சத்தீஸ்கர் மாநிலம் இந்தியாவின் 10 வது பெரிய மாநிலம் எனும் அந்தஸ்தையும், மக்கள் தொகையில் 16 இடத்தையும் பெற்றிருக்கிறது. மின் உற்பத்தி மற்றும் இரும்பு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலங்களில் இதுவும் ஒன்றாகும். 2000ம் ஆண்டில் நவம்பர் 1ம் தேதி இந்த மாநிலம் மத்திய பிரதேசத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.
ராய்பூர் நகரத்தை தலைநகராக கொண்டுள்ள இம்மாநிலம் மத்தியபிரதேஷ், மஹாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேஷ், ஒடிஷா, ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களை தனது அண்டை மாநிலங்களாக கொண்டிருக்கிறது.
சத்தீஸ்கர் பிரதேசம் ஆதியில் தக்ஷிண் கோசலா என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த ராஜ்ஜியம் பற்றிய குறிப்புகள் ராமாயணம் மற்றும் மஹாபாரத இதிகாசங்களில் இடம் பெற்றிருக்கின்றன.
பிரசித்தமான சத்தீஸ்ஹரிணி தேவி கோயில் இம்மாநிலத்தில் 36 தூண்களுடன் அமைக்கப்பட்டு காட்சி தருகிறது. இந்த கோயிலின் பெயரிலேயே இம்மாநிலம் அழைக்கப்படுவதும் ஒரு குறிப்பிடவேண்டிய தகவலாகும்.
பருவநிலை மற்றும் புவியியல் அமைப்பு!
சத்தீஸ்கர் மாநிலத்தின் வடபகுதியிலும் தென்பகுதியிலும் மலைப்பாங்கான பூமி மிகுதியாக காணப்படுகிறது. பாதிக்கும் மேற்பட்ட இம்மாநிலத்தின் நிலப்பரப்பு இலையுதிர் காடுகளால் நிரம்பியுள்ளது.
இந்தோ கங்கப்படுகை மற்றும் மஹாநதி முகத்துவார படுகை போன்றவற்றை வாய்க்கப்பெற்றுள்ளதால் விவசாயத்துக்கேற்ற மண் வளத்தை இந்த மாநிலம் பெற்றுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் வெப்பமண்டலப் பருவநிலையை கொண்டுள்ளது. இங்கு கோடைக்காலத்தில் கடுமையான உஷ்ணமும் குளிர்காலத்தில் இனிமையான சூழலும் நிலவுகிறது.
மழைக்காலத்தில் சராசரியான மழைப்பொழிவையும் இம்மாநிலம் பெற்றுவிடுகிறது. பொதுவாக நவம்பர் முதல் ஜனவரி வரையிலான பருவம் சுற்றுலாப்பயணத்துக்கு ஏற்றதாக உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ரயில்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. மாநில நெடுஞ்சாலைகளோடு சேர்ந்து 11 தேசிய நெடுஞ்சாலைகள் இம்மாநிலம் வழியே செல்வதால் போக்குவரத்து வசதிகளுக்கு சிறிதும் குறைவில்லை.
முக்கிய ரயில் சந்திப்பான பிலாஸ்பூர் மற்றும் துர்க், ராய்பூர் ரயில் நிலையங்களிலிருந்து நாட்டில் எல்லா பகுதிகளுக்கும் ரயில் இணைப்பு சேவைகள் கிடைக்கின்றன. ராய்பூரில் உள்ள ஸ்வாமி விவேகானந்தா விமான நிலையம் இம்மாநிலத்தின் முக்கிய விமான நிலையமாக அமைந்திருக்கிறது.
சத்தீஸ்கர் மாநில சுற்றுலா சிறப்பம்சங்கள்!
சத்தீஸ்கர் மாநிலத்தின் பழமையான பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் அகழ்வுச்சான்றுகள் இங்கு நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வராய்ச்சிகளில் ஏராளமாக கிடைத்திருக்கின்றன.
இயற்கை எழில் அம்சங்களை பொறுத்தவரை இம்மாநிலத்தில் இல்லாததே இல்லை எனும் அளவுக்கு அனைத்தும் நிரம்பியுள்ளன. காட்டுயிர்வளம், வனப்பகுதி, மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் என்று இயற்கை ரசிகர்களை வசப்படுத்தும் சுற்றுலா அம்சங்களை இம்மாநிலம் தன்னுள் கொண்டிருக்கிறது.
