திவான் இ ஆம் அல்லது மக்கள் சந்திப்பு கூடம் என்று அழைக்கப்படும் இந்த மாளிகை ஷாஜஹான் மன்னரால் 1631 - 40 ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கிறது. மக்களை சந்தித்து குறைகளை கேட்பதற்காகவும், பிரதானிகளுடன் உரையாடுவதற்காகவும் இது பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஆக்ரா கோட்டையின் மையப்பகுதியில் நகினா மஸ்ஜித் எனும் மசூதிக்கு அருகில் இந்த திவான் இ ஆம் அமைந்திருக்கிறது. 49 அலங்கார தூண்களைக்கொண்டு எழுப்பப்பட்டிருக்கும் இந்த சிவப்புக்கல் கூடம் பாரசிக மற்றும் இந்திய பாணிகளை ஒன்றிணைத்த கட்டிடக்கலை முறைக்கான சான்றாக வீற்றிருக்கிறது.
இந்த கூடத்தின் வெளிப்பகுதி ஒன்பது பெரிய விதான வளைவுகளை கொண்ட கூரை அமைப்புடன் காட்சியளிக்கிறது. சிவப்புக்கற்கள் கொண்டு கட்டப்பட்டிருந்தாலும் சுண்ணாம்புச்சாந்து பூசி இழைத்திருப்பதால் வெண் பளிங்குக்கல்லால் கட்டப்பட்டது போன்று இது தோற்றமளிக்கிறது.
செவ்வக வடிவில் ஜரோகா பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் அரச அறையானது மூன்று வாசல்கள் மற்றும் விரிவான அலங்கார அம்சங்களுடன் காணப்படுகிறது.
அரியணை அறை என்ற பொருளைத்தரும் ‘தக்த் இ முராஸா’ என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது. அமைச்சர்கள் அமரும் மேடைப்பகுதி சலவைக்கல்லால் அமைக்கப்பட்டு ‘பைதக்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கிறது.