‘புராணா கிலா’ என்று அழைக்கப்படும் ‘டெல்லி பழைய கோட்டை’ டெல்லி நகரத்திலுள்ள மிக முக்கியமான சுவாரசியமான சுற்றுலா அம்சமாகும். டெல்லி நகரத்திலுள்ள கோட்டைகள் மற்றும் புராதன அமைப்புகளிலேயே மிகப்பழையானதாக கருதப்படும் இந்த கோட்டை ‘இந்திரபிரஸ்தா’ எனும் காவிய முக்கியத்துவம் வாய்ந்த நகர்ப்பகுதியில் வீற்றிருக்கிறது.
யமுனை நதிக்கரையில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் மஹாபாரத பாண்டவர்களால் நிர்மாணிக்கப்பட்டதுதான் இந்த ‘இந்திரபிரஸ்தா’ நகரமைப்பு என்று புராணிகக்கதைகள் கூறுகின்றன.
வரலாற்று ஆசிரியர்களும் இந்த புராணா கிலா எனும் கோட்டைச்சுவர் வளாக ஸ்தலத்தில் இந்திரப்பட்டணம் எனும் கிராமம் இருந்திருக்கவேண்டும் என்றே கூறுகின்றனர்.
வரலாற்றுக்காலத்தில் ஹுமாயுன் மன்னரின் தலைநகரமாக தின் பானா என்ற பெயரில் விளங்கிய இந்நகர்ப்பகுதியானது பின்னர் இந்தியாவின் முதல் ஆப்கன் வம்ச மன்னரான ஷெர் ஷா சூரி என்பவரால் ஷெர்கர் என்ற பெயரில் ஆளப்பட்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
ஹெமு என்றழைக்கப்பட்ட, இந்தியாவின் கடைசி ஹிந்து வம்ச மன்னரான ‘சாம்ராட் ஹேம சந்திர விக்கிரமாதித்யா’ 1556ம் ஆண்டில் அக்பரின் படைகளை தோற்கடித்து இக்கோட்டையில்தான் மன்னராக முடிசூட்டிக்கொண்டுள்ளார்.
இருப்பினும் ஹுமாயூன், ஷெர்ஷா மற்றும் விக்கிரமாதித்யா ஆகிய மூன்று மன்னர்களுக்குமே இந்த கோட்டை துரதிர்ஷ்டத்தையே அளித்திருக்கிறது. இவர்களின் ஆட்சியும் வாழ்க்கையும் குறுகிய காலத்தில் சரிவை சந்தித்து முடிவடைந்தன என்கிறது வரலாறு.
புராணா கிலா கோட்டை வளாகத்தை சுற்றிலும் பல முக்கியமான வரலாற்றுச்சின்னங்கள் அமைந்துள்ளன. ஷெர்ஷா மன்னரால் கட்டப்பட்ட - புராண கிலா கோட்டையைப் போன்றே காட்சியளிக்கும் கிலாயி குணா மசூதி, ஷெர் மண்டல் எனப்படும் இரண்டு அடுக்குகளைக்கொண்ட எண்முக கோபுரம், அக்பரின் வளர்ப்புத்தாயான மஹம் அங்கா என்பவரால் கட்டப்பட்ட ‘கய்ருல் மன்ஸில்’ எனும் மசூதி, ஷெர்கர் கோட்டையின் தெற்கு வாசலாக விளங்கிய ‘லால் தார்வாஸா’ எனப்படும் அமைப்பு – போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
பிரம்மாண்டமாகவும் உயரமாகவும் காட்சியளிக்கும் சுற்றுச்சுவர்களுடன், இருபுறமும் காவல் கொத்தளங்களை கொண்ட மூன்று நுழைவாயில்களுடன் இந்த புராணா கிலா கோட்டை கம்பீரமாக வீற்றிருக்கிறது.
முதல் பார்வையிலேயே தனது தோற்றத்தால் நம்மை மெய்சிலிர்க்க வைப்பதுடன் வரலாற்றுக்காலத்தை நோக்கியும் நம் உணர்வுகளை இந்த அதிபிரம்மாண்ட கோட்டை இழுக்கிறது.
18 மீட்டர் (ஏறக்குறைய 60 அடி) உயரத்துடன் 1.5 கி.மீ நீளத்துக்கு இந்த கோட்டையின் சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கம்பீரமான விதான வளைவுக்கூரை அமைப்புடன் கூடிய மூன்று பிரம்மாண்ட வாசல்களை இந்த கோட்டை பெற்றுள்ளது.
மேற்குப்பகுதியிலுள்ள படா தர்வாஸா, தெற்குப்பகுதியிலுள்ள ஹுமாயூன் வாசல் மற்றும் தெற்குப்பகுதியிலுள்ள தலாக்கி வாசல் என்பவையே அவை. இரண்டு அடுக்குகளால் ஆன இந்த மூன்று நுழைவாயில் அமைப்புகளுமே இரு புறமும் காவல் கோபுரங்களை கொண்டதாகவும், தூண்களுடன் கூடிய பலகணி மாடங்கள் மற்றும் ஜாலி ஜன்னல் வேலைப்பாடுகளை கொண்டதாகவும் காட்சியளிக்கின்றன.
இந்த புராணா கிலா கோட்டை வளாகத்தில் ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் சுற்றுலாப்பயணிகளுக்கெனவே பிரத்யேகமாக டெல்லி மாநகரின் வரலாறு பற்றிய ஒலி ஒளி காட்சிப்படம் திரையிடப்படுகிறது.