ராஜாரா கட்டிகே என்று அழைக்கப்படும் இந்த நினைவுச்சின்னம் கூர்க்கில் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இது கொடகு மஹாராஜாக்களின் சமாதி மண்டபமாகும். தொத்தவீர ராஜேந்திரா, லிங்கராஜேந்திரா மற்றும் ராஜகுரு ருதரப்பா போன்றோரின் சமாதிகள் இதில் இடம் பெற்றுள்ளன.
இங்கு இரண்டு ஒரே மாதிரியான சமாதி மண்டபங்கள் அருகருகே உள்ளன. இந்தோ சார்சனிக் பாணியில் கட்டப்ப்பட்டுள்ள இந்த இரண்டு மண்டபங்களும் தொத்தவீர ராஜேந்திராவுக்கும் அவரது மனைவிக்கும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் நான்கு புறமும் தூண் கோபுரங்களால் சூழப்பட்டு மையக் குமிழ் கோபுர அமைப்புடன் காணப்படுகிறது.
மேலும் வலது புறத்தில் ராஜா லிங்கா ராஜேந்திராவுக்காக 1820 ம் ஆண்டு அவரது மகன் சிக்கவீர ராஜேந்திராவால் கட்டப்பட்ட சமாதி மண்டபம் உள்ளது. இடது புறத்தில் ராஜகுரு ருத்ரப்பாவுக்காக 1834ல் கட்டப்பட்ட மண்டபம் காணப்படுகிறது.
இவற்றுக்கு அருகிலேயே இரண்டு ராஜ தளபதிகளுக்கும் சமாதி மண்டபங்கள் காணப்படுவது ஒரு ஆச்சரியமான விஷயமாகும். திப்பு சுல்தானை எதிர்த்து போரிட்டு மடிந்த பித்தன்ன போப்பு என்ற தளபதிக்கும் அவர் மகனுக்கும் இந்த சமாதி மண்டபங்கள் எழுப்பப் பட்டுள்ளன. இந்த கடிகே எனும் ஸ்தலம் மடிகேரியிலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது.