ஹொன்னம்மன கேரே கூர்க் பிரதேசத்தின் மிகப்பெரிய ஏரியாகும். வரலாற்று பின்னணியும் ஆன்மீக முக்கியத்துவமும் இதற்கு உண்டு. இது சோம்வார்பேட்டிலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஏரியைப்பற்றி கூறப்படும் புராணக்கதைப்படி ஹொன்னம்மன என்ற உள்ளூர் குலதெய்வம் இங்குள்ள மக்கள் நலனுக்காக தன் உயிரையே தியாக செய்ததாக சொல்லப்படுகிறது. ஏரியை ஒட்டி ஹொன்னம்மாவுக்காக ஒரு கோயிலும் உள்ளது. ஒவ்வொரு வருடமும் கௌரி திருவிழாவின் போது ‘பாகினா’ எனப்படும் விசேஷ பூஜை ஹொன்னம்மாவுக்காக படைக்கப்பட்டு அந்த படையல் பொருட்கள் ஏரியில் சமர்ப்பிக்கப்படுகின்றன.
ஹொன்னம்மன ஏரிக்கு இரு புறமும் கவிபெட்டா மற்றும் மோரிபெட்டா என்ற அழகான மலைகளாலும், அதிலுள்ள சிகரங்கள் மற்றும் காபி தோட்டங்களாலும் சூழப்பட்டுள்ளன. ஏரியைச்சுற்றிலும் இயற்கை எழில் நிரம்பி வழிவதால் இந்த ஏரிக்கு வரும் பயணிகளுக்கு அந்த இடத்தை விட்டு நகரவே மனம் வராது என்பதே உண்மை.
பாண்டவர்களால் உருவாக்கப்பட்டதாக ஐதீகமாக நம்பப்படும் குகைகள் இந்த மலைகளில் அமைந்துள்ளன. மேலும் ஹொன்னம்மன ஏரியில் படகு சவாரி, மீன் பிடித்தல் போன்ற பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்து காணப்படுகின்றன.
கௌரி பூஜையின் போது இந்த ஏரிக்கு பூஜை செய்ய புதுமண தம்பதிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.