ரயில் பயணங்கள் வழங்கும் குதூகலத்தை, வார்த்தைகளால் வர்ணித்து அவ்வளவு எளிதாக கூறிவிட முடியாது. ரயில் பயணங்கள், பெரும்பாலும் இனிமையானவை. ஆனால், ஒரே பெட்டியில் ஒரே இருக்கையில் நான்கு நாட்கள் செலவிடுவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?

நம்பமுடியாத இந்த பயணம் அசாமின் திப்ருகரில் தொடங்கி, நான்கு நாட்களுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியை அடைகிறது.
இவ்வுலகில் வேறெந்த பயணத்தையும் விட, ரயில் பயணங்கள் நம் மனதுக்கு நெருக்கமாக இருக்க பல காரணங்கள் உண்டு. ரயிலில் உடன் பயணிப்பவர்கள், உணவுகள், ஜன்னல் ஓரோத்தில் இருந்து பல விதமான காற்று, முக்கியமாக பயணத்தின் போது, நம் கருவிழித்திரையில் பட்டு நொடிப்பொழுதில் நகரும் காட்சிகள் என, அடுக்கி கொண்டே போகலாம்.

விழிகளில் ஒரு நொடி பட்டு, சட்டென நம்மை கடந்து செல்லும் ஒவ்வொன்றும், நம் கற்பனை திறனையும், கடந்து சென்ற அந்த காட்சி குறித்தான பார்வையை விசாலமாக்கும். ஆமாங்க... பயணங்களுக்காக மட்டும் ரயிலை தேர்ந்தெடுக்கும் நபர்களை விட, அத்துறையில் பணிபுரிந்து நாள் தோறும் உடன் வரும் உறவாக கொண்டிருக்கும் நபர்களின் வீட்டு குழந்தைகளுக்கு, ரயில் பயணம் என்பது அலாதி தான்.
என்னை போன்ற நபர்களுக்கு, ரயில் பயணம் பல நினைவுகளை நிழலாட செய்கிறது தினந்தோறும். ஆமாங்க... என் அப்பா ரயில்வே துறையில் பணிபுரிந்து இவ்வுலகை விட்டு மறைந்து சென்றவர். ஆனால், ரயில் பயணம் மீதான ஈர்ப்பை, அவர் தான் என்னுள் விதைத்து சென்றவர்.
மரக்கட்டையிலான இருக்கை, ஜன்னல் ஓரமாக அமரும் போது கண்ணில் பட்டு நீரை வரவழைக்கும் கரித்துகள்கள், கரும்புகையின் வாசம். காற்றில் வந்து கண்ணுள் புகுந்த துகள்களின் உறுத்தலால் செந்திறத்துடன் நீண்ட நேரம் தண்ணீரை மட்டும் வாரி கொட்டும் அந்த பயணங்கள் இன்றளவும், என் மனதில் இருந்து மறையா.
இப்படியாக ஒவ்வொருவரின் வாழ்விலும் ரயில் பயணங்கள், பல டைரிகளை நிரப்பி இருக்கும். சரி விஷயத்துக்கு வருகிறேன். நான்கு நாட்கள், 9 மாநிலங்கள், 4 ஆயிரம் கி.மீ., கடந்து செல்லும் அசாதாரண பயண அனுபவத்தை வாரத்தில் இரு முறை வழங்கி வரும் அந்த ரயிலின் பெயர் விவேக் எக்ஸ்பிரஸ்.
விவேக் எக்ஸ்பிரஸ், வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே இயக்கப்படுகிறது. IRCTC இணையதளத்தின்படி, ரயில் எண்கள் 15905/15906 செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இயங்கும்.
திப்ருகாரில் இருந்து இரவு 7:25 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 75 மணி நேரம் அசால்ட்டாக தொடர்ந்து பயணித்து, நான்காவது நாள் இரவு 10:00 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடைகிறது.
19 பெட்டிகள் கொண்ட இந்த ரயில், 75 மணி நேரத்தில் 4,189 கிலோ மீட்டர் பயணித்து, வழியில் 59 நிலையங்களில் நின்று செல்கிறது. நாட்டின் மிக நீண்ட தூரம் செல்லும் இந்த ரயில் அசாம், நாகாலாந்து, பீகார், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை தழுவி செல்கிறது.
நீண்ட பயணம் எப்போது உருவானது
சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, 2011-12ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் திப்ருகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் அறிவிக்கப்பட்டது. ஒன்பது மாநிலங்கள் வழியாக அசாமின் திப்ருகரில் இருந்து தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வரை, இந்த நீண்ட கூந்தல்களை கொண்டவள் பயணிக்கிறாள். ஹலோ... என்ன சார் அவள் என்று வர்ணிக்கிறீர்களே என்று தானே கேட்க போறீங்க... அழகியலை வாரி வழங்கும் எந்தவொன்றும் பெண்ணை உருவகப்படுத்தும் தானே. அதன் அடிப்படையில், அழகை மட்டுமே கொண்டிருக்கும் ரயில் பயணத்தை, பெண்ணுடன் ஒப்பிட்டது தவறில்லை தானே சொல்லுங்கள் பயணப்பிரியர்களே...!
இந்திய இரயில்வே, ஒரு பரந்துபட்ட விரிவாக்கத்தை உள்ளடக்கியது. நாட்டின் வடக்கிலிருந்து தெற்கு முனைகள், கிழக்கிலிருந்து மேற்கு வரை, தன் இறகை விரித்துள்ளது. அதன் தடங்கள், மலைகள் மற்றும் அடர்ந்த காடுகள் வழியாக செல்கின்றன.
அத்தகைய ஒரு குறிப்பிடத்தக்க ஒரு பாதையான இந்த விவேக் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் மிக நீண்ட ரயில் பயணத்தை, வாரத்தில் இரு நாட்கள் மேற்கொள்கிறது. நீங்கள் இந்த ரயிலில் ஏறியவுடன், உங்கள் இலக்கை அடையும் வரை, அடுத்த நான்கு நாட்களுக்கு நீங்கள் ரயிலில் இருப்பீர்கள் என்பதை ஒரு முறை எண்ணித்தான் பாருங்கள். ஏன்? சும்மா ஒரு முறை பயணம் தான் செய்து பாருங்களேன். ஒரு முறை பயணத்துக்கு, ரூ.1,400 வரை என்கிறது அதிகாரப்பூர்வமான தளம். (மாறுதலுக்கு உட்பட்டது)



Click it and Unblock the Notifications






