உலகப்புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். வெகு தூரத்தில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.1000 என வசதிகளுடன் கூடிய காட்டேஜ் சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் அதிநவீன வசதிகளுடன் புது ரூம்களை கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பலனடைவார்கள் என்றும் நீண்ட வரிசையில் நின்று ரூம் புக்கிங் செய்ய காத்திருக்க வேண்டியதில்லை என்றும் TTD தேவஸ்தானம் தெரிவித்துள்ளது!

வருடத்தின் எல்லா நாளும் இங்கு திருநாளே
கலியுகவரதனாக நின்று நமக்கு அருள் பாலிக்கும் திருமலையானை பக்தர்கள் ஸ்ரீவாணி சேவை, டோனர் சேவை, விஐபி சேவை, ரூ.300 டோக்கன் சேவை, திவ்ய தரிசனம் மற்றும் சர்வ தரிசனம் வழியாக தரிசித்து வருகின்றனர். இங்கு எத்தனை லட்சம் மக்கள் வந்தாலும் அவர்களுக்கு வேண்டிய உணவு, மருத்துவம், தங்குமிடம், போக்குவரத்து போன்ற வசதிகளை வழங்குவதில் TTD தேவஸ்தானம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சீரமைக்கப்படும் 60 ஆண்டு கால காட்டேஜ்கள்
பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட காட்டேஜ் வளாகங்களை இன்னும் TTD பயன்படுத்தி வருகிறது. இப்போது திருமலையில் சுமார் 7500 ரூம்கள் உள்ளன. 30 முதல் 60 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ரூம்கள் பக்தர்கள் தங்குவதற்கு வழங்கப்படுகிறது. இந்த கட்டிடங்களில் பல குறைபாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. மிகவும் பழைய காட்டேஜ்களான சுதர்ஷன், கோவர்தன், கல்யாணி தங்கும் விடுதிகள் யாவும் இப்போது படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகின்றன. சுதர்ஷனில் 386 அறைகளும், கோவர்தன் கெஸ்ட்ஹவுஸில் 186 அறைகளும், கல்யாணியில் 260 அறைகளும் பக்தர்கள் தங்குவதற்காக வழங்கப்படுகின்றன.

இடிக்கப்படும் சுதர்ஷன், கோவர்தன், கல்யாணி தங்குமிடங்கள்
சுதர்ஷன், கோவர்தன், கல்யாணி ஆகிய மூன்று காட்டேஜ்களும் மிகவும் பழையவை என்பதால் அவற்றையெல்லாம் இடித்துவிட்டு புது காட்டேஜ்கள் கட்ட TTD தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த அனைத்து கட்டிடங்களும் ஒரே நேரத்தில் இடிக்கப்பட்டால் பக்கதர்கள் தங்குவதற்கு சிரமமாக இருக்கும் என்பதால் ஒன்றன் பின் ஒன்றாக காட்டேஜை இடித்து விட்டு அதே இடத்தில் அதிநவீன வசதிகள் கொண்ட புதிய காட்டேஜ்கள் கட்டப்படும் என்று TTD தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

நவீன வசதிகளுடன் திருமலையில் புதிய காட்டேஜ்கள்
ரூ.50 மற்றும் ரூ.100 தங்குமிடங்களில் வெந்நீர் மற்றும் பார்கிங் போன்ற சேவைகள் இல்லை. குறிப்பாக திருமலையில் நிலவும் குளிருக்கு வெந்நீர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் புதிதாக கட்டப்படவுள்ள தங்கும் விடுதிகளில் வெந்நீர் வசதி, பார்க்கிங், முடி காணிக்கை செலுத்துமிடம், ஏசி மற்றும் நான்-ஏசி ரூம்கள் அமைக்கப்படும். அனைத்து வசதிகள் இருந்தாலும் கூட இதன் கட்டணத்தில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது எனவும், சாதாரண மக்களுக்காகவே இந்த காட்டேஜ்கள் கட்டப்படவுள்ளன என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

வெகுஜன மக்களின் நலனுக்காக செயல்படும் TTD
திருமலையில் உள்ள 7500 அறைகளில் 5000 அறைகள் ரூ.50 மற்றும் ரூ.100 அறைகளாகும். கடந்த 40 ஆண்டுகளாக இந்த அறைகளின் வாடகை ஒரே வாடகையாகவே இருந்துள்ளது. இந்த அறைகள் யாவும் 120 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டன. இது தவிர நாரயணகிரி, எஸ்வி விருந்தினர் மாளிகைமட்டுமே விஐபிக்கள் தங்குவதற்காக வழங்கப்படுகிறது. இப்போது கட்டப்படும் இந்த புது தங்குமிடங்களால் பக்தர்கள் பலடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது!



Click it and Unblock the Notifications





