மனித மனத்தின் அறிவுக்கு இதுவரை புலப்படாத காலச்சக்கரத்தின் சுழற்சியின் ஊடே டெல்லி மாநர மண்ணில் பல்வேறு ஸ்தலங்களில் பல்வேறு மன்னர்களின் ஆட்சியில் எண்ணற்ற நினைவுச்சின்னங்கள் எழுப்பப்பட்டன.
அவற்றில் இந்த சஃப்தர்ஜங் சமாதி கடைசியாக உருவாக்கப்பட்ட கலையம்சம் மிளிரும் நினைவுச்சின்னமாக கம்பீரத்தோற்றத்துடன் வீற்றிருக்கிறது. இதன் உள்ளே வெண்ணிற சலவைக்கற்களால் ஆன சமாதிமாட அமைப்பு இடம்பெற்றுள்ளது.
1753ம் ஆண்டில் ஆவாத் பகுதியின் நவாப்’பாகிய ‘ஷியாஉத் தௌலா’ என்பவரால் அவரது தந்தையான சஃப்தர்ஜங் என்பவருக்காக இந்த பிரம்மாண்ட நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டிருக்கிறது.
அடக்கமான அற்புத தோற்றத்தோடு காட்சியளிக்கும் இந்த கல்லறை நினைவுச்சின்னம் ‘முகலாய கட்டிடக்கலையின் கடைசிச்சுடர்’ என்று வர்ணிக்கப்படுகிறது. ஒரு கணம் இந்த அமைப்பின் முன் நின்று அந்த வாக்கியத்தின் பொருளை அசை போடுவோமானால் இனம் தெரியா சோகம் நம்மை ஆட்கொள்வதை உணர முடியும்.
300 ச.மீ பரப்பளவு கொண்ட இந்த நினைவுச்சின்னத்துக்கான வாசல் பகுதி சிவப்பு மணற்பாறைக்கற்களால் நுணுக்கமான வடிவமைப்புகளுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பிரம்மாண்ட சின்னத்தில் காணப்படும் மைய அலங்கார விதான வளைவின் வேலைப்பாடுகள் பார்வையாளர்களை பிரமிப்பின் உச்சிக்கு கொண்டு செல்கின்றன. இந்த கட்டமைப்பின் உச்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் வெண்ணிற குமிழ் மாடக்கூரையை நோக்கியவாறு ஒன்பது சிறிய சமாதி மேடைகள் இதன் உட்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்றன. கடைசி முகலாயக் கட்டிடக்கலைச்சின்னம் என்னும் பெயருக்கேற்ப இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பிலும் அற்புதமான கலையம்சங்கள் ஜொலிக்கின்றன.
பிரம்மாண்டமான சுற்றுச்சுவர்கள், உயரமான நீருற்றுகள், ரம்மியமான முகலாயபாணி நந்தவனப்பகுதிகள் போன்றவை இந்த நினைவுச்சின்ன வளாகத்தில் இடம் பெற்றுள்ளன.
மோதி மஹால், ஜங்லி மஹால் மற்றும் பாத்ஷா பசந்த் போன்ற வித்தியாசமான பெயர்களைக்கொண்ட 16 மாட அமைப்புகளையும் பார்வையாளர்கள் இந்த நினைவுச்சின்ன வளாகத்தின் உள்ளே காணலாம்.
இப்படி தனித்தன்மையான அழகுத்தோற்றத்துடன் முகலாயர்கால கட்டிடக்கலை மேன்மைக்கு மற்றும் ஒரு சான்றாக வீற்றிருக்கும் இந்த சஃப்தர்ஜங் நினைவுச்சின்னமானது டெல்லி வரும் வரலாற்றுப்பிரியர்கள் மற்றும் கலாரசிகர்கள் தவறாமல் தரிசிக்க வேண்டிய ஒரு அம்சமாகும்.
சூரிய உதயம் துவங்கி சூரிய அஸ்தமனம் வரை வாரத்தின் எல்லா நாட்களிலும் இங்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நினைவுச்சின்னத்தை சுற்றியுள்ள பகுதி யாவும் இதன் பெயரிலேயே அழைக்கப்படுவதும் ஒரு ஆச்சரியமான உண்மையாகும்.