இயற்கையின் பேரழகை, கையில் ஒரு கோப்பை எஸ்டேட் தேநீர் பருகி கொண்டே, நீங்கள் ரசிக்க வேண்டும் என்றால், நீங்கள் உதகைக்கு வந்தே ஆகவேண்டும். அவள் வசீகரமானவள், அவள் கம்பீரமானவள், அவள் தனித்துவமானவள், அவள் இந்தியாவின் மலை வாசஸ்தலங்களின் ராணி. இத்தகைய அடைமொழிகளை தன்னுள் கொண்டே ஒரே அரசி யார் என்றால், அவள் ஊட்டி என்றழைக்கப்படும் உதகமண்டலம்.

நீலகிரி மலைகளின் பசுமையான பகுதிகளில் அமைந்துள்ள ஊட்டி, 2 நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்கள் அதன் இயற்கை அழகை கண்டுபிடித்ததிலிருந்து, இன்றளவும் பல இதயங்களை வென்று வருகிறது.
பரந்து விரிந்த தேயிலை தோட்டங்கள், வண்ணமயமான தோட்டங்கள், அமைதியான ஏரிகள் மற்றும் மாய காடுகள் என, பனிமூட்டம் நிறைந்த மலைக்காற்றால் சூழப்பட்ட ஏராளமான இன்பங்களை ஊட்டி எப்போதும் வழங்க தவறுவதில்லை.

தனிமையை தேடுபவர்கள், பயண விரும்பி, தேனிலவை கொண்டாட விரும்பும் இளம் தம்பதிகள் ஆகியோரின் பிரதான தேர்வு மலைகளின் அரசியான ஊட்டி தான்.
என்னென்ன பார்க்கலாம்
அரசு தாவரவியல் பூங்கா, உதகமண்டலம் ஏரி, பைன் வன வருகை, மான் பூங்கா, அவலாஞ்சி பனிச்சரிவு ஏரி, கேத்தி பள்ளத்தாக்கு, மேல்பவானி ஏரி, ஏமரால்டு ஏரி, நூற்றாண்டு பழமையான புனித ஸ்டீபன் தேவாலயம், அரசு அருங்காட்சியகம் போன்ற பகுதிகளில், சுட சுட ஒரு கோப்பை தேநீர், கடிச்சுக்க வர்க்கி... ஹலோ ஆங்கிலேயரின் விருப்பமான நொறுக்கித் தீனியை நாங்க ஏன் இன்னும் சாப்பிடனும்... நாங்க எங்களுக்கு பிடிச்ச நொறுக்கி தீனி தான் சாப்பிடுவோம் என நீங்கள் அடம் பிடித்தாலும். நான் ஒன்னு சொல்ல மாட்டேன். உங்களுக்கு பிடிச்ச நொறுக்கு தீனியுடன் ஒரு ரவுண்ட் வாங்க.
என்னென்ன செய்யலாம்
மலையேற்றம், இரவு நேரத்தில் செந்நிற சுவாலையுடன் குளிரை போக்க ஒரு முகாம், பொம்மை ரயில் சவாரி, படகு சவாரி.
செட்டி நாடு, கொங்கு நாடு, நாஞ்சி நாடு, பாண்டிய நாடு என, நான்கு விதமான தமிழ்நாட்டின் சுவையான உணவுகளும் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

