ஆக்ராவில் சுற்றுலாப்பயணிகள் அதிகம் விஜயம் செய்யும் இடங்களில் இந்த தாஜ் மியூசியம் எனப்படும் அருங்காட்சியகமும் ஒன்றாகும். குறிப்பாக தாஜ் மஹால் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் இந்த அருங்காட்சியகத்துக்கு அதிக எண்ணிக்கையில் விஜயம் செய்கின்றனர்.
1982ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் தாஜ் மஹால் வளாகத்தின் பிரதான வாயிலுக்கு வலப்புற உள்ள ஜல் மஹால் எனும் மாளிகையில் அமைந்திருக்கிறது. இரண்டு தளங்களை கொண்ட இந்த மாளிகையில் மூன்று காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த அருங்காட்சியகத்தில் 120 காட்சிப்பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எழுத்திப்பிரதிகள், குறு ஓவியங்கள், ராஜவம்ச சின்னங்கள், ஆயுதங்கள், பாத்திரங்கள், அலங்காரப்பொருட்கள் மற்றும் புராதன நாணய மாதிரிகள் ஆகியவை அடங்கும்.
எந்தக்கோணத்திலிருந்து பார்த்தாலும் சமாதி மேடைகளின் கால் பகுதி தெரியவேண்டுமென்பதற்காக வரையப்பட்ட சில வடிவமைப்பு வரைபடங்களின் மூலப்பிரதிகளும் இங்குள்ளன. ஏழு அதிசயங்களுள் ஒன்றான தாஜ் மஹாலின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட பல மூல ஆவணங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.
மேலும், ஷாஜஹான் மற்றும் மும்தாஜ் மஹால் ஆகிய இருவரது உருவ ஓவியங்கள் இங்கு அலங்காரமான சட்டகத்தில் பதிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பார்வையாளர்களுக்கு திறக்கப்படும் இந்த அருங்காட்சியகத்தில் சிறியதொரு நுழைவுக்கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.