,015 மற்றும் ரூ. 1,815 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணத்தில் காலை உணவு, சைவ மதிய உணவு மற்றும் தேநீர் ஆகியவை அடங்கும். போரா குகைகளுக்கான நுழைவுச் சீட்டும் இதில் அடங்கும். அரக்கு பள்ளத்தாக்குக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் பேருந்து ஏசி இல்லாத வாகனமாகும். பின்னர் மீண்டும் ரயில் வாயிலாக விசாகப்பட்டினம் ரயில் நிலையத்திற்கு (VSKP) திரும்புவீர்கள்.