தவிர்க்க வேண்டிய நேரம்:
அவசரப்படாமல் மலை வாசஸ்தலங்களை சரியாகச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள். ஆண்டில் எந்த நேரத்திலும் ஊட்டிக்கு சென்று சுற்றிப் பார்க்க முடியும் என்றாலும், அதிக மழைப் பொழிவு இருக்கும் மாதங்களில் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்தால் நல்லது.
உங்களை பயமுறுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பெரும்பாலும் ஊட்டி போன்ற மலை வாசஸ்தலங்கள், அவ்வவ்போது கருமேங்கள் ஒன்று திரண்டு சில்லென்ற காற்றுடன் லேசான மழை தூரல் இருந்தவாறே நிலப்பகுதிகளை ஈரப்பதத்துடன் பசுமையாக வைத்திருக்கும்.
அதிக மழை பொழிவு ஏற்படும் போது, ஏற்கனவே லேசான ஈரதன்மையுடன் இருக்கும் நிலப் பகுதிகள் அதிக மழை பொழிவால் திடீர் நிலச்சரிவு, திடீர் நீரோட்டம், வெள்ளப்பெருக்கு போன்றவை உருவாகலாம்.
அந்த மாதிரியான நேரத்தில், மலையின் ஊடேயான பயணம், இயற்கை அழகை ரசிக்க உயரமான பகுதிக்கு செல்வது போன்ற ஆபத்து, பாதுகாப்பற்ற செயல்கள் மேற்கொள்ளும் போது, நீங்கள் பல இன்னல்களை எதிர்கொள்ள நேரிடலாம்; தவிர்த்தால் நல்லது.
பருவ மழை காலத்தில், வழக்கத்தை விட அதிக மழை பொழிவு ஏற்படும். இந்த மாதிரியான நேரத்தில் பயணமும், தேவையற்ற வெளிப்புறத்தில் ஊர் சுற்றுவது நமக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.
பாதுகாப்பு பற்றிய முன்னெச்சரிக்கையை எப்போதும் நாம் ஒரு போதும் புறந்தள்ளக்கூடாது. அவ்வாறு நாம் செய்யும் போது, எதிர்பாராத நேரங்களில் பெரிய ஆபத்துகளில் சிக்க நேரிடலாம்.
இதுபோன்ற மலைவாசஸ்தலங்களுக்கு செல்லும் முன், உள்ளூர் மற்றும் வானிலை சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மட்டும் நம்புவதோடு, சரியான திட்டமிடல், நேரத்தில் நம் பயணத்தை தொடங்கினால், நம் பயணம் வாழ்வில் மறக்க முடியாது அனுபவமாக இருக்கும் என்பதில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சுய ஒழுக்கம், கட்டுப்பாடு அவசியம்
ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடை வாசஸ்தலங்களுக்கு நாம் தடையின்றி சென்று வந்த காலம் போய், அங்கு செல்லவே இ-பாஸ் எடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு நாம் ஆளாகியுள்ளோம்.
இதற்கு எல்லாம் நாம்தாம் காரணம் என்பதை, முதலில் உணர வேண்டும். பொதுவாக, மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட கோடை மாதங்கள் சிறந்த நேரம் என்பதால், அதிகப்படியான நபர்கள் ஒரே நேரத்தில் படையெடுப்பதால், கோடைவாசஸ்தலத்தின் பேரழகையும், அந்த இயற்கையை அப்படியே பேணவும், நீதிமன்றத்தின் உத்தரவுபடி அரசு முன் எடுத்திருக்கும் இந்த முயற்சி நான் வரவேற்கிறேன்.
என்னடா... இவன் முட்டாள்? இ-பாஸ் திட்டத்தை வரவேற்கிறேன் என்று சொல்லுகிறான் என, நீங்க நினைக்கலாம். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள், லட்சக்கணக்கான மக்கள் என, ஒரு பேரழகியின் சிறிய வீட்டுக்குள் நுழைய முயன்றால் அந்த வீடு தாங்கும்? என, நீங்களே நினைத்து கொள்ளுங்கள்.
அதுபோன்று தான் இந்த செயலை, இப்போது சுற்றுலா செல்கிறோம் என்ற பெயரில் நாம் அடிக்கும் கூத்து. அவ்வளவு நெரிசலில், நீங்களும் அமைதியான முறையில் பேரழகியின் அழகையும், அவளின் கூந்தலான வெண் மேகங்கள் ஊடே வீசும் குளிர் காற்றையும் ஒரு போதும் அனுபவிக்கவும், ரசிக்கவும் முடியாது.
இப்படியே, அந்த பேரழகியின் மீது, பிளாஸ்டிக், குப்பை, கூளங்களை வீசிவிட்டு சென்றால், நாளடைவில் அவளின் அழகு மங்குவதோடு, உங்கள் எதிர்கால சந்ததி, மலையின் வசிக்கும் பேரழகியின் அழகை ரசிக்க, தன் துணையுடன் சென்றால் அங்கு அவர்களுக்கு ஏமாற்றமும், குப்பை, கூளங்களின் துர்நாற்றத்துடன் கூடிய காற்றையும், குவிந்து கிடக்கும் குப்பையின் அலங்கோலமான அழகை மட்டுமே நீங்கள் காண முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பேணுதல் ஒன்றே கடவுள் நமக்கு அருளிய கொடையை பாதுகாக்க முடியும். மறக்காதீங்க... நம் சந்ததிக்கும் சொல்லி கொடுங்கள்.



Click it and Unblock the Notifications