இங்குள்ள சில முக்கியமான நீர்வீழ்ச்சிகளாக சிதிரகொடே நீர்வீழ்ச்சி, திரத்கர் நீர்வீழ்ச்சி, தம்ரா கூமர் நீர்வீழ்ச்சி, மண்டவா நீர்வீழ்ச்சி, கங்கேர் தாரா, அகுரி நலா, கவர் காட் நீர்வீழ்ச்சி மற்றும் ராம்தாஹா நீர்வீழ்ச்சி போன்றவற்றை சொல்லலாம்.
புராதன சின்னங்கள் மற்றும் பாரம்பரிய பின்னணி கொண்ட கோயில்கள் போன்றவற்றையும் சட்டிஸ்கர் மாநிலம் உள்ளடக்கியுள்ளது. அவ்வளவாக வெளியுலகிற்கு தெரியவராத பல்வேறு இடங்கள் இந்த மாநிலத்தில் சுற்றுலாப்பயணிகளுக்காக காத்திருக்கின்றன.
மல்ஹார், ரத்தன்பூர், சிர்பூர் மற்றும் சர்குஜா போன்ற ஸ்தலங்கள் இங்கு முக்கியமான புராதன தொல்லியல் ஸ்தலங்களாக அமைந்திருக்கின்றன.
இங்குள்ள பஸ்தார் ஸ்தலம் இயற்கை ரசிகர்கள் விரும்பக்கூடிய ஒரு அழகுப்பிரதேசமாகும். வெந்நீர் ஊற்றுகள் மற்றும் குகைகள் போன்ற சுவாரசியமான அம்சங்கள் இந்த ஸ்தலத்தில் காணக்கிடைக்கின்றன.
இவை தவிர இம்மாநிலத்தில் காட்டுயிர் சரணாலயங்களும் அதிகம் அமைந்திருக்கின்றன. ஜக்தல்பூரில் உள்ள இந்திரவதி தேசியப்பூங்கா மற்றும் கங்கேர்காடி தேசியப்பூங்கா, ராய்கரில் உள்ள கோமர்தா பாதுகாப்பு வனச்சரகம், பிலாஸ்பூரில் உள்ள பர்ணவபாரா காட்டுயிர் சரணாலயம் மற்றும் அசனக்மர் காட்டுயிர் சரணாலயம், தம்தரியில் உள்ள சீதாநதி காட்டுயிர் சரணாலயம் போன்றவை சட்டிஸ்கர் மாநிலத்திலுள்ள முக்கியான சரணாலயங்கள் மற்றும் இயற்கைப்பூங்காக்கள் ஆகும்.
மேலும், கொடும்ஸர் குகைகள், கடியா மலை, கைலாஷ் குகைகள் மற்றும் இதர குகை அமைப்புகள் போன்றவை புராதன சான்றுகள் மற்றும் ஆன்மிக யாத்திரை அம்சங்களுக்காக புகழ் பெற்றுள்ளன.
காவர்தா எனும் இடத்திலுள்ள போரம்தேவ் கோயில், ராய்பூரிலுள்ள சம்பரண், ஜாங்கிர் சம்பா எனும் இடத்தில் உள்ள தமுதாரா, தண்டேவாடாவில் உள்ள தண்டேஷ்வர் கோயில், மஹாமயா கோயில் போன்றவை இம்மாநிலத்தில் உள்ள பிரசித்தமான ஆன்மீக வழிபாட்டுத்தலங்களாகும். வருடம் முழுக்க ஏராளமான பக்தர்கள் மற்றும் பயணிகள் இந்த வழிபாட்டு ஸ்தலங்களுக்கு விஜயம் செய்கின்றனர்.
ஜக்தல்பூரில் உள்ல மானுடவியல் அருங்காட்சியகம் ஒன்றில் பஸ்தார் இனத்தாரின் நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தை விளக்கும் அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
இங்குள்ள பஸ்தார் அரண்மனை மற்றொரு முக்கியமான வரலாற்று கவர்ச்சி அம்சமாகும். இந்த ஜக்தல்பூர் அரண்மனை ஒரு காலத்தில் பஸ்தார் வம்சத்தின் ஆட்சிப்பீடமாக இருந்திருக்கிறது. தற்போது இது அரசாங்க பாதுகாப்பில் பராமரிக்கப்படுகிறது. இப்படி பல்வேறு சுற்றுலா அம்சங்கள் சத்தீஸ்கர் மாநிலம் முழுக்க நிரம்பியுள்ளன.
