பீமாஷங்கர் மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான புகழ்பெற்ற ஆன்மீகத்திருத்தலமாகும். இது பிரபலமான மலையேற்ற ஸ்தலமான கர்ஜாத்’திற்கு மிக அருகில் உள்ளது. பீமாஷங்கர் நகரத்தில் முக்கியமான புனித ஜோதிர்லிங்க கோயில் ஒன்று அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ஐந்து கோயில்கள் மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே இடம் பெற்றிருப்பதும் விசேஷமான தகவலாகும்.
புனே நகரத்துக்கு அருகில், கேட் எனுமிடத்திலிருந்து 568 கி.மீ வடமேற்கில், ஷிரதாவ்ன் எனும் கிராமத்தில் 3,250 அடி உயரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. கம்பீரமான சஹயாத்திரி மலைப்பகுதியில் இந்த கோயில் எழுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பீமாஷங்கர் ஸ்தலமானது பீமா ஆறு உற்பத்தியாகும் இடமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆறு தென்கிழக்காக பாய்ந்து இறுதியில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது.
ஒரு முக்கிய ஆன்மீக திருத்தலம்
புராண ஐதீகங்களின்படி சிவபெருமான் இந்த சஹயாத்திரி மலைகளின் மீது பீமா வடிவத்தில் தேவர்களின் விருப்பப்படி எழுந்தருளியதாக சொல்லப்படுகிறது. இங்கு திரிபுராசுரன் எனும் அசுரனுடன் நிகழ்ந்த கடுமையான போரின் இறுதியில் சிவபெருமான் அந்த அசுரனைக் கொன்றதாகவும் சொல்லப்படுகிறது.
அந்தப் போரின்போது ஏற்பட்ட வெப்பத்தில் இந்த பீமா ஆறு ஆவியாகிப்போனதாகவும், சிவனின் உடலிலிருந்து பெருக்கெடுத்த வியர்வை வெள்ளம் திரும்பவும் அந்த ஆற்றில் நீராய் பாய்ந்ததாகவும் புராணம் கூறுகிறது.
இங்கு அருகாமையில் கமலஜா எனப்படும் பார்வதி தேவியின் கோயிலும் உள்ளது. பீமாஷங்கர் கோயிலுக்கு அருகிலுள்ள மோட்க்ஷகுண்ட தீர்த்தம், குஷாரண்ய தீர்த்தம் மற்றும் சர்வ தீர்த்தம் போன்றவை தவறவிடக்கூடாத இதர ஆன்மிக அம்சங்களாகும்.
பீமாஷங்கர் ஸ்தலம் வெறும் ஆன்மிகத்தலமாக மட்டுமல்லாமல் இயற்கை ரசிகர்களின் விருப்பஸ்தலமாகவும் பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது. சஹயாத்திரி மலையின் இயற்கை அமைப்பு காரணமாக இந்த பகுதியில் ஏராளமான மலையேற்றத்தலங்கள் அமைந்துள்ளன.
இங்குள்ள வனப்பகுதி மற்றும் காட்டுயிர் சரணாலயங்களில் பல அரிய வகை பறவை இனங்களைக் காணலாம். இங்கு விசேஷமாக இந்திய காட்டு (ராட்சத) அணிலை தவறாமல் பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.
எனவே பீமாஷங்கர் சுற்றுலாத்தலமானது ஆன்மிக யாத்ரீகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சாகச சுற்றுலாப்பிரியர்கள் மத்தியிலும் பிரசித்தமான ஸ்தலமாக அறியப்பட்டுள்ளது. இயற்கை எழில் நிறைந்து வழியும் ஸ்தலமான இந்த பீமாஷங்கர் பிரமிக்க வைக்கும் அழகு மற்றும் பசுமைப்பாரம்பரியத்தை கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications