கொடகு மாவட்டத்தின் மடிகேரி பகுதியில் உள்ள ராஜா சீட் மிக பிரசித்து பெற்ற ஒரு சுற்றுலாஸ்தலம் ஆகும். பலவித வண்ணமயமான பூக்களும் நீரூற்றுகளும் நிறைந்த ஒரு பூங்காவாகும். இந்த நீரூற்றுகள் இசைக்கேற்றவாறு அசைந்தாடும்படி வண்ண விளக்கு அலங்காரங்களுடன் காணப்படுகின்றன.
கொடகு மஹாராஜாக்கள் அடிக்கடி வந்து ஓய்வெடுக்கும் இடம் என்பதால் இந்த பூங்காவிற்கு இந்த பெயர் வந்துள்ளது. இந்த பூங்காவில் ஒரு மேடையின் மேல் நான்கு தூண்கள் மற்றும் அலங்கார வளைவுகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒரு விதானம் உள்ளது.
இந்த விதான மேடை கொடகு மஹாராஜாக்களுக்கும் இந்த பூங்காவுக்கும் இருந்த உறவை விளக்கும் நினைவுச்சின்னமாக விளங்குகிறது.
இந்த மேடையில் கொடகு மஹாராஜாக்கள் தங்கள் ராணிகளுடன் அமர்ந்து அதன் இயற்கையழகை ரசித்து மகிழ்ந்ததாக சொல்லப்படுகிறது. அடுக்கடுக்காக அமைந்து பூங்கா தோட்டங்களுடனும், சரிந்து கிடக்கும் பள்ளத் தாக்குகளும், பனிபடர்ந்த மலைக்காட்சிகளும் நிரம்பி வழியும் இந்த இடத்தை இயற்கை அழகை ரசிப்பதற்கென்று அந்த மஹாராஜாக்கள் தேர்ந்தெடுத்ததில் எந்த வியப்பும் இல்லை.
அருகிலுள்ள சிகரங்கள், பள்ளத் தாக்குகள் போன்றவற்றிலிருந்து இந்த பூங்கா அமைந்துள்ள இடம் சற்று உயரத்தில் இருப்பதால் சூழ்ந்துள்ள இயற்கை அழகை ரசிப்பதற்கு இந்த ராஜா சீட் பூங்கா மிக பொருத்தமாக இருக்கிறது.
சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் இந்த பள்ளத் தாக்கின் பின்னணியில் பார்த்து ரசிக்கும் அனுபவத்திற்கு இணை எதுவுமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அது ஒரு பரவச திளைப்பை அளிக்கிறது. இந்த பூங்காவில் குழந்தைகளுக்கென்று ஒரு குட்டி ரயில் வசதியும் உள்ளது.