மக்கள், கலாச்சாரம் மற்றும் திருவிழாக்கள்!
சத்தீஸ்கர் சுற்றுலாவின்போது இம்மாநிலம் பற்றிய விரிவான புரிதலை பயணிகள் பெறலாம். இம்மாநிலத்தின் மக்கள் தொகையில் பெரும்பாலும் கிராமப்புற மக்களே இடம் பெற்றுள்ளனர்.
கோண்ட், ஹல்பி, ஹல்பா, கமர் மற்றும் ஒராவோன் பழங்குடிகள் இந்த மாநிலத்தில் அதிகம் வசிக்கின்றனர். ஹிந்தி பரவலாம இம்மாநிலத்தில் பேசப்பட்டாலும் சத்தீஸ்ஹர்ஹி எனும் ஹிந்தி துணை மொழியும் இங்கு வசிக்கும் கிராமப்பகுதி மக்களால் பேசப்படுகிறது. கோசாலி, ஒரியா மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளும் இம்மாநிலத்தில் பேசப்படுகின்றன.
இம்மாநிலத்தின் பெண்கள் கிராமப்பகுதியினராக இருந்தபோதிலும் சுதந்திர மனப்பான்மை கொண்டவர்களாகவும், வெளிப்படையான கருத்துப்பரிமாற்ற திறன் மிக்கவர்களாகவும் உள்ளனர்.
இங்குள்ள பல கோயில்களில் கூட பெண் தெய்வங்களுக்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. கிராமப்புற மக்களின் ஒரு பிரிவினர் மாயா மாந்தீரிகம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.
பல்வேறு இனப்பிரிவுகளை சேர்ந்த மக்கள் இம்மாநிலத்தில் வசிக்கின்றனர். இங்குள்ள சம்பரண் எனும் இடம் வல்லபச்சாரியார் எனும் குரு அவதரித்த இடம் என்பதால் குஜராத்திகளிடையே பிரசித்தமடைந்துள்ளது. ஒரிஸாவை ஒட்டி அமைந்துள்ளதால் அதனை ஒட்டிய எல்லைப்பகுதிகளில் இங்கு ஒரியா கலாச்சாரமும் சிறிதளவு கலந்துள்ளது.
இம்மாநிலத்தில் தயாராகும் கோசா பட்டுப்புடவைகள் மற்றும் சல்வார் உடைகள் இந்தியா முழுமைக்கும் புகழ் பெற்றுள்ளன. பந்தி, ரவாத் நச்சா, கர்மா, பண்ட்வாணி, சைத்ரா, கக்சர் போன்ற நாட்டுப்புற நடன வடிவங்களை சத்தீஸ்கர் மாநிலம் பெற்றிருக்கிறது.
நாடகக்கலை வடிவங்களிலும் இம்மாநில மக்கள் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக உள்ளனர். ‘மத்திய இந்தியாவின் அரிசிக்கிண்ணம்’ என்ற சிறப்புப்பெயருடன் அறியப்படும் இந்த மாநிலத்தின் சமையல் தயாரிப்புகளில் அரிசி மற்றும் அரிசி மாவு ஆகிய இரண்டும் முக்கியமாக இடம் பெறுகிறது. இம்மாநிலத்தில் தயாராகும் இனிப்புகள் மற்றும் கள் வகைகளும் தனித்தன்மையானதாக அறியப்படுகின்றன.
சத்தீஸ்கர் மாநிலத்தின் நகரச்சமூகம் பல்வேறு தொழில்துறை சார்ந்த செயல்பாடுகளின் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. மின்னுற்பத்தி, இரும்புத்தொழில், அலுமினியத்தொழில், கனிமத்தாது உற்பத்தி போன்ற துறைகள் இந்த மாநிலத்தின் வாழ்வாதாரங்களாக இயங்குகின்றன.
கல்வித்துறையிலும் இம்மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பல்வேறு பிரசித்தமான கல்வி நிறுவனங்கள் இம்மாநிலம் முழுதும் விரவி அமைந்திருக்கின்றன.