டெல்லியில் பாலம் ஏர்ஃபோர்ஸ் விமான நிலைய வளாகத்தில் இந்த ஏர் ஃபோர்ஸ் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இந்திய விமானப்படை சம்பந்தப்பட்ட பல அம்சங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவிலேயே இது போன்ற ஒரே மியூசியம் இதுதான் எனும் பெருமையையும் இது பெற்றுள்ளது. இந்திய விமானப்படையின் தோற்றம் வளர்ச்சி மற்றும் விமானப்படை வீரர்களின் தியாக வரலாறு போன்றவற்றை எடுத்துக்காட்டும் வகையில் இந்த அபூர்வ அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த அருங்காட்சியகம் திறந்த வெளிக்கூடம் மற்றும் உள்கூடம் ஆகிய இரண்டு தொகுதிகளை அடக்கியுள்ளது. ஏராளமான காட்சிப்பொருட்கள் இந்த இரண்டு தொகுதிகளிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்கூட காட்சியரங்கு: இந்த காட்சிக்கூடத்தில் இந்திய விமானப்படை 1932ம் ஆண்டில் உருவாக்கப்பட்டதிலிருந்து படை வீரர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், சீருடைகள், புகைப்படங்கள் போன்ற ஞாபகப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்திய விமானப்படை எதிரி இலக்குகளை தாக்கும் காட்சிகளின் புகைப்படங்களும் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. மேலும், பாகிஸ்தான் லெஃப்டினண்ட் ஜெனரல் நியாஜி 1971ம் ஆண்டில் தோல்வியை ஒப்புக்கொண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் அபூர்வ வரலாற்று புகைப்படத்தையும் இங்கு காணலாம்.
இந்த உள்கூட அரங்கின் நீட்சியாக ஒரு விமான காப்புக்கூடாரம் (ஹேங்கர்) அமைந்துள்ளது. இதன் உள்ளே 15 வகையான ராணுவ விமானங்கள், தளவாடங்கள், வாகனங்கள், விமான துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஹேங்கருக்கு வெளியே சில பெரிய விமானங்களும் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளன.
திறந்தவெளி காட்சிக்கூடம்: இந்த தொகுதியில் ரேடார் சாதனங்கள், போரில் கைப்பற்றப்பட்ட எதிரி வாகனங்கள், போர் பதக்கங்கள் மற்றும் இதர பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவை மட்டுமல்லாமல் இங்கு நிர்மல்ஜித்சிங் செக்கான் எனும் திறமை வாய்ந்த இந்திய விமானிக்கான சிலையும் நிறுவப்பட்டுள்ளதை பார்வையாளர்கள் காணலாம். விமானம் ஓட்டுவதில் ஒப்பற்ற திறமையை கொண்டவராக விளங்கிய இவர் போர்க்காலத்தில் எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்திய சாகச தீரச்செயல்களை புரிந்தவர் ஆவார். பரம் வீர் சக்ரா விருது பெற்ற ஒரே விமானப்படை விமானி என்ற புகழையும் இவர் பெற்றுள்ளார்.
மேலும், பலவகையான பீரங்கிகள், துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், குழல்துப்பாக்கிகள், ராணுவத்துப்பாக்கிகள், வாட்கள், சீருடைகள் போன்றவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
புதன்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை காலை 10 மணி முதல் 5 மணி வரை இந்த மியூசியம் திறந்துள்ளது. திங்கள், செவ்வாய் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் இது மூடப்பட்டிருக்கும்