ஹில் ஸ்டேஷன் என்றாலே தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு தவிர வேறு எதுவும் இல்லை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இயற்கை அழகில் இந்த மூன்று சுற்றுலாத் தலங்களையும் விட பல அழகான, குளிர்ந்த மலைவாசஸ்தலங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அந்த அழகான மறைந்து கிடக்கும் ரத்தினங்களில் ஒன்று தான், திருநெல்வேலி மாவட்டத்தில் 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை மலைகள்! எங்கு பார்த்தாலும் மேகமூட்டம், சுத்தமான குளிர்ந்த காற்று, அழகான சுற்றுலாத் தலங்கள், மனதை வருடம் அமைதி என மாஞ்சோலை நம்மை மயக்குகிறது!
மனதை மயக்கும் மாஞ்சோலை
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு அழகிய மலைவாழ் கிராமம் தான் மாஞ்சோலை! களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் மற்றும் மேல் கோதையாருக்கு அருகில், கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 3500 அடி உயரத்தில் இந்த அழகிய சிறு கிராமம் அமைந்துள்ளது! தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், அணைக்கட்டுகள் மற்றும் பசுமை மாறா மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த சிறு கிராமத்திற்கு நீங்கள் சென்று வாருங்களேன்! இதன் அழகில் நீங்கள் உங்களை தொலைப்பது உறுதி! இந்த இடத்திற்கு எப்படி செல்வது? எப்போது செல்வது? எங்கே அனுமதி வாங்குவது? எங்கே தங்குவது? போன்ற முக்கிய தகவல்கள் கீழே!

வணிகச் சுற்றுலாவால் தீண்டப்படாத இயற்கை அழகு
மாஞ்சோலை என்ற பெயரை பலமுறை நாம் கேள்விப்பட்டு இருப்போம், இங்கே நிலவும் அழகிய வானிலைக்காகவே இங்கு பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இது பொது மக்களிடையே அவ்வளவு பிரபலமா என்று யோசித்தால் அது தான் இல்லை! களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் உள்ளே அமைந்து இருக்கும் இந்த சிறு அழகிய கிராமத்தைச் சுற்றி ஏராளமான இடங்கள் உள்ளன. கிராமத்தில் நிலவும் மிதமான காலநிலை, உங்களைத் தொட்டுச் செல்லும் மேகங்கள், எங்கு பார்த்தாலும் உலவும் மயில்கள், லேசான சாரல் துளிகள் என உங்களது மனதும் உடலும் புத்துணர்ச்சி பெறுவதை நீங்கள் நிச்சயம் உணருவீர்கள்.
மாஞ்சோலையில் என்னவெல்லாம் செய்யலாம்
டார்சன் குளம், காக்காச்சியில் உள்ள மினி கோல்ப் மைதானம், காக்காச்சி ஏரி, குதிரைவெட்டி, குட்டியார் அணை, மணிமுத்தாறு தேயிலை எஸ்டேட், மாஞ்சோலை தேயிலை எஸ்டேட், நாலுமூக்கு, சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனை, வானபெட்சி அம்மன் கோயில், மணிமுத்தாறு அருவி, மேல் கோதையார் அணை ஆகியவை மாஞ்சோலை பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடங்கள் ஆகும். நீங்கள் சாகச விரும்பியாக இருந்தால் அல்லது நண்பர்களுடன் வந்து இருந்தால் ட்ரெக்கிங்கில் ஈடுபடுங்களேன், குதூகலமாக இருக்கும்!

எப்படி அனுமதி வாங்குவது
இதர்கு முன்னர் வரை அம்பை ரேஞ்சு துணை இயக்குனரிடம் இருந்து அனுமதி வாங்க வேண்டும். இனி மாஞ்சோலை செல்ல அம்பாசமுத்திரம் துணை இயக்குனர் அலுவலகத்தையோ அல்லது வனச்சரக அலுவலுகத்தையோ அனுமதிக்காக அணுக வேண்டியதில்லை. மணிமுத்தாறு வன சோதனைச் சாவடிக்கு சென்று அனுமதி வாங்கிக் கொள்ளலாம். முதலில் வரும் 10 கார்களுக்கு மட்டுமே அனுமதி. அதனால் காலை 8 மணிக்கெல்லாம் அங்கு நீங்கள் இருப்பது அவசியம்.
பேருந்தில் செல்பவர்கள் அனுமதி வாங்க வேண்டியது இல்லை
மலையேற்றம் செய்பவர்கள் அடர்ந்த தோட்டங்களுக்கு மத்தியில் மலையேற்றத்தை நன்றாக அனுபவிக்க முடியும். மாஞ்சோலைக்கு தனியார் வாகனங்களில் செல்ல வனத்துறையின் அனுமதி அவசியம். இந்த அழகிய மலைக்கு செல்ல அரசு பேருந்துகளும் உள்ளன.

ருசியான உணவு அருந்த மறக்காதீர்கள்
ஊத்தில் சில கடைகளும் ஹோட்டல்களும் இருக்கின்றன. ஆனால் நீங்கள் மதிய உணவுக்கு வருகிறீர்கள் என்றால் கட்டாயம் இவர்களிடம் முன் கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். இந்த ஹோட்டல்களின் போன் நம்பர்கள் கீழே உள்ள செக் போஸ்ட்களிலேயே ஒட்டப்பட்டு இருக்கிறது. அவர்கள் கொடுக்கும் உணவும் மிகவும் கிராம பாங்கான முறையில், தூய்மையாக தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அங்கேயே சிறிது இளைப்பாறிவிட்டு நீங்கள் குதிரை வெட்டி நோக்கி புறப்பட வேண்டும்.
அழகிய மாஞ்சோலைக்கு நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்
ருசியான மதிய உணவு அருந்திவிட்டு அங்கே இருக்கும் இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு நீங்கள் குடிரைவெட்டி நோக்கி பயணிக்கலாம். செல்லும் வழியெல்லாம் பசுமையைத் தவிர வேறு எதுவும் நம் கண்ணில் படாது. மேலே செல்ல செல்ல பனி அதிகமாகும், சாரல் லேசாக இருக்கும், மேகங்கள் கண்ணை மறைக்கும். மாஞ்சோலை எஸ்டேட்டின் அடிவாரத்தில் சிங்கம்பட்டி ஜமீன் என்ற இடத்தில் மாநில சுற்றுலாத் துறையால் தங்கும் இடம் வழங்கப்படுகிறது. குதிரைவெட்டியில் ஒரு விருந்தினர் மாளிகை உள்ளது, அதை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.
எப்போதும் ஊட்டி, கொடைக்கானல் சென்று போர் அடித்து விட்டதா? புதிதாக ஒரு இடத்தை ஆராய வேண்டும், பட்ஜெட்டிலும் இருக்க வேண்டும் என்று நினைத்தால் மாஞ்சோலை தான் உங்களுக்கான சரியான சாய்ஸ்!



Click it and Unblock the Notifications





