கோடை வந்தேவிட்டது. இப்போதே மதிய நேரத்தில் வெளியே வரமுடியாத அளவுக்கு வெயில் வாட்டிவதைக்கிறது. தமிழகத்தில் கோடை காலத்தில் அதிகளவு வெப்பம் நிலவும் இடமென்றால் அது வேலூர் மாவட்டம் தான்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைகள், புராணத்தில் இடம்பெற்றிருக்கும் கோயில்கள் போன்றவை இங்கே உண்டு. வாருங்கள், வேலூர் நகரின் சுற்றுலா அம்சங்களை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.
தங்க கோயில்:

வேலூர் நகரிலிருந்து 8கி.மீ தொலைவில் ஸ்ரீபுரம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது தங்க கோயில். நூறு ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் இக்கோயில் ஸ்ரீ நாராயணி பீடத்திற்கு சொந்தமானதாகும். இங்கிருக்கும் தங்க கோயிலில் சென்று வழிபடும் முன்பாக ஸ்ரீ சக்கர வடிவில் அமைந்திருக்கும் 1.8கி.மீ நீளமுடைய தோட்டத்தை சுற்றிவரவேண்டும்.

இக்கோயிலின் மூலவராக ஸ்ரீ சக்தி அம்மா உள்ளார். நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் முழுக்க முழுக்க தங்கத்தில் வடிக்கப்பட்டிருக்கும் இக்கோயிலுக்கு நிச்சயம் செல்ல மறந்து விடாதீர்கள்.
வேலூர் கோட்டை:

இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக முதன்முதலில் கிளர்ச்சியில் ஈடுபட்ட பெருமையுடைய நகரம் வேலூர் ஆகும். கி.பி 1806ஆம் ஆண்டு இக்கிளர்ச்சி வேலூர் கோட்டையில் நடைபெற்றது. விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட இக்கோட்டை வேலூர் நகரின் மையத்தில் அமைந்திருக்கிறது.

சுற்றுலாப்பயணிகள் இந்த அகழியில் படகு பயணம் செய்து மகிழலாம்.

சுற்றிலும் பெரிய அகழியுடன் அமைந்திருக்கும் இதனுள் தான் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. சின்னி பொம்மி நாயக்கர் என்ற விஜயநகர பேரரசை சேர்ந்த குறுநில மன்னனால் கட்டப்பட்டதாகும். விஜயநகர பேரரசின் கட்டிடக்கலை வல்லமையின் எடுத்துக்காட்டாக இக்கோயில் திகழ்கிறது.
அம்ரிதி உயிரியல் பூங்கா:

வேலூர் நகரிலிருந்து 25கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது அம்ரிதி உயிரியல் பூங்கா. அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த உயிரியல் பூங்காவினுள் அருவி ஒன்றும் பூங்காவும் உள்ளன. விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமுண்டு. அதிர்ஷ்டம் இருந்தால் மான்கள், கீரிகள், பஞ்சவர்ணக்கிளிகள், நரிகள் போன்ற வனவிலங்குகளை பார்க்கும் வாய்ப்பினை பெறலாம்.



Click it and Unblock the Notifications






